தொடர்கதை - காதலான நேசமோ - 09 - தேவி
அஸ்வின் சரவணனிடம் பேசியதை ஷ்யாமிடம் சொல்ல, ஷ்யாம் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு
“சரி விடு அஸ்வின். நாம சொல்றத விட, அவரே மித்ரா கிட்டே பேசும்போது தெரிஞ்சிக்குவார். ஆனால் நீ மித்ராவிடம் மட்டும் கொஞ்சம் பேசு. சரவணன் கிட்டே தயக்கம் இல்லாமல் பேச சொல்லு. அவள் பேசினால் தான் அவளோட டெய்லி ரொடீன் தெரிய வரும். அப்போ அவருக்கே புரிஞ்சு உன்கிட்ட மேலே டிடைல்ஸ் கேப்பார். அப்போ நீ புல்லா சொல்லிடு”
“சரி. ஷ்யாம். நீ சொல்ற மாதிரி வெயிட் பண்ணி பார்க்கலாம்” என்று கூறி வைத்து விட்டான்.
சரவணன் சொன்ன மாதிரி தினமும் அவன் சொன்ன டயத்துக்கு போன் செய்தான். முதல் சில நாட்கள் அவன் படித்தது, வளர்ந்தது எல்லாம் சொன்னவன், அடுத்த சில நாட்கள் அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி பேசினான்.
அன்றைக்கு இப்படித்தான் பேசிக் கொண்டு இருக்கும்போது, வெளியே டிவியில் அனிருத் பாட்டு ஓடிக் கொண்டு இருக்க சட்டென்று
“உங்களுக்கு அனிருத் பிடிக்குமா?” என்று கேட்டாள் மித்ரா.
“அனிருத்தா .. அது யார்?” என்று கேட்டான் சரவணன்.
“மியூசிக் டைரக்டர்”
“அவர பிடிச்சு எனக்கு என்ன ஆக போகுது?
“இல்லை அவர் பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“சினிமா எல்லாம் சுத்த வேஸ்ட். அதுக்கு உருப்படியா ஏதாவது வேலை வெட்டி பார்க்கலாம்”
“அப்போ நீங்க பொழுது போக என்ன பண்ணுவீங்க?”
“பொழுது போக்க எல்லாம் டைம் கிடையாது.. அப்பா ஆரம்பிச்ச பிசினஸ் பார்க்கவே எனக்கு டைம் போதல.. அது இல்லாம நான் வேற என் படிப்புக்கேத்த கன்சல்டன்ட் பிசினஸ் பார்த்துக்கறேன்.”
“ஒஹ்.. “ என்று மட்டும் கூறியவள், மனதில் ஷ்யாம் நினைவு வந்து போனது. இதை அத்தானிடம் சொல்ல வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, அதில் கவனத்தை வைத்தாள். பின்னே அவன் சொல்வது அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி ஆயிற்றே. இதை தெரிந்து கொள்வதில் அவளுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைதான்.
ஆனால் சரவணன் பேசுகிறான் என்று தெரிந்ததில் இருந்து, வீட்டில் ஆளாளுக்கு அட்வைஸ். அவரிடம் பொறுமையாய் பேசு. அவரை பற்றி தெரிஞ்சிக்கோ என்று. அதிலும் அவளின் பாட்டியோ அவளிடம் என்ன பேசினார்கள் என்று கேட்காவிட்டாலும் நீ ஒழுங்கா பதில் சொன்னியா? அவர் சொன்னத காதில் வாங்குனியா என்று பார்க்கும் போது எல்லாம் கேட்டு விடுவார். அதற்கு பயந்தே அவன் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டாள்.
அன்றைக்கு ஷ்யாம் பேசினான். என்று சரவணன் நான் பேசும் நேரத்தில் என்னிடம் தான் பேச வேண்டும் என்று மித்ராவிடம் சொல்லியிருந்தானோ, அதன் பின் ஷ்யாம் வாரம் இரு முறை தான் பேசுவான்.
மித்ரா எதுவென்றாலும் அவனிடம் தான் சொல்லுவாள் என்றாலும், அதற்காக தினமும் பேசுவார்கள் என்று கிடையாது. வாரம் ஒருமுறை கட்டாயம் மீட் செய்வார்கள், ஏதாவது சில முறை யாரவது வருத்தப்படும் படி சொன்னால் அப்போது ஷ்யாமிற்கு அழைப்பாள் மித்ரா.
எனவே எதுவும் வித்தியாசம் எல்லாம் யாருக்கும் தோன்றவில்லை. அது ஷ்யாமிற்கு கூட. ஆனால் இன்றைக்கு ஏனோ பேச வேண்டும் என்று தோன்ற, அவளுக்கு போன் செய்தான்
“ஹாய் அத்தான்”
“ஹாய் மித்து.. எப்படி இருக்க?
“நல்லா இருக்கேன்.. நானே இன்னிக்கு உங்களுக்கு பேசணும்னு நினைச்சேன்.”
“அட.. என்ன விஷயம்?”
“இல்லை .. இன்னிக்கு அவர் பேசினார்”
“அதான் டெய்லி பேசறீங்களே? அதில் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?
“அவர் பேசிட்டு இருக்கும்போது அனிருத் பாட்டு ஓடிச்சா” என்று ஆரம்பித்து அவனிடம் பேசியதை சொல்லி முடித்தவள்.
“அப்போ நினைச்சேன்.. அந்த தம்மாதுண்டு பிசினஸ்கே இவர் இப்படி சொல்றாரே. நீங்க , மாமா, அப்பா எல்லாம் எவ்ளோ பிசினஸ் பண்றீங்க.? உங்களுக்கு எல்லாம் நேரம் கிடைக்கலையா? அப்படின்னு நினைச்சேன் அத்தான்.”
“மித்தும்மா.. தொழில் செய்யறதுலே எதுவும் சின்னது, பெரிசுன்னு கிடையாது. அவங்க அவங்களுக்கு அவங்க தொழில் பெரிசுதான் புரியுதா”
“அவங்க பிசினஸ் பத்தி நான் எதுவும் சொல்லல அத்தான்.. ஆனால் அதுக்காக அத தவிர வேற எதையுமே செய்ய மாட்டேன்னு சொன்னாங்க பாருங்க அத எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியல”
“நோ வொர்ரி மா.. கல்யாணத்துக்கு அப்புறம் அவர் அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா ரீலீவ் ஆகி, குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணுவார்.. அப்போ அவருக்கும் மியூசிக் எல்லாம் பிடிக்க ஆரம்பிக்கும். ஓகேவா”
மித்ராவும் சிரித்துக் கொண்டே “ஓகே “ என்றாள். அதன் பின் சற்று நேரம் அவளிடம் பேசி விட்டு வைத்தான் ஷ்யாம்.