நாட்கள் நகர, திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருந்தது.
மற்ற வேலைகள் எல்லாம் பெரியவர்கள் பார்த்துக் கொள்ள, ஷாப்பிங் வேலையை மட்டும் இளையவர்கள் பார்த்தார்கள்.
மித்ராவிற்கு எடுத்தார்களோ இல்லையோ, மற்றவர்கள் எல்லாம் வேளைக்கு ஒரு டிரஸ் என்று எடுத்துக் கொண்டனர். அதோடு முதல் நாள் மெஹந்தி பங்க்ஷன் வைக்க வேறு ஆசைப்பட்டனர்.
அவர்கள் பக்கம் அது வழக்கம் இல்லை என மித்ராவின் பாட்டி மறுக்க , அவர்கள் சப்போர்டிற்கு ராம், மைதிலி இருவரையும் பிடித்தனர்.
முதலில் தயங்கிய இருவரும், பின் சின்னவர்கள் ஆசை பார்த்து பாட்டியிடம் பேச வந்தனர்.
வந்தவுடன் சற்று நேரம் கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டு இருந்துவிட்டு
“அத்தை.. பசங்க எல்லாம் மெஹந்தி ப்ரோக்ராம் வைக்கனும்னு ஆசைப்படறாங்க.. ஏற்பாடு பண்ணலாமா?
“அது சும்மா இந்த பிள்ளைங்க சேர்ந்து டான்ஸ் ஆடறது தானே. அப்படி எல்லாம் வைக்கனும்னு அவசியம் இல்லை”
“அப்படி இல்லை அத்தை. வீட்டில் இருக்கிற எல்லா பெண்களுக்கும் அந்த கல்யாண களை கொண்டு வர இந்த மாதிரி வச்சுருக்காங்க. “
“அது வடக்கதானே. இங்கே நம்ம பக்கமும் சாமி கும்பிடறது, அது இதுன்னு நிறைய வச்சுருக்கோம் தானே”
“அது எல்லாம் பெரியவங்க நமக்கு போதும். சின்னவங்களுக்கு அவங்களுக்கேத்த மாதிரி இருந்தாதானே அவங்க சந்தோஷமா இருப்பாங்க.”
“ஹ்ம்ம்.. இது எல்லாம் தேவையா தெரியல?
“அப்படி சொல்லாதீங்க அத்தை. நம்ம வீட்டிலே இது முதல் கல்யாணம். அவங்க ஆசைப்படியே செய்வோமே” என
மித்ராவின் பாட்டி ராமிடம் அத்தனை கெத்து காட்ட மாட்டார். அவன் தானே மொத்த சூர்யா க்ரூப்ஸ்க்கும் சேர்மன் . அது மட்டும் இல்லை தன் மகனுக்கும் அவன் மீது மிகுந்த மரியாதை. அதனால் அத்தனை சீக்கிரம் அவனிடம் மறுப்பு சொல்ல மாட்டார்.
அவனே இத்தனை தூரம் இறங்கி பேசவும் சரி என்று விட்டார். உண்மையில் பணமோ, இல்லை பிள்ளைகள் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களோ ராம் அவரிடம் பேசிருக்க மாட்டான். ஆனால் இது சடங்கு சம்பிராதயம் என்பதால் அவரிடம் பேசினான்.
அதோடு அவர் தான் மாப்பிள்ளை வீட்டினர் பற்றி சொன்னது என்பதால், இந்த விஷயங்களில் எல்லாம் அவரின் சம்மதம் இருந்தால்தான் , பின் எதுவும் பிரச்சினை என்றால் அவர்களை சமாளிக்க அவரால் தான் முடியும். எனவே சற்று இறங்கி பேசி பிள்ளைகள் கேட்டதை செய்து கொடுத்தான்.
இவர்கள் சென்று மெஹந்திக்கு சரி என்று சொல்லவே , சுமித்ராவும், சைந்தவியும் “யாஹூ” என்று கத்தினர்.
“தேங்க்ஸ் சோ மச்” என்று கூறிவிட்டு , இதை உடனே ஷ்யாமிடம் லைவ் ரிலே செய்ய சென்றனர். பின்னே இந்த ஐடியா கொடுத்ததே ஷ்யாம் தானே.
மற்ற டிரஸ் எல்லாம் எடுத்தவர்கள், கல்யாண புடவை எடுக்க மட்டும் நாள் அமையவில்லை. திருமணத்திற்கு முதல் வாரம் தான் நாள் அமைந்தது. இவர்கள் எல்லோரும் இன்னும் ஷ்யாம் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்து இருந்தனர்.
இன்னும் இரு நாளில் திருமண புடவை எடுக்க வேண்டும் என்று எண்ணியிருக்கையில், அன்றைக்கு சரவணன் பேசும்போது கேட்டாள்.
“திருமண புடவை சிகப்பு தானே எடுக்கணும்.. நான் எப்படி எடுக்கட்டும். ரொம்ப ஜரிகை வச்சு அந்த மாதிரியா.. இல்லை சிம்பிளாவா?”
“அது எல்லாம் அம்மா கிட்டே கேட்டுக்கோ” என்று விட்டான்.
“சரி.. ரிசெப்ஷன்க்கு காக்ரா இல்லை லேஹாங்கா வாங்கட்டுமா?
“ஹேய்.. அப்படி எல்லாம் வாங்கி என் மானத்தை வாங்கிடாத.. எங்க பக்கம் எல்லாம் எல்லாத்துக்கும் பட்டு புடவை தான் எடுப்பாங்க.. ஆனால் இப்போ அப்படி இல்லையே.. ஏதாவது டிசைனர் சாரி எடுத்துக்கோ “
அப்போதும் “நீங்க என்ன கலர் சூட் எடுத்து இருக்கீங்க.. அதே கலர்லே நானும் எடுக்கறேன். என்னோட கசின்ஸ்சும் அதே கலர் எடுப்பாங்க.. “
“அவங்க எல்லாம் ஏன் அதே கலர் எடுக்கணும்? அப்படி எல்லாம் யுனிபார்ம் போட்டுட்டு என்னால் போட முடியாது. அதோட என்னோட கலர்க்கு டார்க் சேட் தான் சூட் ஆகும். சோ நான் நேவி ப்ளூலே சூட் தைக்க கொடுத்து இருக்கேன்”
“ஒஹ். ஆனால் கல்யாணத்தில் அந்த கலர் யூஸ் பண்ணக் கூடாது சொல்வாங்களே”
“ஹ்ம்ம்.. எனக்கு ப்ளாக் இன்னும் சூட் ஆகும்.. கல்யாணம்னு தான் இந்த கலர் எடுத்தேன்”
“அப்போ நான் என்ன கலர் எடுக்கட்டும்?
“ஹ்ம்ம்.. நீ உனக்கு என்ன தோணுதோ அத எடு” என்றவன் “வெயிட்.. வெயிட்.. நீ அம்மா கிட்டேயே கேட்டுக்கோ.. அப்புறம் நான் தான் சொன்னேன்னு நீ சொன்னா, என்னை திட்டுவாங்க” என்று ஒதுங்கி கொண்டான்.