தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 10 - பூஜா பாண்டியன்
அந்த வார கடைசியில், ஒரு நாள் லீவு போட்டு மூன்று நாள் டூராக கிளம்பினார்கள் லாஸ் வேகாஸுக்கு விமானத்தில். எட்டு மணிநேர விமானம் என்பதால் இரவு விமானத்தில் டிக்கெட் எடுத்து இருந்தாள் உத்ரா. அபி வேலையில் இருந்து வந்ததும் கிளம்பினர்.
ஒரே நாட்டுக்குள் மூன்று மணி நேர வித்தியாசத்தில் இருந்தது லாஸ்வேகாஸ். அங்கு சென்றதும் முன்பே பதிவு செய்திருந்த ஸ்டார் ஹோட்டலில் சென்று குளித்து கிளம்பினர்.
லாஸ்வேகாஸ் இரவு நேரம் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று பகலில் சற்று தூரத்தில் இருக்கும் ஹூவர் அணைக்கட்டை பார்க்கச் சென்றனர். அங்கு எடுக்கப்படும் மின்சாரம் தான் லாஸ்வேகாஸ் முழுவதற்கும் சப்ளை ஆகின்றது. மிகப் பெரிய அணைக்கட்டாக இருந்தது.
அடுத்ததாக கிரான்ட் கானியன் பார்க்கச் சென்றனர். பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது. இரண்டு மலைகளுக்கு நடுவே கொலராடோ நதி ஓடிக் கொண்டிருந்தது. பெரிய பள்ளத்தாக்காக இருந்தது.
அங்கு ஸ்கை வாக் என்ற இடத்திற்க்கு சென்றனர். அங்கு மலையின் மேல் ஒரு ஓரத்தில் கட்டிடம் அமைக்கப்பட்டு, யூ ஷேப்பில் கண்ணாடியால் ஆன தளம் அமைத்து இருந்தனர். ஒரு கதவின் வழியாக சென்று அந்த கண்ணாடி தளத்தில், கீழே உள்ள பள்ளத்தைப் பார்த்தபடி நடந்து அடுத்த கதவின் வழியே வரும் படி இருந்தது.
முதலில் தைரியமாக வந்த உத்ரா, காலுக்கடியில் பெரிய பள்ளத்தைப் பார்த்து, லேசாக தலை சுற்றுவது போல் இருக்கவும் அபிமன்யுவின் கையை கட்டியாக பற்றியபடியே வந்தாள். அவனும் அவளை கிண்டலடித்து அவளது பயத்தைப் போக்கியப்படியே நடந்து வந்தான். ஒருவழியாக அதில் நடந்து முடித்து வந்ததும் அப்பாடா என்று இருந்தது உத்ராவிற்கு.
அடுத்ததாக அங்கிருந்த ஹெலிகாப்டரில் ஏறி, அந்த பள்ளத்தாக்கின் அடி வரை சென்றனர். அதில் இருந்து பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது. அங்கு கீழே இறங்கி அங்கிருந்த படகில் ஏறி அந்த கொலராடோ நதியில் பயணித்தனர். அதில் ஒருமுறை சுற்றி வந்ததும், மறுபடி ஹெலிகாப்டர் வந்து, மேலே அழைத்து வந்தது. எல்லா இடத்திலும் போட்டோ எடுத்தபடி அங்கிருந்து கிளம்பி இரவு லாச்வேகாசை அடைந்தனர்.
இரவு வண்ண மின்விளக்குகள் மின்ன ஜெகத் ஜோதியாக இருந்தது லாஸ்வேகாஸ். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலின் கீழ் தளத்தில் காஸினோ இருந்தது. பலவகையான சூதாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருதது. உத்ராவும், சுனைனாவும் அதனை வேடிக்கை பார்க்க, பால்கியும், அபியும் சில விளையாட்டுகளை விளையாடிப் பார்த்தனர்.
இரவு உணவிற்கு பின், வெளியே நடந்தபடி வேடிக்கை பார்த்தனர். அந்த ஊரே விழாக் கோலம் பூண்டு இருந்தது. எப்பொழுதுமே இப்படித் தான் இருக்குமாம்.
“ஹாய் சித்து” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால், அங்கு காப்ரிலா இருந்தாள்.
இவர்களை நோக்கி வந்தவள் அபியை அனைத்துக் கொண்டாள். அவளது நடையே சற்று தள்ளாட்டத்துடன் இருந்தது. குடித்து இருப்பாள் போலும்.
“நீ யாரோடு வந்த காப்ரிலா? அபி அவளிடம் கேட்க...
“வித் மை பிரண்ட்ஸ்” என்றாள்.
அப்பொழுதும் அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. அபியின் மேலேயே சரிந்தாள். அவளிடம் எந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறாய் என்று கேட்டு, “மாமா நீங்க நம்ம ஹோட்டலுக்கு போங்க, நான் இவளை, அவளது ஹோட்டலில் விட்டு வருகிறேன். இவள் என் தோழி தான்” என்று கூறி அங்கிருந்த ஒரு டாக்சியை அழைத்து அவளுடன் கிளம்பிச் சென்றான் அபி.
உத்ராவிற்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் அப்பா, அம்மாவின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவர்களுடன் தங்கள் ஹோட்டலை அடைந்தாள்.
“யாரு உத்ரா அது? அபிக்கு எதுக்கு இந்த வேண்டாத பழக்கம் எல்லாம். அந்தப் பெண்ணைப் பார்த்தால் குடித்து இருப்பாள் போல் உள்ளது.” என படபடவென பொரிந்து தள்ளினார் பால்கி.
“அப்பா, இந்த ஊரில் பெண்கள் குடிப்பது என்பது சகஜம். கேப்ரிலா அவருடன் முன்பு வேலை பார்த்தப் பெண். அதனால் அவளுக்கு அவர் உதவ நினைக்கிறார் அவ்வளவு தான்.” என்று அப்பாவிற்கு சமாதானம் கூறினாள்.
“உதவுவதோடு நின்றால் சரி தான்.” முனுமுனுத்தப் அவர்களது அறைக்கு சென்றார் அப்பா பால்கி.
சுனைனா எதோ கேட்க வாய் திறந்த பொழுது, “ அம்மா ப்ளீஸ் நீங்களும் ஏதாவது ஆர்ம்பிகாதிங்க. எனக்கு தூக்கம் வருது. காலையில் பார்க்கலாம். குட் நைட் .” என்று கூறி அவர்கள் அறைக்கு அனுப்பி விட்டு, துணியை மாற்றக் கூட மனம் இன்றி படுக்கையில் விழுந்தாள் உத்ரா. உறக்கம் தான் வர மறுத்தது.
இரண்டு மணி நேரத்திற்கு பின்பே அபிமன்யு வந்து சேர்ந்தான். கதவை திறந்த உத்ராவைப் பார்த்து “இன்னும் டிரஸ் கூட மாத்தலையா உத்ரா?” என்று கேட்டப்படி உடை மாற்றி வந்து படுத்தான்.
அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தப்படி “கேப்ரிலா பற்றி என்னிடம் ஏதும் மறைகிறீங்களா அபி” என்ற உத்ராவின் கேள்விக்கு பதில் கூறக் கூட முடியாமல் அசதியில் உறங்கி இருந்தான் அபி. அதற்கும் கோபம் வந்தது உத்தராவிற்கு.