தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 03 - சுபஸ்ரீ
ஆதியும் அந்தமுமாய் பத்மாவதி ஆகாஷ் மற்றும் லலிதா வாழ்க்கையில் நிறைந்திருந்தார். அவர்களின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் புன்முறுவலுமாய் தோல்விக்கு பின்னால் கை தூக்கிவிடும் தோழியாய் பிரதிபளிக்கிறார். தாய் சேய் என்ற உறவையும் தாண்டி இன்னமும் பெயர் வைக்கபடாத ஓர் உறவும் உணர்வும் அவர்களுள் சுழன்றுக் கொண்டிருக்கிறது. பத்மாவதிக்கும் ராமமூர்த்தியும் குழந்தைகளுமே உலகம்.
“உங்களுக்கு எப்பவுமே ஆகாஷ்தான் முக்கியம்” என லலிதா பத்மாவிடம் குறை சொல்வதுண்டு.
“அப்பாக்கு என்னைவிட உன்னதான் ரொம்ப பிடிக்கும்.” என ஆகாஷ் அக்காவை திசைதிருப்பிவிடுவான்.
பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அனைவரையும் சமமாகதான் பாவிப்பார்கள். ஆனால் இந்த செல்ல வாக்குவாத்ததால் கொஞ்சம் போனஸ் சந்தோஷம் குடும்பத்தில் பெருகும்.
“பத்மா என் பைல் எங்க? டை எங்க?” என ராமமூர்த்தி கேட்டால்
“அப்பா நான் எடுத்து தரேன் . . அம்மா எத்தன வேலை செய்வாங்க பாவம்” என ஆகாஷ் ஓடிவந்துவிடுவான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பத்மாவை அமர சொல்லி தான் சமைப்பான். அவர்கள் வட்டத்தில் சிலர் அவனை ஏளனம் செய்வதுண்டு.
“டேய் உன்ன பெத்தாங்களா செஞ்சாங்களா?” “உன்னால எனக்கு சோம்பேறினு பேரு” என லலிதா புலம்பல்ஸ் அடுக்கப்படும்.
“பெண்ணுக்கு ஆண் சரி சமம்” என அவனிடமிருந்து மாற்றி பதில் வரும்.
இது தான் உலகம் பெண்ணுக்கு உதவினால் அசமஞ்சம் இல்லையேல் ஆண்ஆதீக்கம். முதலில் இந்த சொற்களுக்கு ஆகாஷ் குழம்பினான். பின்னர் அவைகளை கண்டுக் கொள்ளாமல் விடவே மற்றவர் சொற்களுக்கு அவன் மனதில் இடம் இல்லாமல் போகவே அவை வெளிநடப்பு செய்தது.
“கண்ணா அம்மாவ இப்ப மாதிரியே எப்பவும் எந்த நிலையிலையும் பாத்துக்கணும்” என சில சமயங்களில் ராமமூர்த்தி சொல்வதுண்டு. இதையே ராமமூர்த்திகாக பத்மா சொல்வதும் உண்டு. இதையெல்லாம் கேட்டு “நீங்க கவலப்படாதீங்கப்பா இவன் கல்யாணத்திற்கு அப்புறம் கூட அம்மா வேணும்னுதான் அடம்பிடிப்பான். அம்மாவையும் உங்களையும் விட்டு போகமாட்டான். என்ன கட்டவிரல வாயில வெக்கமாட்டான் அவ்வளோதான்” லலிதா ஆகாஷை அநியாயத்திற்கு டேமேஜ் செய்வாள். சென்டிமெண்டல் பேச்சு இவர்களிடம் அகப்படாது.
மகனை குறைகூறினதல் பத்மாவதி குரல் சீற்றம் பெரும் “லலிதா”. அத்தோடு ஆகாஷ் அவள் காதை திருக துரத்துவான்.
“பார்றா அம்மா கோபம்” “டேய் வேணா” என லலிதாவின் கிண்டல் கண்டிப்பாக பூக்களின் இடிமுழக்கத்தோடு முடியும்.
லலிதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த நேரம்.
“இந்த பையன பாரு . . பொண்ணு பிடிச்சிருக்குனு அம்மா அப்பாவ கேட்காமயே சொல்லிட்டான். மரியாதையே தரமாட்டானா? இவன் வேணாம்”
“பையன் ரொம்ப ஒள்ளியா இருக்கான்?”
இப்படி ஆகாஷ் வேண்டுமென்றே ல்லிதாவை வெறுப்பேற்றினான்.
“கண்டிப்பா நான் ஔவையார் தான் . . எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது.”
“ம்ம் பாக்கலாம் பாக்கலாம் . . எனக்குனு ஒரு அடிமை மாட்டாமயா போகபோறான்” என லலிதாவும் பொய்யாக சிணுங்குவாள்.
ஆனால் பத்மாவதி ஆகாஷை அடக்கி “நீ சும்மா இருடா” என ராகவ்வை தேர்ந்தெடுத்தார். வீட்டில் அனைவருக்கும் ராகவ்வை பிடித்துப்போனது. பயோ டெக் முடித்து அமெரிக்காவில் வேலை. இறுதியில் ராகவ் என்ற அடிமை லலிதாவிற்கு சிக்கினான்.
லலிதா ராகவ் திருமணம் இனிதே முடிந்தது. யு.எஸ். சென்றதுமே அவளுக்கு எளிதாக வேலை கிடைத்துவிட்டது. ஹரிஹரன் என்ற குட்டி பையன் பிறந்து அவர்கள் வாழ்வை இன்னமும் மகிழ்ச்சியாக்கினான்.
ஆகாஷ் முதலில் இருந்தே சட்டம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். சட்டப்படிப்புக்கு முன் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். ஆதலால் இந்தியாவில் உளவியல் தொடர்பான படிப்பை முடித்தான். பின்னர் யு.எஸ்சில் சட்டப்படிப்பிற்கான LSAT என்னும் நுழைவு தேர்வு எழுதி சட்டப் படிப்பை முடித்தான். அதன் பின்னர் அங்கேயே வேலை என அமர்ந்துவிட்டான்.
தற்பொழுது ஆகாஷ்ற்கு பெண் பார்க்க அவன் பெற்றோர் ஆரம்பித்துவிட்டனர். பத்மாவதியும் அவர் கணவர் ராமமூர்த்தியும் டூரிஸ்ட் விசாவில் முதல் முறையாக அமெரிக்கா வந்துள்ளனர். டூரிஸ்ட் விசா விதிமுறைப்படி அவர்கள் ஆறு மாதம் மட்டுமே அமெரிக்காவில் வசிக்க முடியும்.
முதலில் லலிதா டெலிவரி சமயம் வர இருந்தார்கள். ஆனால் அப்பொழுது பத்மாவதி உடல் நலம் சரியில்லாமல் போன காரணத்தால் வர இயலவில்லை. அதன்பின் ராமமூர்த்தியின் வேலை விடவில்லை. தற்பொழுதுதான் வர முடிந்தது.