அவள் காபி கோப்பையை நீட்ட வாங்கியவன் “தேங்க்ஸ்” என காபியை மெல்ல பருகினான். இன்னமும் காபி கப்பில் இருந்து ஆவி வெளி வந்துக் கொண்டிருந்தது.
“சொல்லுங்க சாரு என்ன பிராப்ளம்?”
சாரு நாற்காலியை அவன் முன்னால் வசதியாக போட்டுக் கொண்டாள். இருவருக்கும் இடையே கண்ணாடி காபி டேபிள் தெளிந்த நீரோடைப் போல தடையாய் இருந்தது. முன்னர் இருந்த தயக்கம் இறுக்கம் அவளிடம் தற்பொழுது இல்லை என்பதை ஆகாஷ் கவனிக்க தவறவில்லை.
தொண்டையை செருமிக் கொண்டவள் “எனக்கு ரொம்பவும் நெருக்கமான ஒரு நபர் . .எனக்கு மட்டுமே சொந்தமானவர் அவரை இப்போ வேற குடும்பம் தன் வசம் வெச்சிருக்காங்க” என்றாள்.
ஆகாஷ் அவளின் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்தான். குறுக்கிடாமல் அவள் முடிக்கட்டும் என காத்திருந்தான்.
“அவங்க எனக்கு திரும்ப வேணும். அவங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.” என ஸ்திரமாக சொன்னாள்.
“இப்போ அவங்க எங்க இருக்காங்க?” அவன் கேட்க
“இங்கதான் நியூயார்க்ல”
“அவங்க அட்ரஸ் கான்டாக்ட் நம்பர் போட்டோ எதாவது இருக்கா?”
“போட்டோ இருக்கு” என அவனிடம் நீட்டினாள். அது கொஞ்சம் பழைய போட்டோ.
வாங்கியவன் அதையே கூர்ந்து நோக்கினான். மௌனம் அங்கே நீடிக்க . . காபி கப்பை டேபிளில் வைத்தான். அது ணங்கென்று ஒசை கிளப்பியது.
அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். இரெண்டொரு நொடிகள் கழிந்தது . . பின் புன்னகை தவழ “வெரி சாரி சாரு . . நான் உங்களுக்கு எதிர்கட்சி”
“ஆகாஷ் நிச்சயமா நீங்க தோத்து போயிடுவீங்க” அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டபடியே பேசினாள். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
கொஞ்சம் பெரியதாவே சிரித்தவன் “என்கிட்ட இதெல்லாம் நடக்காது சாரு. இந்த மாதிரி நிறையவே பாத்தவன் நான். எனிவே குட்லக்” என தோளை குலுக்கி கிளம்பினான்.
கதவு தடால் என்று சாத்தப்பட்டது இரண்டொரு நொடியில் அவன் கார் ஸ்டார்ட் செய்யும் சத்தமும் கேட்டது.
இதையெல்லாம் எதிர்பார்த்ததுப் போல சாரு ஒரு பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்தாள். புகைப்படத்தை கையில் எடுத்தவள் முகம் அனலாய் கொதித்தது.
காரை ஓட்டிய ஆகாஷிற்கு எரிமலையின் லாவாவை மனம் கக்கியது. சாருவை நரசிம்மரைப் போல கிழித்து எரிந்துவிட துடித்தான். கோபம் ஆவேசம் குழப்பம் இவை நல்ல சிந்தனைகளுக்கு எதிரி. ஆதலால் தன்னை சமாதானப்படுத்த முயற்சித்தான்.
சாரு எதோ நோக்கத்துடன் இதில் உள்ளாள். “யார் அவன்? எப்படி கேட்பது? மனதில் இருந்த சந்தோஷத்தை மொத்தமாக சாரு வடித்துவிட்டாள்.” மனம் அலைபாய்ந்தது.
தன் வீட்டின் முன் காரை நிறுத்தியவனுக்கு அந்த புகைப்படமே மீண்டும் மீண்டும் மனதில் படமெடுத்தது. அந்த புகைப்படத்தில் தன் தந்தை அல்லாது வேறு யாரோ ஒரு வாலிபனுடன் மாலையும் கழுத்துமாக திருமணக் கோலத்தில் நாணத்துடன் தன் அன்னை பத்மாவதி.
தொடரும் . .
{kunena_discuss:1199}