தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 04 - சுபஸ்ரீ
இதயத்தின் ஒரு மூலையில் சாரு காட்டிய புகைப்படம் ஆகாஷை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது. மனம் கொந்தளித்தது கனத்தது.
“சாருவிடம் எப்படி இந்த புகைப்படம் வந்தது?
சாருவிற்க்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?
புகைப்படத்தில் தாயின் அருகில் நிற்கும் அவன் யார்?”
இப்படி பல கேள்விகள் அவனை சிதைத்தன.
குழப்பமான தருணங்களில் ஆகாஷ் மனதை வருத்தும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தையோ மனிதரையோ எதுவாயினும் சிந்திக்காமல் விட்டுவிடுவான். மேலும் மேலும் சிந்தித்தால் சிக்கல் சீர்படாது. சில சமயங்களில் நன்றாக உறங்கி விடுவான். உறங்கி எழுந்தபின் மனதில் ஒருவித தெளிவு பிறக்கும்.
ஆனால் இந்த விஷயத்தில் அவனால் அப்படி இருக்க இயலவில்லை. அவன் மனதை அடக்கமுடியாமல் தவித்தான். தன் தாய் அல்லவா இதில் சம்பந்தபட்டிருக்கிறாள். மனம் தன் இஷ்டத்துக்கு குப்பையை கொட்டியது. பாசம் அன்பு இவை அவனை சிந்திக்கவிடாமல் பாசவலையில் கட்டிப் போட்டது.
ஆனால் ஆகாஷ் சிலவற்றில் உறுதியாக இருந்தான். சாருவின் வார்த்தைகளை முழுமையாக ஏற்கக்கூடாது. அவள் சொற்களைக் கொண்டு தன் அம்மாவை எதுவும் கேட்கக் கூடாது. வீட்டிற்க்கு தெரியாமல் இதற்கு தீர்வுக் காண முடிவெடுத்தான்.
சாருவைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் அடுத்து அடி எடுத்து வைக்க கூடாது என தீர்மானித்தான்.
சாருவை சந்தித்த பின் பலவாறு சிந்தித்தபடி வீட்டிற்கு வந்தான். அவன் அறைக்கு சென்றுவிட்டான். பத்மாவதி இதை கவனித்தார். அவன் முகத்தை வைத்தே அவன் மனதை அறிபவர்.
இரவு உணவை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றார். உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை மொய்த்துக் கொண்டிருந்தான்.
பத்மாவதி அவன் அருகில் அமர்ந்து அவனுக்கு உணவு ஊட்ட தொடங்கினார். அவனும் மறுக்காமல் சாப்பிட்டான். “எத்தன வேலை இருந்தாலும் ஒழுங்கா சாப்பிடணும் கண்ணா . . கவலப்படவாவது தெம்பு வேணும்” என எதையோ மனதில் வைத்துப் பேசினார். அவன் சரியாக கவனிக்கவில்லை.
அப்பொழுது . .
“ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைதாங்கி
நீபட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் உழைத்தாலும் எடுத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா”
என லலிதா ஒன்பது கட்டையில் பாட
”ஐயோ லலிதா” என கத்தி காதை மூடினான் “முடிலடி ப்ளீஸ் பாடாத . . வேலை செஞ்சிட்டு இருக்கேன்ல” என்றான் ஆகாஷ்.
செய்ய வேண்டாம் என தடுக்கும் விஷயத்தைதான் லலிதா செய்தே தீருவாள். அவன் எப்படி தொடங்கலாம் என நினைத்ததை அழகாக லலிதா தொடங்கிவிட்டாள்.
காஞ்சனாவும் லலிதாவும் நெருங்கிய நண்பிகள். காஞ்சனா தன் பள்ளியில் நடப்பவற்றை லலிதாவிடம் கூறுவாள். அப்படி எதாவது சாரு பற்றிய தகவல் இருக்கிறதா என தெரிந்துக் கொள்ளவே இந்த நாடகம். அதிலும் தானாக மீன் வந்து சிக்கியதில் ஏக குஷி.
“ஏன்டா சிடுவேஷன் சாங் . . அதுவும் சித்ரா வாய்ஸ்ல பாடின உனக்கு கிண்டலா இருக்கா?“
“ஏது சித்ரா வாய்ஸ்சா . .நீ பாடினதா? கொன்னுடுவேன்” மேலும் அவளை வேண்டுமென்றே சீண்டினான்.
“அப்படிதா பாடுவேன் . .அம்மா என்று” மீண்டும் ஆரம்பித்தாள்
“நிறுத்து நிறுத்து” என தடுத்தவன் “நீ பாடாம இருந்தா உனக்கு நிறைய டாலர் தரேன்” என்றான்
கரண்ட் கட் ஆன மாதிரி பட்டென பாட்டை நிறுத்தியவள் “டாலரா வேண்டவே வேண்டாப்பா” என்றாள்.
வேலட்டை அவள்முன் வைத்தான். லலிதா அதை தொட கூட இல்லை.
“ஏண்டி தம்பி ஆசையா குடுக்கிறான் வாங்கிக்க?” என பத்மாவதி கூற
“ஆஹா . . உன் புள்ள அரும தெரியாம பேசாதீங்க அம்மா . . அதுக்குள்ள முருகன் டாலர், பெருமாள் டாலர், லட்சுமி டாலர் இதெல்லாதான் இருக்கு. மொக்க பழைய ஜோக்க இன்னும் ஓட்டிட்டு இருக்கான்.”
பத்மாவதி அப்படியா என்ற பாவணையில் ஆகாஷை முறைத்தார். இல்ல என பாவமாக தலையசைத்தவன் வேலட்டை திறந்தான். உள்ளே நூறு டாலர் எட்டிப் பார்த்தது.
அதை லலிதா எடுக்க முயல அவன் லாவகமாக பறித்தான்.
“உன் பிரெண்ட் காஞ்சனா டான்ஸ் ஸ்கூல்ல சேர என்ன பீஸ்?” மெதுவாக முதல் கேள்வியை தொடுக்க
“எதுக்கு? நீ சேர போறியா?“ விவகாரமாய் பதில்