தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35 - ஜெய்
துப்பாக்கி சுடும் ஓசை கேட்டவுடன் பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்த நீதிபதி அங்கு நரேஷ் தன் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு அலறலுடன் குனிவதை பார்த்து எழ, அடுத்த குண்டு மிகச்சரியாக அவன் நெற்றிப்பொட்டில் பாய்ந்தது....
இவை அனைத்தும் இரண்டு நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.... சட்டென்று சுதாரித்த காவலர்கள் ஓடிவந்து சுட்டவரை பிடித்து அவர் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினர்....
சுட்டவர் யார் என்று பார்த்த நீதிபதி மறுபடி அதிர்ந்தார்... அங்கு இருந்தது நரேஷின் மனைவி...
சற்று நேரத்திற்கு அந்த வளாகமே அமளிதுமளிப்பட்டது.... நீதிபதியை காவலர்கள் பாதுகாப்பாக அடுத்த அறைக்கு அழைத்து சென்றனர்...
நீதிமன்ற வளாகத்திலிருந்த மருத்துவர் வந்து பரிசோதித்து, நரேஷ் இறந்துவிட்டதாக அறிவித்தார்....
இரண்டு காவலர் நரேஷின் மனைவியை பிடித்திருக்க நரேஷின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.....
இந்த அமளிகள் எல்லாம் முடிய... அனைவரின் கண் முன் நடந்த கொலை என்றாலும் நரேஷின் மனைவி, அவர் தரப்பு வாதத்தை சொல்ல அனுமதிப்பதாக நீதிபதி கூற, அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோர்ட் மீண்டும் கூடியது....
நரேஷின் மனைவி தனக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் தேவையில்லை என்று தானே வாதாட ஆரம்பித்தாள்....
“எதுக்காகம்மா உங்க கணவரை சுட்டீங்க....”
“அந்த மிருகத்தை என் கணவர்ன்னு சொல்லாதீங்க.... மிருகம்ன்னு சொல்றது கூட தப்புதான்.... அது மிருக ஜாதியை கேவலப்படுத்தறா மாதிரி....”
“சரி நரேஷை எதுக்காக சுட்டுக்கொன்னீங்க...”
“இந்த மாதிரி ஜென்மம் எல்லாம் இருந்து என்ன சாதிக்கப்போறாங்க நீதிபதி அவர்களே.... அதைவிட செத்து ஒழியறதே மேல்....”
“இது என்ன விதமான பதில்... இந்த நீதிமன்றத்துக்கு அப்படின்னு ஒரு மதிப்பு இருக்கு.... அதுக்கு பங்கம் வராத அளவுக்கு உங்க பதில் இருக்கணும்... எதுக்காக நரேஷை சுட்டீங்க.....”
“நான் சொன்ன பதிலில் தப்பு இருக்கறதா தெரியலை யுவர் ஹானர்.... இப்போ உங்க தீர்ப்பு அவனுக்கு பாதகமாகவே வந்தாலும் அடுத்து அவன் சுப்ரீம்கோர்ட் போவான்.... ஏற்கனவே அங்க இருக்கற வழக்கை நடத்தவே ஆள் இல்லை... அதனால வழக்குகள் எராளமா தேங்கிக் கிடைக்குதுன்னு சொல்றாங்க... இவன் கேஸ் எடுக்க எத்தனை நாளோ இல்லை எத்தனை வருஷம் ஆகுமோ.... அதுக்குள்ள இவன் ஜாமீன்ல ரொம்ப ஈசியா வெளிய வந்துடுவான்... வந்து இன்னும் கொஞ்சம் அட்டூழியம்தான் பண்ணுவான்... இதெல்லாம் நடக்கவேண்டாமேன்னுதான் உங்களுக்கு முன்னாடி நான் தீர்ப்பு எழுதிட்டேன்....”
“இப்படி ஒரு ஒருத்தரும் சட்டத்தை கையில எடுக்க இது என்ன சினிமாவா.... அப்பறம் நாங்கல்லாம் எதுக்கு.... நீதிமன்றம், நீதிபதி ஒருத்தரும் தேவையில்லையே....”
“இந்த மாதிரி வழக்குகள்ல அவங்க குடும்ப உறுப்பினரே தண்டனை தருவதுதான் அதிக பட்ச தண்டனையா நினைக்கறேன் யுவர் ஹானர்.... தப்பு பண்ணினா குடும்பத்துல இருக்கறவங்களே போட்டுத் தள்ளிடுவாங்க அப்படிங்கற பயத்துலயானும் தப்பு பண்றவன் யோசிப்பான்.....”
“நரேஷ் இன்னும் குற்றவாளின்னு தீர்ப்பு வரலையேம்மா....”
“அவன் குற்றவாளிதான் யுவர் ஹானர்....”
“இங்க நடந்த வழக்கை வச்சு சொல்றீங்களா....”
“இல்லை யுவர் ஹானர்... இவனால பாதிக்கப்பட்ட சிலரை நேருல பார்த்துட்டு வந்ததால சொல்றேன்.... நேற்று இங்கு கோர்ட் முடிஞ்சு வீட்டுக்கு போன உடனே என்னோட வீட்டுல வேலை செய்யறவங்களோட பன்னிரெண்டு வயசு பொண்ணு வந்து, ‘அம்மா ஐயாவை இனி வெளிய விட மாட்டங்க இல்லை.... உள்ளாரவேதானே வைப்பாங்க.... ஜெயில்ல போட்டுட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க... அப்படின்னா அவரை அங்க நல்லா அடி பிச்சு எடுத்துடுவாங்க இல்லை’.... அப்படின்னு சொன்னா... நான் ஏதோ வருத்தத்துல சொல்றான்னு நினைச்சு அவ முகத்தை பார்த்தேன்.... அங்க மித மிஞ்சிய சந்தோஷம்தான் தெரிஞ்சுது....“எதுக்காகம்மா கேக்கற அப்படின்னு நான் கேட்க, அந்தப் பொண்ணு ஏதோ சொல்ல வந்தது... அதுக்குள்ள அவங்க அம்மா பயத்தோட ஓடி வந்து அவளை கூட்டிட்டு போகப் பார்த்தாங்க....”, நரேஷின் மனைவி பேசப்பேச அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது...
“நான் அவங்கக்கிட்ட அவளை விட சொல்லிட்டு என்ன நடந்ததுன்னு கேட்டதுக்கு, இந்த நரேஷ் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அந்த பெண்ணையும், அவங்க அம்மாவையும் போட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணி இருக்கான்... விஷயத்தை வெளிய சொன்னா வீடியோவை வெளிய விட்டுடுவேன் அப்படின்னு மிரட்டி இருக்கான்.... இன்டர்நெட் பத்தி எல்லாம் பெரிய அறிவு அவங்களுக்கு கிடையாது... அதனால அவங்களை அவன் மிரட்டினது... கேபிள்காரன் கிட்ட சொல்லி அதை ஒலிபரப்ப சொல்லிடுவேன்னு.... அதுல பயந்து போய் அவங்க வாய் திறக்கலை... எங்க வீட்டுல வேலை செய்யறவங்க மட்டும் இல்லை... எங்க சொந்தக்காரங்க ஒரு நாலைந்து பேர் இவனால பாதிக்கப்பட்டு இருக்காங்க....”