தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 36 - ஜெய்
நரேஷின் வழக்கு முடிந்த அடுத்த இரண்டு நாளில் நாராயணனின் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.... அறுவை சிகிச்சை முடிந்து சந்திரன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதால் அவரே அன்று அந்த வழக்கை வாதாட வந்தார்.... ஏற்கனவே நரேஷ் வழக்கில் மூக்குடைபட்டதால் இந்த வழக்கை எப்படியும் வென்று விட வேண்டும் என்று முனைப்புடன் வக்கீல் அம்பலவாணர் சந்திரனின் அனைத்து வாதங்களையும் தகர்க்க தயாராக இருந்தார்....
நீதிபதி வந்து அமர முதல் வழக்காக நாராயணனின் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது...
நீதிபதி ஏற்கனவே இந்த கொலையில் கைதாகி தப்பிய கைதிகளையும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்ததால் முதலில் அதை எடுத்துக்கொண்டனர்... தப்பிய இரு கைதிகளில் ஒருவனை மட்டுமே பிடிக்க முடிந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட, அவனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்...
அதே போல் அன்று சிறைச்சாலையில் காவலிற்கு இருந்த காவலர்களையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்....
விசாரணை கூண்டில் ஏறிய சிறைச்சாலை காவலதிகாரியை சந்திரன் குறுக்கு விசாரணை செய்தார்....
“நீங்க எந்த கேஸ் விஷயமா இங்க வந்து இருக்கீங்கன்னு உங்களுக்கு விளக்கமா தெரிஞ்சு இருக்கும்.... அதனால அதை நான் திருப்பி சொல்லலை... ஆனா உங்க தரப்பில் இருந்து அன்னைக்கு என்ன நடந்ததுன்னு அப்படியே ஒண்ணையும் விடாம சொல்லமுடியுமா...”
“வக்கீல் சார்... இவங்க தப்பிக்கற அன்னைக்கு அதிகாலை ஒரு மூணு மணி இருக்கும், எப்பவும் போல நாங்க ரோந்து போயிட்டு இருந்தோம்... நாங்க மூணு பெரும் ஜெயிலோட வடக்கு பக்கம் பாரா போயிட்டு இருந்தோம்.... திரும்ப வரும்போது யாரோ ரெண்டு பேர் சுவர் ஏறி குதிச்சு தப்பிச்சு போகறா மாதிரி தூரத்துல தெரிஞ்சுது... நாங்க அலாரம் ஆன் பண்ணிட்டு தப்பிச்சவங்களைத் தேடி போனோம்... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் எல்லாப்பக்கமும் தேடியும், எங்கயும் கிடைக்கலை....”
“இவர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை இந்த CCTV காட்சி மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் யுவர் ஹானர்...”
CCTV காட்சி ஒளிபரப்பாக, அதில் பாரா போகின்றவர்கள் இரண்டு பக்கத்திலிருந்தும் வராமல், ஒரு பக்கத்தில் இருந்து மட்டும் நடந்து கொண்டிருந்தனர்.... இவர்கள் ஒரு மூலைக்கு சென்று திரும்பும்போது அடுத்த வழியாக அந்தக் கைதிகள் ஏறி குதித்து தப்பிச்செல்வது அழகாக பதிவாகி இருந்தது.... அதே போல் இவர்கள் அவர்களை ஐந்து நிமிடம் துரத்துவதுபோல் பாவ்லா செய்த பின்பே அலாரத்தை ஒலிக்க செய்வதும் பதிவாகி இருந்தது....
“இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போறீங்க சார்...”
“வக்கீல் சார்... CCTV அப்பறம் ஜெயில் மேல இருந்து கண்காணிப்பு அப்படின்னு பல விதங்கள்ல கைதிகள் மேல கண்ணு இருக்கறதால சில நேரங்கள்ல இப்படி ஒரு சைடாகவும் நடப்போம்.... அன்னைக்கு அவங்க குதிச்ச உடனே அவங்களை பிடிச்சுடலாம்ன்னுதான் நாங்க உடனே அவங்களைத் துரத்தினோம்... ஆனா மதில் சுவருக்கு அந்தப் பக்கத்துல இருந்த பைக்ல ஏறி அவங்க தப்பிச்சுட்டாங்க.....”
“வெரி குட்... பாதி உண்மைக்கு வந்துட்டீங்க... மதில் சுவருக்கு அந்தப் பக்கம் அந்த பைக் சரியா அந்த நேரத்துக்கு வர வாய்ப்பில்லை.... குறைந்தது ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருக்கணும்... அது எப்படி உங்க கவனத்துக்கு வராம போச்சு.... அதுவும் இல்லாம அன்னைக்கு சிறைச்சாலைல மூணு CCTV காமெரா பழுதாகி வேலை செய்யலை.... அதை உடனே சரி பண்ணாம மறுநாள் வரைக்கும் அப்படியே விட்டு வச்சிருந்தீங்க.... அதுல ஒண்ணு மேல இருந்து சிறைச்சாலை வெளிய இருக்கற ரோடை கண்காணிக்கற காமெரா...”
இதற்கு சரியான விளக்கத்தை அந்த சிறை அதிகாரியால் கொடுக்க முடியவில்லை... மேலும் கிடுக்கி பிடி கேள்விகளை சந்திரன் தொடுக்க அந்த அதிகாரி மேலும் மேலும் திணற ஆரம்பித்தார்...
சிறைத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட விவரங்களும், இன்று அந்த அதிகாரி சொல்லுவதும் முன்னுக்கு பின் முரணாக இருந்தன...
அடுத்து அந்தக் கைதியை விசாரிக்க, அவன் அந்த உமாபதி வீட்டிற்கு திருடச்சென்ற போது ஏற்பட்ட கைகலப்பில் அவர்களைக் கொல்ல நேர்ந்ததாக மறுபடி கூறினான்....
“அவங்க வீட்டுக்கு எத்தனை பேர் திருடப்போனீங்க...”
“நானும் என்னோட தோஸ்த்தும் மட்டும்தான் போனோம் சார்....”
“உன்னோட தப்பிச்சானே அந்த இன்னொரு ஆளா...”
“ஆமா சார்....”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“இப்போ அவன் எங்க இருக்கான்னு தெரியுமா....”
“இல்லை சார், அவனை பார்த்தே ஒரு மாசம் கிட்ட இருக்கும்... பாம்பே பக்கம் போகறதா கடைசி தபா பாக்க சொல்ல சொன்னான்...”
“மும்பைல அவன் எந்த ஏரியால இருப்பான்னு ஏதானும் ஐடியா இருக்குதா....”
“இல்லீங்கோ சார்... அது பத்தி எனக்கு தெரியலை....”
“அது எப்படி ஒண்ணா சேர்ந்து திருட்டு எல்லாம் பண்றீங்க... இது கூட தெரியலை...”
“சார் அந்த தடவை மாட்டின பிறகு நானும் அவனும் சேர்ந்து தொழில் பண்ணலை சார்.... நான் தனி, அவன் தனியாத்தான் பண்ணினோம்....”