தொடர்கதை - தாரிகை - 05 - மதி நிலா
வருடம் : 2002..
இடம் : தூங்கா நகரம் மதுரை..
கதிரவனின் வருகையை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்காமல் கைதியாக இருட்டில் அடைந்துகிடந்தவள் இன்று சுதந்திரப்பறவையாய் கதிரோனை சுவாசித்துக்கொண்டிருந்தாள் தன் சொந்த மண்ணில்..
மொழி அவள் வாழ்வில் வந்தபின் நிகழ்ந்த நல்ல மாற்றங்கள் எல்லாம்..
முப்பாலினருமே ஒன்று என்று சமுவின் மனதில் ஆழப்பதித்துவிட்டே சென்னை சென்றிருந்தாள் மொழி..
பிறந்த ஊர் புதுவித தெம்பைக்கொடுக்க வாழ்க்கையை அதன்போக்கில் வாழத் துவங்கிருந்தாள் சமூ..
அக்கம் பக்கத்தினரின் பார்வைகளும் பேச்சுக்களும் மதுரை வந்த புதிதில் ஒருவித தடுமாற்றத்தையும் தயக்கத்தையும் தர நாட்கள் நகர நகர அவையெல்லாம் பழகிவிட்டது அவளுக்கு..
இப்பொழுதெல்லாம் அனைவரையும் எதிர்கொள்ளும் துணிவு மனதிற்குள்..
தந்தையின் நினைவுகள் அடிக்கடி மலர்ந்து துக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழ்கையின் போக்கில் அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டிருந்தாள் என்றே சொல்லவேண்டும்..
ஆனால் அவளது அன்னை லீலா..??
“சமுத்திரா.. இந்த ஊரைவிட்டு வேறு எங்காவது போயிடலாமா..??”, ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வேடிக்கை தயக்கமாக வினவினார் சமுவின் அன்னை லீலா..
“ஏனம்மா..??”, யோசனையுடன் வெளியானது சமுவின் குரல்..
சங்கத்தமிழின் உறையிடமான மதுரையை சமுத்திராவின் அன்னைக்கு மிகவும் பிடிக்கும்..
அங்கு வாழ்வதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார் அடிக்கடி..
அப்படிப்பட்டவரே இன்று மதுரையைவிட்டு செல்லலாம் என்றபொழுது நெற்றி முழுக்க யோசனைக்கோடுகள் சமுவிற்கு..
“என்னால் இனி இங்கு இருக்கமுடியுமென தோன்றவில்லை..”, வெறித்தபடி..
“அதான்ம்மா நான் ஏன்னு கேட்கிறேன்..?? பிறந்து வளர்ந்த ஊரம்மா இது..”
“இங்கிருக்கறவங்க உன்னைப் பார்க்கும் பார்வை எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை சமூ.. ரொம்ப கஷ்டமா இருக்கு..”, கண்கள் பணிக்க..
“அதுக்காக நம்ம ஊரைவிட்டு போனால் எல்லாம் சரியாக போய்விடுமாம்மா..?? தெரிஞ்சவங்க பார்வையையே நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை என்றால் தெரியாதவங்க பார்வையை எப்படிம்மா எதிர்கொள்வது..??”
“..................................”
“நான் இப்படி திருநங்கையா இருக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்காம்மா..??”
“ச்சே.. ச்சே.. என்னடாம்மா இப்படி பேசற.. சத்தியமா இல்லைடா..”
“அப்புறம் என்னம்மா பிரச்சனை..??”
“உன் அப்பா..”
“அப்பாவா..??”, அதிர்வாய் வந்தது சமுவின் குரல்..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“ஆமாம் சமுத்திரா.. உன் அப்பாவே தான்.. உனக்குத் தெரியாது சமுத்திரா உன் அப்பா உன்னை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டார்கள் என்று.. நீ காணமல் போய்விட்டாய் என்று தெரிந்த நொடி அவர் அவராகவே இல்லை.. எந்நேரமும் ஒரே சிந்தனைதான்.. தன்னால்தான் நீ காணமல் போய்விட்டாய் என்ற நினைப்புவேறு.. ரொம்பவே உடைந்து காணப்பட்டார்.. நீ சென்று ஒரு வருடம் சென்றபின் அவருக்கு நீ திருப்பிக்கிடைப்பாய் என்ற நம்பிக்கை இல்லை.. அவருக்கும் மட்டும் அல்ல எனக்கும் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.. அப்பொழுது தெரியவில்லை எனக்கு அவரே பொய்த்துப்போவார் என்று..”
லேசான விசும்பல் சத்தம் லீலாவிடமிருந்து..
சமுவிற்கும் லேசாக கண்கள் கலங்கிப்போயிருந்தது..
“சரியாக எண்ணி பத்து நாட்கள் கூட இருக்காது.. உறக்கத்தில் என்னைப் பிரிந்திருந்தார் உன் தந்தை..”, என்றவருக்கு இன்னும் கண்ணீர் நிற்கவில்லை..
தனது அன்னையை ஆறுதலாக அணைத்திருந்தாள் சமுத்திரா..
“நாட்கள் செல்லச்செல்ல எனக்கும் வாழ்க்கையில் பிடிப்பென்பது இல்லாமல் போய்விட்டது.. எங்கு பார்த்தாலும் அவர் இருப்பதாய் ஒரு தோற்றம்.. என்னுடன் நீயும் வந்துவிடு என்று அவர் என்னிடம் சொல்வதாய் உணர்வு.. அவரிடம் நிரந்தரமாக சென்றுவிட நான் எடுத்த முடிவுதான் தற்கொலை.. அன்று தான் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்.. நீ என்னிடம் திரும்பி வந்ததில் நெஞ்சுமுட்ட சந்தோசம் தான் எனக்கு.. ஆனால் அதைவிட மூச்சுமுட்டுவது போல் உணர்வு..”, என்று சிறு இடைவெளி விட்டவர், “அது எனக்கு என்னவென்று சரியாகச் சொல்லத் தெரியலை சமுத்திரா.. மனதில் இப்பொழுது சிறு வெறுமை.. நீ உயிருடன் இருப்பதை உன் தந்தை பார்க்கமுடியவில்லையே என்று ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து மீண்டும் தற்கொலை உணர்வைத் தூண்டிவிடுமோ என்ற பயம்.. இறப்பிற்கு நான் பயப்படவில்லை சமுத்திரா.. உன்னுடன் கொஞ்ச நாள் இருந்தபிறகு நான் எனது சாவை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.. எனக்குத் தெரியும் நீ எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பி இங்குவந்திருக்கிராய் என்று..