தொடர்கதை - காதல் இளவரசி – 14 - லதா சரவணன்
எதிர்பாராமல் விழுந்த அடி பத்மினியின் கோபத்தை மேலும் கிளறத்தான் செய்தது. இதுவரையில் யாரும் அவளைக் கை நீட்டி அடித்தது இல்லை அப்படியிருக்க தவறே செய்தாலும் அடிக்கும் உரிமையை பரத்திற்கு யார் தந்தது அதுவும் உத்ராவின் பொருட்டு ?
நீங்க இரண்டுபேரும் கடலுக்குள் சென்றது அவருக்கு கோபத்தை உண்டு பண்ணியது மேலும், உத்ராவை கட்டாயப்படுத்தி கூட்டிப்போனதால் தான் அந்தக் கோபம் என்பதையும் ப்ரியனின் வார்த்தைகள்தான் அதை உறுதியும் படுத்திவிட்டதே ?! நடந்துவிட்டதை அருகில் இருந்து பார்த்த உத்ராவும் தன்னையேதும் சமாதானப்படுத்தாமல் பரத்தின் இருப்பிடம் நோக்கி விரைந்து விட்டாள். வேலை பார்க்கும் இடத்தில் எந்த உணர்ச்சிக்கும் அடிமையாகக் கூடாது என்று அவள் வெறும் வார்த்தையாகத்தான் சொல்கிறாளோ ?! வந்த நாளில் இருந்து இப்போது வரையில் பரத்திற்கும் அவளிற்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
அன்றைய இரவு பரத்தும் அதையேதான் உணர்த்தினான். தன்னை விருந்திற்கு என்று அழைத்துச் சென்றுவிட்டு உத்ராவின் மேல் எதிர்பாராமல் ஒரு வித நேசம் உருவாகியிருக்கிறது என்பதை சொல்லும் போதே பத்மினியின் மனதில் சற்று நெருடல் இருக்கத்தான் செய்தது. ஆனால் உத்ரா மாதிரி ஒரு நல்ல தோழியிடம் அந்த மனக்கசப்பை காட்டிடக் கூடாது தன்னைப் போல எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் குணாதிசயம் அவளுக்கு இல்லை, எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு பூட்டிக்கொண்டு மறுகும் மனம் கொண்டவள். தன்னுடைய லைப் ஸ்டைலுக்கு பரத் ஏற்றவனாக இருக்கக் கூடும் ஆனால் அவன் மட்டும் இங்கு ஆண்மகன் இல்லையே ?! ஆனால் இப்படி நான் யோசித்தும் அவர்களுக்காக தன் மனதை மாற்றிக்கொண்டும் கூட பரத்திற்கும் உத்ராவிற்கும் தான் முதலாய் தெரியவில்லை, பரத் உத்ராவிற்காக தன்னை கண்டிக்கிறான் அதுக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் உத்ரா பரத்திடம் விரைகிறாள்.
இதனால் தனக்கு ஏற்படும் மனவலியை ஏன் ஒரு தோழியாய் உத்ரா உணரவில்லை, அவரவர் உணர்ச்சிகள் அவரவருக்கு பெரியது போலும், நான் மட்டும் ஏன் எல்லாரைப் பற்றியும் நினைக்க வேண்டும். இவர்கள் யார் பாதுகாப்பை நம்பியும் நான் வரவில்லை, என்னுடைய தைரியத்தை நம்பித்தானே வந்திருக்கிறேன். நாளை மறுபடியும் நான் கடலில் இறங்கத்தான் போகிறேன் அப்போது இதே பற்று பரத்திற்கு வருகிறதா என்று பார்க்கலாம். மனது நிறைய பொருமலோடு தன் படுக்கையை நோக்கிச் சென்றாள் பத்மினி.
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த பரத்திடம் பேச முயற்சித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. ஸாரி பரத் இத்தனை ஆபத்து இங்கேயிருக்கும் என்று எண்ணவில்லை ஒரு விளையாட்டாக,,,,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அடுத்தவர்களை காயப்படுத்துவதுதான் உங்களுடைய விளையாட்டா உத்ரா. நான் எத்தனை பயந்துபோயிருப்பேன் என்று உன்னால் எங்கே உணர முடியப் போகிறது ?! பத்மினி அழைத்தவுடன் ஒன்று நீ மறுத்து இருக்க வேண்டும் அல்லது அவளையும் போகவிடாமல் தடுத்திருக்க வேண்டும் இந்த டிரிப்பை ஏற்பாடு செய்தது நான் உங்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் நான் தான் பொறுப்பு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் நானல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டியிருக்கும். தக்க ஏற்பாடுகளோடு இறங்கியிருக்க வேண்டாமா ? அப்படியென்ன பொறுப்பில்லாததனம் உத்ரா. உன்னிடம் இருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை.
நடந்ததற்கு நான்தான் மன்னிப்பு கேட்டுவிட்டேனே பரத், பத்மினி என்னை வற்புறுத்தவே இல்லை நானாகத்தான் சென்றேன் அதற்கு காரணமும் நீங்கள் தான் வந்தவுடன் நீங்கள் ஏதும் பேசாமல் கடல் பயணத்தை மேற்கொண்டீர்கள் நேரம் அதிகமாகியும் உங்களைக் காணவில்லை நான் என்ன நினைத்துக்கொள்வது. உங்களைப் பற்றிய கவலை எங்களுக்கும் இருக்கும்தானே ? உத்ராவின் அந்த பேச்சினூடே
எங்களுக்கு என்பதை நீ எனக்கு என்று சொல்லியிருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் உத்ரா.
அவனின் குரலில் ஏற்பட்ட இளக்கத்தில் சற்றே சலுகையாய் பாவம் பரத் பத்மினி அவள் மனம் கட்டாயம் காயப்பட்டு இருக்கும். பெற்றபிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்க்கிறேன் என்று கைக்குள்ளேயே வைத்திருப்பது எத்தனை தவறோ அதே போல்தான் சுதந்திரமாக விடுகிறேன் என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு, அந்த அலட்சியத்தில் இருந்து தன்னை விடுவிடுத்துக் கொள்ளத்தான் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதைப் போல் அவள் நடிக்கிறாள். இயல்பாகவே தன்னிடம் யாரும் அன்பு கொள்ளவில்லை என்று அவளின் அடிமனதி ஒரு வருத்தம் இருந்துதான் உள்ளது. இன்று நீங்கள் எனக்காக அவளிடம் கோபித்தது இன்னுமும் அவளை சங்கடப்படுத்தியிருக்கும். முதலில் நடந்ததற்கு அவளிடம் மன்னிப்பு கேளுங்கள்
பத்மினியைப் போலத்தான் நானும் உத்ரா என்னுடைய தந்தையின் அலட்சியதினால் தான் நானும் பல பழக்கங்களை மேற்கொண்டேன். என் தனிமையிலிருந்து தப்பிக்க.......... உன்னால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை உணர முடிகிறது அல்லவா..... நான்....
முதலில் பத்மினியை சமாதானப்படுத்துவோம் அதன்பிறகு மற்றதை பேசலாம் வாருங்கள் அவள் கண்கலங்கி நின்றபோதும் நான் ஆறுதல் சொல்லாமல் வந்ததற்கும் காரணம் உங்களை அவளிடம் சமாதானம் பேச வைக்கத்தான்
பரத்தை அழைத்துக் கொண்டு பத்மினியின் ஜாகைக்கு வரும்போது அவளின் ஆழ்ந்த உறக்கம் தான் இருவரையும் எதிர்க்கொண்டது. சரி நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் உங்களுக்கும் அலுப்பாகத்தானே இருக்கும் போய் ரெஸ்ட் எடுங்கள் என்று அவனை விரட்டினாள்.