பரத் வாசல்வரை வந்தவன் திரும்பி உத்ராவைப் பார்த்தான். என்ன என்பதுபோல் அருகில் வந்தவளை மென்மையாக அணைத்தான் பரத் விடுங்கள்.
உத்ரா என்னை விலக்கிவிடாதே இந்த அணைப்பில் நிச்சயம் காமம் கலக்கவில்லை, உன்னை காணாமல் நான் பட்ட வேதனையின் வெளிப்பாடு பத்மினியைப் போல என்னையும் என் தவறுகளையும் நீ எடை போட்ட விதம் உன் அருகாமையில் என் தவறுகள் அத்தனையும் புனிதப்பட்டு விட்டன. இந்த அணைப்பு ஒன்று போதும் நான் மீண்டு வர .... என்னைப் பற்றி நான் உன்னிடம் சகலமும் ஒப்பித்து பின் என்னையே தரப்போகிறேன் சட்டென்று அவளை விலக்கிவிட்டு அங்கிருந்து மறைந்தான் பரத்.
உறக்கம் வந்தவளைப் போல நடித்துக்கொண்டு இருந்த பத்மினியின் கண்கள் அந்தக்காட்சியினைக் கண்டதும் மேலும் அதிகமாக வெறுப்பையை உமிழ்ந்தன. அதைப்போலவே மற்றும் ஒரு கண்களும் அவை பிரியனுடையது பரத் அந்த இடத்தில் இருந்து விலகிவிட்டான் என்பதை அறிந்ததும் உத்ராவிடம் நெருங்கிவந்தான் ப்ரியன்.
பரத்தின் திடீர் அணைப்பில் ஏற்பட்ட குறுகுறுப்பும், பொய் கோபமும் கலவையாய் கலந்து ஏதும் செயல்பட முடியாமல் நின்றிருந்தவளிடம் உன்னை நான் ரொம்ப புத்திசாலி என்று நினைத்திருந்தேன் உத்ரா ஆனால் நீயும் சராசரி பெண்தான் என்பதை உணர்த்திவிட்டாய். அதெப்படி பரத்திடம் மட்டும் எல்லா பெண்களும் சட்டென்று விழுந்து விடுகிறீர்கள் ஏற்கனவே பரத்தை நம்பிய ஒரு பெண்ணின் நிலைமையைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன் ஆனால் நீயும் இப்படி
ப்ரியன் யார் அந்த பெண் ? அவளின் இறப்பிற்கு பரத் எப்படி காரணமாக முடியும் ஒன்று தெளிவாக சொல்லுவதென்றால் சொல்லுங்கள் இல்லையெனில் என்னைக் குழப்பவேண்டாம்.
ப்ரியன் தன் மொபைலை எடுத்து ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினான் இந்தப் பெண்ணின் பெயர் நீரஜா உன்னைப்போல வந்தவள்தான். முதல் நாளே பரத்துடன் நெருக்கமாய் சுற்றிக்கொண்டு இருந்தவள். அவர்கள் இருவரையும் தனித்தே பார்க்க முடியாது பரத் எங்கிருக்கிறானோ அங்கே நீரஜா இருப்பாள் அத்தனை நெருக்கத்தைப் பார்த்து நான் கூட பரத் நீரஜாவைத் திருமணம் செய்துகொள்வான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் தன் தேவைகள் முடிந்தவுடன் பரத் அவளை அழகாக ஒதுக்கிவிட்டான், பணிமுடிந்து அவரவர் கிளம்பும் தருணம் நானும் பரத்தும் கடைசி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தோம் அன்று நீரஜா அறைக்குள் நுழைந்தாள், பரத்திடம் தனிமையில் பேசிட விரும்புவதாகவும் கூறினாள். எனக்கு நன்றாய் அந்த சம்பவம் நினைவிருக்கிறது நான் வெளியேற முயற்சிக்க பரத் என்னை அங்கேயே இருக்கச் சொன்னார்.
நீரஜ் ப்ரியன் ஒன்றும் வெளியாள் இல்லை அப்படியென்ன ஒளித்து மறைத்து நாமிருவரும் பேசிவிடப் போகிறோம். இருவரும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம் அதனால் நீ இங்கேயே சொல்வதானால் சொல்லு
நீரஜா ஒரு விநாடி மெளனித்துவிட்டு, மீண்டும் பேச்சைத் துவங்கினாள் அடுத்த டரிப் போர்பிளேயரில்தானே நான் அதற்கு வர இயலாது என்று நினைக்கிறேன்
ஏன் நீரஜ் உன்னுடைய நீச்சலின் வேகத்தைக் கண்டு நான் பிரமித்து இருக்கிறேன் இப்போது நமது முதல் முயற்சி வெற்றிபெற்றதுக்கு நீயும் ஒரு முக்கிய காரணம் என்னுடைய முயற்சிகளில் உன் வெற்றியை நான் எதிர்பார்க்கிறேன்.
அதற்கு என் மனம் ஒத்துழைத்தாலும் என் உடல் ஒத்துழைக்காது பரத் நான் இப்போது உங்கள் குழந்தையைச் சுமந்து கொண்டு இருக்கிறேன் என்று முகம் நிறைய வெட்கதோடு அவள் சொல்லவும் பரத் கோபத்தோடு எழுந்தான்.
என்னை என்ன முட்டாள் என்று நினைத்தாயா ? கடல் பிராந்தியத்தில் நட்போடு சுற்றினால் கூட உடனே பிள்ளை உண்டாகிவிடுமோ, நான் உன்னிடம் வரம்பு மீறவில்லை நீரஜ், அப்படி பழகியிருந்தால் அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் என்னிடம் இருக்கிறது. ஆனால் யாரோ சாப்பிட்ட விருந்திற்கு நீ என்னை காரணம் காட்டிட முடியாது அதற்கு நான் காரணமும் இல்லை என்று அடித்து சொல்லிவிட்டான்.
ஆனால் நீரஜாவின் கண்களில் பொய் இல்லை, அவளின் வார்த்தைகளில் உறுதியிருந்தது இருவரும் தனித்து சுற்றியிருந்ததால் அதற்கு சாட்சியும் இல்லை, அவர்களின் உறவு எனக்கு மட்டுமே தெரியும். அந்தப்பெண்ணிடம் பரத் பழகிய விதம் இப்போது அதை மறுப்பதற்காண காரணம் என பரத்தின் மேல் எனக்கு வெறுப்பு தான் ஏற்பட்டது. அப்படியும் அவள் அழுதுகொண்டே கெஞ்சினாள் கல்மனதாய் பரத் அப்படியொரு நிகழ்வு தங்களுக்குள் நடக்கவே இல்லை என்று சாதித்து விட்டதோடு அப்போதே அவள் கணக்கை தீர்க்கவும் சொல்லிவிட்டான். ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நீரஜா மிகவும் இறுக்கமாய் இருந்தாள். டிரிப் முடிவடையும் போது கூட பரத்தை சந்திக்க அவள் முயற்சி செய்தாள் ஆனால் அவன் ஒப்புக்கொள்ளவில்லை அதே கலக்கத்தோடு வெளியே சென்றவள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது பரத் அவளுக்காக ஒரு சின்ன வருத்தம் கூட அடையவில்லை இப்படிபட்டவன் இப்போது மீண்டும் உன்னிடம்....வேண்டாம் உத்ரா தயவுசெய்து அவனை நம்பாதே.. நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் மீதி உன்விருப்பம் என்று சென்றுவிட்டான் ப்ரியன்