தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 33 - சித்ரா. வெ
கலையரசியின் புகுந்த வீட்டு உறவினர் ஒருவர் தங்கள் மகள் திருமணத்திற்கு அழைக்க தன் மனைவியோடு வந்திருந்தார். இப்படி அங்கிருந்து யாராவது விசேஷத்திற்கு அழைத்தால், கலை மட்டும் தான் செல்வார். கலையை அழைக்கும் போதே புகழேந்திக்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு தான் செல்வார்கள். சென்னையை சுற்றி விசேஷம் என்றால் எப்போதாவது கலையரசியோடு பூங்கொடியும் உடன் செல்வார். மற்ற சமயங்களில் கலை மட்டும் தான் சென்று வருவார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஆனால் இப்போது வந்தவர்களோ அதற்கு குறைப்பட்டுக் கொண்டனர். எப்போது வந்தாலும் தனியாக வருகிறாயே, உன் மகள்களை அழைத்து வந்தால் என்ன? இங்கே அண்ணன் வீட்டோடு இருந்துவிட்டால் உறவுகள் விட்டு போகுமா? உன் மகள்களை சிறுவயதில் பார்த்தது, இப்போது அவர்களை எங்கள் கண்ணில் காட்ட மாட்டாயா? என்று சொன்னவர்கள், கட்டாயம் உன் மகள்களை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று சொல்லி, மணிமொழிக்கு இப்போது திருமணம் முடிந்துவிட்டதால், அவளுக்கு திருமண பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று அவளது முகவரி கேட்டு வாங்கிச் சென்றனர்.
கலையரசி கணவரின் உடன்பிறந்தவர்களுக்கு தான், அவர் இறந்தததும் கலையும் அவரின் பிள்ளைகளும் பாரமாகி போனார்கள். ஆனால் தள்ளி நிற்கும் உறவினர்களெல்லாம் எப்போது கலையரசிக்கு அவரது கணவன் இருக்கும் போது என்ன மரியதை செலுத்தினார்களோ அதே மரியாதையை தான் அளிப்பர். அதனால் திருமணத்திற்கு அருள் மொழியையும் மணிமொழியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கலை தீர்மானிர்த்தார். அதுதான் வரப்போகும் பிரச்சனைகளுக்கு முதல் காரணமாக அமைந்தது.
இப்போது அருள் இண்டர்ன்ஷிப்பை முடித்துவிட்டு தேர்வுக்காக காத்துக் கொண்டிருந்தாள். தேர்வுக்காக படிப்பதற்கு இப்போது விடுமுறை விடப்பட்டிருந்தது. இலக்கியாவும் அவளது ஊருக்கு சென்றுவிட்டாள். இப்போது விடுமுறை தினம் என்பதால் தன் அன்னை அழைத்ததால் அருளும் திருமணத்திற்கு சென்றாள். மணிமொழியும் அவளது கணவனும், மற்றும் பூங்கொடியும் உடன் சென்றனர்.
பொதுவாக ஒரு திருமணத்தில் கண்ணுக்கு லட்சணமாக திருமண வயது பெண்களை பார்த்தால், உடனே அவர்கள் வீட்டு மகனுக்கு பெண் கேட்கலாமா? என்று நினைப்பர். அதேபோல் தான் அருளை பார்த்தும் சிலரின் மனதில் அப்படி ஒரு எண்ணம் உதித்தது. அதில் ஒருவர் அருளின் அத்தை, அவளது தந்தைக்கு உடன்பிறந்த சகோதரி..
தன் சகோதரன் உயிரோடு இருந்த போதே அவர் கலையை மதிக்க மாட்டார். ஏனென்றால் அவர் திருமணம் செய்துக் கொண்டு போன குடும்பம் வசதியான குடும்பம், ஆனால் அருள்மொழியின் தந்தையோ, இல்லை சிறிய தந்தையோ நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான், அதிக சீர் வேண்டாம் என்று சொல்லி தான் அவர்கள் வீட்டில் இருந்து அருளின் அத்தையை பெண் கேட்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்தவராக எப்போதும் பிறந்த வீட்டை கொஞ்சம் கீழாக தான் பார்ப்பார். இதில் தன் சகோதரனும் இறந்த பின் கலையை மிகவுமே கீழாக பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார். கையில் இரண்டு பெண் குழந்தைகளோடு தன் அண்ணி இருக்கிறாரே என்றுக் கூட கவலைக் கொண்டதில்லை.
அப்படிப்பட்டவர் இன்று தன் அண்ணியை தேடிச் சென்று பேசினார். மிகவும் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டார். மணியிடமும் அருளிடமும் அன்பொழுக பேசினார். இருவருக்கும் அவரை அடையாளம் கூட தெரியவில்லை. அவர்களுக்கு கருத்து தெரிந்ததில் இருந்தே கலை பிறந்த வீட்டிலேயே இருந்துவிட, தன் தந்தை வழி உறவினர்களை இருவரும் அறிந்ததேயில்லை. தன்னை கீழாக பார்ப்பதால், புகுந்த வீட்டுக்கு அவரே செல்வதை நிறுத்திவிட்டதால், பிள்ளைகளையும் அவர் அழைத்து சென்றதில்லை. அங்கிருந்தும் சகோதரனின் பிள்ளைகள் ஆயிற்றே என்று யாரும் வந்து பார்த்ததுமில்லை.
அப்படியிருக்க தன் அண்ணனின் பிள்ளைகளை பற்றிய ஞாபகம் இப்போது தான் தன் நாத்தனாருக்கு வந்ததா? என்று கலை நினைத்தாலும், தன் பிள்ளைகளை அவரிடம் பேச வேண்டாம் என்று கலை சொல்லவில்லை. அவரும் பாராமுகம் காட்டவில்லை. மணி, அருளுக்குமே இதெல்லாம் புரிந்திருந்தாலும் அவர்களும் தன் அத்தையிடம் நல்லபடியாகவே பேசினார்கள். ஆனால் தன் நாத்தனார் ஏதோ தேவை என்பதால் தான் தங்களிடம் பாச மழை பொழிகிறார் என்பதை கலை உணர்ந்து தான் இருந்தார். ஆனால் அது எதனால் என்பது அவருக்கு அப்போது புரியவில்லை. ஆனால் அதற்கும் விடை விரைவிலேயே தெரிந்துவிட்டது.