தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 09 - ஸ்ரீ
“சிரிக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும்
என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்
நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி
உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
பார்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே………………… “
அந்த ஒரு வார காலத்தில் வெண்பா மிகவுமே சோர்ந்து போனாள்.திவ்யாந்துடன் சேர்ந்து வாழவில்லை எனினும் அவன் எங்கோ தன்னருகில் தான் இருக்கிறான் என்றே உணர்வே அவளை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருக்கிறது அப்படியிருக்க அவன் தன்னைவிட்டு பிரிந்துவிட்டால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என தன்னைத் தானே ஆயிரம் முறை கேட்டுவிட்டாள்.
இப்படிதான் திருமணமான புதிதில் ஒருமுறை ஒரு கான்ஃரென்ஸிற்காக திவ்யாந்த் யூரோப் செல்ல வேண்டியிருந்தது.முதலில் தைரியமாய் சரி என்று கூறிவிட்டவளால் அவன் கிளம்பும் அன்று சாதாரணமாக இருக்க முடியவில்லை.
இருந்தும் கிளம்பும் நேரத்தில் கண்ணை கசக்கினால் நன்றாக இருக்காது என மனதை கட்டுப்படுத்தியவள் வலுகட்டாயமாக சிரிப்பை உதட்டில் ஒட்டிக் கொண்டு அவனை வழியனுப்பி வைத்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சிந்தாம்மாவிடமும் சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டவள் இரவு தனதறைக்கு வந்து அழுதழுது ஓய்ந்து போனாள்.
அந்த ஒருவார காலமும் ஒழுங்காய் சாப்பிடாமல் தூங்காமல் ஆளே மாறிப் போனாள்.அவளுக்கே வியப்பாய் தான் இருந்தது.
“இது என்ன சின்ன பிள்ளை மாதிரி இப்டி ஆய்ட்டேன் நா..சிந்தாம்மா என்ன நினைப்பாங்க..”
சிந்தாம்மாவிற்கு அவள் நிலைமை புரிந்தாலும் திவ்யாந்தின் இந்தமாதிரி பயணங்களை அவன் தவிர்க்க இயலாது நிச்சயம் இவள் பழகிதான் ஆக வேண்டும் என்பதாலேயே அவளை முடிந்தவரை தேற்றினார்.
ஒன்றுக்கும் சமன்படாத மனதின் விளைவு சரியாய் திவ்யாந்த் ஊரிலிருந்து வரும் அன்று அப்படியான ஒரு காய்ச்சலில் விழுந்தாள்.
அதிகாலை 2 மணியளவில் வந்தவன் நிச்சயம் தனக்காக காத்திருந்து வந்து அவள்தான் கதவை திறப்பாள் என்ற ஆவலோடு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க சிந்தாம்மா தான் வந்து திறந்தார்.
“வாப்பா..பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்துதா..”
“ம்ம் மா..எப்பவும் போல தான்..நீங்க இன்னும் தூங்கலயா வெண்பா எங்க..”
“பாப்பா என்ன படுத்துக்க சொல்லிட்டு தான் போச்சு தண்ணி குடிக்கலாம்னு எழுந்தப்போ பாத்தா பாப்பா எழுந்த மாதிரியே தெரில அதான் நா அப்படியே உக்காந்துட்டேன்.பாவம் கண்ணு நீயில்லாம தவிச்சு போச்சு.நீயே போய் பாரு வாடிப் போன பூவாட்டம் ஆயிட்டா..”
“ம்ம் சரிம்மா நா பாத்துக்குறேன் நீங்க படுத்துக்கோங்க..”,என்றவனுக்கு தன்னவளை அள்ளி அணைத்துக் கொள்ள மனம் பரபரத்தது.
மெதுவாய் கதவை திறந்து உள்ளே பார்த்தவனுக்கு இரவு விளக்கு வெளிச்சத்தில் போர்வையை கழுத்துவரை போர்த்தி ஒரு பக்கமாய் திரும்பி படுத்திருந்தவளை பார்த்து ஏதோ மனம் உறுத்த சட்டென அவளருகில் சென்று அமர்ந்தான்.
“கண்ணம்மா..”
“திவா..மிஸ் யூ..”,அத்தனை தூக்கத்திலும் அப்படி அவள் சட்டென கூறியதை கேட்டவனுக்கு மனம் இறகாய் இதமளிக்க அவள் கன்னம் தொட்டவன் அதிர்ந்து போனான்.
காய்ச்சல் அனலாய் அடிக்க அதன் தாக்கத்தில் தான் அவள் அனத்துகிறாள் என்பதே அப்போது தான் புரிந்தது..ஒரு வாரத்திற்குள் இப்படி உடம்பை கெடுத்துக் கொண்டாளே என மனம் பாடாய்பட்டது.
கிட்சனிற்கு சென்றவன் சிந்தாம்மாவை எழுப்ப மனமின்றி தானே வெந்நீர் சூடுசெய்து எடுத்து வந்தான்.சிறு கைக்குட்டையை நீரில் நனைத்து அவள் நெற்றியில் வைத்து ஒத்திக் கொடுத்தான்.
தெர்மாமீட்டரில் டெம்பரேச்சர் பார்க்க 102° காட்டியது.அப்படியே அவளை தன்புறம் திருப்பி தன் மார்போடு சேர்த்து அணைத்து வைத்துக் கொண்டான்.அப்படியே அத்தனை வெப்பத்தையும் தனக்குள் எடுத்துவிட முடியாதா என்பது மாதிரியான தவிப்பை தாங்கியிருந்தது அந்த அணைப்பு.
விடிய விடிய துளியும் தூங்காமல் தன்னவளை தொட்டு தொட்டு பார்த்தவாறு அவனிருக்க வெண்பாவோ கூடுகண்டுவிட்ட பறவையாய் அவன் கையணைப்பில் தான் தொலைத்த ஒருவார தூக்கத்தையும் கண்டெடுத்து நிம்மதியடைந்தாள்.