தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 15 - சுபஸ்ரீ
மறுநாள் காலை ஆகாஷ் சதுரகிரிக்கு கிளம்பிவிட்டான். தன் காரிலேயே பயணத்தை தொடங்கிவிட்டான். சாருவும் அவள் அப்பாவும் அவ்வாறே மற்றொரு காரில் புறப்பட்டனர். யு.எஸ்.சில் பத்து மணி நேரம் கூட டிரைவ் செய்து பழக்கப்பட்டதால் இருவரும் இது கடினமாக தோன்றவில்லை. நடுநடுவே பிரேக் எடுத்துக் கொண்டனர்.
சாருவின் அப்பா ஒரே காரில் பயணிக்கலாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் ஆகாஷ் மறுத்துவிட்டான். அவன் திட்டம் வேறாக இருந்தது. முதலில் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்துரை அடைந்தனர். அங்கு ஹோட்டலில் இரவை கழித்துவிட்டனர்.
ஆண்டாள் அவதரித்த திருத்தலம். நாம் தினம் தினம் காணும் தமிழக அரசின் முத்திரையில் காணப்படும் கோபுரம்.
சாருவிற்கு அந்த நொடியே சலங்கையை காலில் கட்டிக் கொண்டு ஆண்டாளாக அபிநயம் பிடிக்க மனம் ஏங்கியது. இருப்பினும் இந்த தருணம் அதற்கில்லை என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். மூவருக்கும் வெவ்வேறு எண்ணம், தேடல், மனஓட்டம் என மாறுப்பட்டு இருந்தது.
ஆகாஷிடம் அவள் தேவைக்கு அதிகமாக பேசவில்லை. அவனால் அதை உணரமுடிந்தது. இந்த அளவு கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. சுவாதி . . செல்வன் . . சதுரகிரி போன்றவற்றை அவன் மனம் சிந்தனை செய்ய விரும்பினாலும் இவற்றை மீறி சாருவின் பாராமுகம் மனதை குடைந்தது.
இருப்பினும் இந்த நேரத்தில் சாருவின் பிரச்சனையை முன்னிருத்தக் கூடாது என எண்ணியவன். சுவாதி விஷயத்தில் தன முழுக் கவனத்தையும் செலுத்தினான்.
மறுநாள் அதிகாலை கிளம்பி வத்ராய்ப்பு என்னும் இடத்தை அடைந்தனர். மிகவும் அழகான சிறிய ஊர். வற்றாத இருப்பு என்னும் பெயர் மருவி வத்ராய்ப்பு என மாறிவிட்டது.
ஆகாஷிற்க்கு இதுதான் முதல் தடவை. சிறிய கட்டமைப்பு கொண்ட ஊர். சில்லென்ற காற்று. ஆங்காங்கே கடையில் திருநீறு குங்குமம் சந்தனம் கற்புரம் போன்றவை விற்கப்பட்டதால். காற்றில் ஒரு தெய்வீக மணம் கமழ்ந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் சதுரகிரி மலையின் அடிவாரம் தொடங்கிவிடுகிறது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
வத்ராய்ப்பில்தான் ஆசிரமம் உள்ளது. சாருவும் அவள் அப்பாவும் ஆசிரமம் உள்ளே சென்று விட்டனர். அவர்கள் மனதில் ஒருவித பாரமும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது.
ஆகாஷ் வெளியில் சிறிது நேரம் உலாவினான். பிரம்மாண்டமான ஆசிரம கட்டடம் . . பல ஏக்கர் நில ஆக்கிரமிப்பு . . ஒரே மாதிரி பட்டாடை அணிந்த ஆசிரமவாசிகள் . . சுவாமிஜிக்கு முன்னும் பின்னும் படோபடம் என அவன் எதிர்பார்த்த எதுவும் அங்கு இல்லை.
சாதாரண கட்டடம் ஆர்பாட்டமோ படோபடமோ இல்லாத ஆசிரமவாசிகள். ஆசிரமத்தின் நடுவே இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் உள்ள மேடையில் சுவாமிஜி அமர்ந்திருந்தார். தரையில் சீடர்களும் மற்ற சிலரும் அமர்ந்திருந்தனர். சாரு முன்பே ஆசிரமத்தைப் பற்றி கூறியிருந்தாலும். இத்தனை எளிமையாக இருக்கும் என அவன் நினைக்கவில்லை.
சாருவும் அவள் அப்பாவும் நேராக சுவாமிஜியை நோக்கி நடந்தனர். அவர்களை இருகரம் கூப்பி வரவேற்றார் சுவாமிஜி. ஒருசில நொடி உரையாடலுக்கு பிறகு ஒருவரை அழைத்த சுவாமிஜி ஏதோ கூற அந்த மனிதர் சாருவையும் அவள் தந்தையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
இவை அனைத்தையும் வெளியில் இருந்து ஆகாஷ் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு சாரு பேசிய மனிதர்தான் சுவாமிஜி ஆசிரமத்தின் தலைமை எனத் தெரியாது.
அவர்கள் உள்ளே சென்றதும் சுவாமிஜி வெளியே செல்ல யத்தனிக்க அவர் பின்னால் சீடர்கள் கையில் சில பொருட்களுடன் கிளம்பினார். அவர்கள் ஆகாஷை கடந்துதான் சென்றார்கள். ஆகாஷ் சற்றே ஒதுங்கி நின்றுக் கொண்டான்.
“நீங்க யாரு?” எனக் குரல் கேட்டு திரும்பியவன்
“நான் சுவாமிஜிய பாக்கணும்” என்றான் ஆகாஷ்
“இதோ இப்பதான் அவர் மூலிகை காப்பு கட்ட போறார் . . வர நேரம் ஆகும்” என்றான் மலர்ந்த முகத்துடன் ஒரு வாலிபன்.
“நீங்க இங்கதான் இருக்கிங்களா?” ஆகாஷ் கேட்க
“ஆமா . . . மாணவன்”
“ஸ்டூடெண்டா? என்ன படிக்கிறீங்க?” ஆச்சரியமாக ஆகாஷிடமிருந்து கேள்வி.
“மூலிகை மருத்துவம்”
“ஐ. சீ. எத்தன வருஷ கோர்ஸ்”
“மனிதாபிமானம் மேலோங்கி . . எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மத்தவங்களுக்கு முழு மனதோட சிகிச்சை பண்றேனோ அப்ப முடியுது”
“தல சுத்துதுடா . .ஓண்ணுமே புரியல ”ஆகாஷ் மைண்ட்வாய்ஸ் பதில் சொல்ல முடியாமல் புலம்ப
அதை நொடியில் புரிந்துக் கொண்டவன் புன்னகையோடு “உங்களுக்கு அவ்வளோ சீக்கிரம் புரியாது” என்றான்.
“இங்க இருக்கிற எல்லாருமே படிக்கிறவங்களா? எல்லா வயசுலயும் இருக்காங்களே” ஒருமுறை ஆசிரமத்ததை பார்த்துவிட்டு கேட்டான்.
“இல்ல” என உடனே பதில் வந்தது.