“யாதவி கை என்ன இப்படி சிவந்திருக்கு.. கொட்னது என்ன சுடுதண்ணியா.. அதையா எடுத்துட்டு வந்த..” என்று சாத்விக் கேட்கும் நேரம், அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் மீதுதான்,
அவளை யாதவியாக அறிந்த மஞ்சுளாவும் அர்ச்சனாவும் அவளை அதிர்ச்சியாக பார்க்க, அவளை தேவியாக அறிந்தவர்கள் அந்த காட்சியை ஆச்சர்யமாக பார்த்தனர்.
“தேவி இதை நீ ஏன் எடுத்துட்டு வந்த.. உடம்பு சரியில்லன்னு சொன்னியே, ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ற..” என்றுக் கேட்ட பாலா,
அருகில் நின்றிருந்த ராகிணியை பார்த்து, அவர் ஏற்கனவே யாதவியை அதட்டிக் கொண்டு வந்ததை கவனித்ததால்,
“இதெல்லாம் உங்க வேலை தானா?” என்று கோபமாக கேட்டான்.
“இல்ல பாலா சுடுதண்ணி வேணுமேன்னு தான் தேவிக்கிட்ட கேட்டேன்..” என்று ராகிணி தயங்கி தயங்கி சொன்னார். எப்படியோ தேவியை வேலை வாங்கினால் பாலாவிற்கு பிடிக்காது என்றாலும், நேரடியாக கேட்க மாட்டான் என்ற தைரியத்தில் தான் அவர் இத்தனை வேலையும் பார்த்தது. ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பாராரததால், பாலாவின் கோபத்தைக் கண்டு கொஞ்சம் பயந்து தான் போனார்.
“இதுவரை யாதவிக்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியில் இருந்த சாத்விக், இப்போது தான் யாரை பார்த்துவிட வேண்டும் என்று இத்தனை வருடமாக தவிப்போடு இருந்தானோ, அவளை இன்று கண்டுவிட்ட மகிழ்ச்சியை உணர ஆரம்பித்தான்.
அந்த மகிழ்ச்சியை உணர்ந்த நொடி, “ யாதவி உன்னை இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல, நீ இங்க தான் இருக்கியா? உன்னை எங்கல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று தான் இருக்கும் சூழ்நிலையை மறந்து அவன் யாதவியை பார்த்து பேச,
அவன் ஒரு பிரபலம் என்பதால் அங்கிருந்தோர் அந்த காட்சியை ஆச்சர்யத்தோடு பார்க்க, அங்கிருந்த பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களுக்கு அந்த காட்சி செய்தியாகி கொண்டிருந்தது.
என்னத்தான் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டிருந்தாலும், சாத்விக் யாதவியுடன் நெருக்கமாக அவளது கையைப் பிடித்தப்படி நின்றிருந்தது விபாகரனுக்கு வலியை தான் கொடுத்தது. அது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, இத்தனை நேரமாக தன் மகனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த மஞ்சுளாவிற்கு புரிந்தது.
“அடக் கடவுளே இன்னைக்கு யார் முகத்தில் முழிச்சேனோ தெரியலையே, பார்க்கக் கூடாதுன்னு நினைச்ச ஆளுங்களை பார்க்க வேண்டிய கொடுமையை கொடுத்திட்டியே,
முதலில் சாத்விக், அடுத்து இவ அப்பா, இப்போ இவ.. அதுவும் அவன் கூட இவ எப்படி நிக்குறா.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம..” என்று அர்ச்சனா புலம்பினாள்.
அத்தனை பேருக்கும் வியப்பை கொடுத்தாலும், சாத்விக்கின் இந்த நடவடிக்கை சுஜனாவிற்கும் அவளது பெற்றோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாத சாத்விக், தான் ஒரு பிரபலம் என்பதையும் மறந்து, ஒரு பெண்ணின் கையைப் பிடித்து நின்ற காட்சி சுஜானாவிற்கு வேதனையை கொடுத்தது. அவள் யார் என்பது கூட சுஜனாவிற்கு தெரியாது தான், ஆனால் அந்த பெண் மீது பொழியும் அன்பில் ஒரு சதவீதம் கூட என் மேல் இல்லை என்ற உண்மை புரிந்ததால், தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து கவலைக் கொண்டவள் பார்வை அங்கிருந்த அஜயை பார்க்க, முன்னிலிருந்தே அவன் அவளை தான் பார்த்து நின்றுக் கொண்டிருந்தான். அவள் பார்ப்பது அறிந்ததும் கண்களால் ஆறுதல் கூறினான்.
சுஜனாவின் பெற்றோரும் இங்கு வந்ததிலிருந்து சாத்விக் தன் பெண்ணிடம் எப்படி நடந்துக் கொள்கிறான் என்று பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்களே, இதில் அவன் வேறு பெண்ணோடு கைப்பிடித்தப்படி நின்றதை பார்த்து, சாத்விக்கின் தந்தை வசந்தனிடம்,
“என்ன வசந்தன் இது, யார் அந்த பொண்ணு.. உங்க பையன் எதுக்கு அவளுக்காக உருகுறான்..” என்று வீரராகவன் கேள்வியெழுப்பினார்.