தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 11 - சித்ரா. வெ
யாதவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ராகிணி விடாப்பிடியாக அவள் தான் சுடுதண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி அங்கேயே நின்றிருந்தார்.
“அம்மா நீங்க போங்க.. நான் சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வரேன்..” என்று சொல்லிப் பார்த்தாள்.
“இல்லை நீ பாட்டுக்கு நான் போனதும் கேர்லெஸ்ஸா உன்னோட ரூம்ல போய் உக்கார்ந்துக்கிட்டா என்ன செய்றது.. வந்திருக்கவங்க பெரிய மனுஷங்க.. அவங்க முன்னாடி எனக்கு அவமானம் ஆகாதா?” என்றுக் கேட்டார்.
“இல்லம்மா நான் அப்படில்லாம் செய்ய மாட்டேன்.. என்னை நம்புங்க..” என்றதும்,
“அப்போ எதுக்கு தயங்குற.. நான் இங்க இருக்கிறதால உனக்கு என்ன வந்தது..” என்றார்.
“இதற்கு மேல் ஒன்று செய்ய முடியாது.. இன்று விதி சதி செய்கிறது போலும்” என்று நினைத்தவள், வேறு வழியில்லாமல் அவர் சொன்ன வேலையை பார்க்க ஆரம்பிக்க, ராகிணி அவளை குரூரமாக பார்த்தப்படியே,
“தண்ணி நல்லா சூடு இருக்கட்டும், கூட கொஞ்சம் பச்ச தண்ணியும் எடுத்துக்கோ.. வேணும்னா விலாவிக்கலாம்..” என்றார். அவளும் தலையை ஆட்டியப்படியே தண்ணீரை அடுப்பில் வைத்தாள்.
யாதவி பார்ட்டிக்கு வராததற்கு உண்மையிலேயே ராகிணி மகிழ்ந்து தான் இருக்க வேண்டும், ஏனென்றால் பாலாவோ, புவனாவோ, மதுரிமாவோ அவளை பார்ட்டியில் அவர்களில் ஒருவராக தான் நடத்தியிருப்பர். அதைப்பார்த்து அவர் இன்னும் கடுப்பாக தான் ஆகியிருப்பாரர். அதை தவிர்த்து அவள் ஒதுங்கியிருக்காளே என்று அமைதியாக போகாமல், அவளை வேலைக்கரியாக நடத்த வேண்டும் என்று நினைத்தே இப்படி செய்துக் கொண்டிருந்தார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சுடுதண்ணீர் தயாரித்து அதை அதற்குரிய பாத்திரத்தில் ஊற்றிய யாதவி, மீண்டும் ஒருமுறை பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு செல்ல தயங்கவும்,
“இப்படியே நின்னுக்கிட்டு இருந்தா சுடுதண்ணி ஆறிடும், சீக்கிரம் எடுத்துட்டு போ..” என்றவர், அவள் பின்னால் செல்வதற்காக அப்படியே நின்றிருந்தார்.
இனி அவர் விடமாட்டார் என்பது தெரிந்துவிட்டது, ராகிணியிடம் இருந்து அவளை விடுவிக்கவும் இந்த நேரம் யாரும் வரப்போவதில்லை. இனி விதி விட்ட வழி என்று நினைத்து அங்கே செல்வதென்று யாதவி முடிவெடுத்துவிட்டாள்.
அவர்கள் வீட்டிலிருந்து பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு வரும் வழியின் அருகில் தான் விபாகரன், சாத்விக், பாலா, புவனா, மதுரிமா, சுஜனா, அஜய், மஞ்சுளா, அர்ச்சனா மற்றும் அவளது கணவன் என அனைவரும் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
வீட்டு வாசலருகே வரும்போதே அவர்கள் நிற்பது யாதவிக்கு நன்றாகவே தெரிந்தது. அழுதழுது ஏற்கனவே அவள் சோர்ந்து போயிருந்தாள். இதில் பார்க்கவே வேண்டாம் என்று நினைத்தவர்களையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்ற கவலையும் அச்சமும் சேர்ந்ததால் அவள் கைகள் நடுக்கம் கண்டது. நடையில் தடுமாற்றம் இருந்தது. கையில் வேறு சுடுதண்ணீர் இருக்கும் பாத்திரம், அவள் தட்டுதடுமாறி நடந்து வர,
அந்த நேரம் அவள் வரும் திசையை பார்த்து தான் பாலா நின்றிருந்தான். விபாகரனோ அவளுக்கு முதுகு காட்டியப்படி பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
யாதவி வருவதை பார்த்துவிட்ட பாலா, அவள் கையில் எதையோ எடுத்து வருவதை பார்த்து, “தேவி.. ஆனா ரூம்ல ரெஸ்ட் எடுக்காம, அவ இங்க என்ன பண்றா.. அதுவும் என்னத்த கொண்டு வரா..” என்று பாலா பேசவும்,
அவன் தேவி என்று சொன்ன அடுத்த நொடியே, ஏற்கனவே திரும்பிப் பார் என்று மனம் சொல்லிய உந்துதலின் பேரில் திரும்பிய விபாகரன் யாதவியை நேருக்கு நேராக பார்க்க,
அவன் பார்த்துவிட்டான் என்று தெரிந்ததாலோ என்னவோ, கண்கள் இருட்டிக் கொண்டு வந்து அவள் நிலை தடுமாறும் நேரத்தில், பின்னால் வந்துக் கொண்டிருந்த ராகிணி..
“ஏய் தேவி.. என்ன அன்ன நடை போட்டுட்டு வர.. சீக்கிரம் போ..” என்று அதட்டவும், அச்சத்தில் அவள் கைகள் தடுமாறி, பாத்திரம் நழுவி அவள் கைகளிலேயே கொதிக்க கொதிக்க இருந்த சுடுதண்ணீர் பட்டது.
அவள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் போதே அதை கண்டுக் கொண்ட விபாகரன் அவள் அருகில் விரைந்து செல்லவும், அவள் கைகளில் சுடுதண்ணீர் படவும் சரியாக இருந்தது. இதில் வலி பொறுக்க முடியாமல் துடித்தவள், உடல் தளர்ச்சியில் வலியும் சேர்ந்ததால் தடுமாறி விழப் போகவும், விபாகரன் அவளை தாங்கிப் பிடிக்க, அதேநேரம்..
“யாதவி..” என்று சொல்லியப்படி அவள் அருகே வந்த சாத்விக்,
“யாதவி என்னாச்சு..” என்று அவள் கைகளை பிடித்து பார்க்கவும், யாதவியை பார்த்தது, அவள் வலியால் துடித்ததை கண்டு தானே துடித்தது என்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு நொடியில் அடக்கிக் கொண்டு விபாகரன் விலகி நின்றான்.