தன்னை சுற்றி அனைவரும் கேள்விப் பார்வையோடு நின்றிருந்தாலும் யாதவியின் கவனம் அங்கு இல்லவே இல்லை. சிறிது நேரத்திற்கு முன் பார்ட்டியில் நடந்ததை அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் கோபப்படுவான் என்று நினைத்த விபாகரன் அவளை தாங்கிப் பிடித்ததும், நேருக்கு நேராக பார்த்தால் சாபத்தை அள்ளி வழங்குவார் என்று நினைத்த தன் தந்தை பாசமாக பேசியதும், இப்படி அத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் தன்னிடம் அப்படி பேசிய சாத்விக் என்று மூவருமே அவளுக்கு வித்தியாசமாக தான் தெரிந்தனர்.
தன் தந்தை கூட பாசம் காட்டுவது போல் நடந்துக் கொண்டது வேஷம் என்று அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் விபாகரன் துளி கூட கோபமில்லாமல் அவளை தாங்கிப் பிடித்தானே!! அதுவே அவளை கொல்லாமல் கொன்றது. அவனுக்கு அவள் செய்தது அநியாயம் அல்லவா? ஆனால் அது சிறிது கூட அவனை பாதிக்கவில்லையா?
பாதிப்பு இல்லாமல் எப்படி இருக்கும்? கண்டிப்பாக இருக்கும், அதனால் தான் அதன்பிறகு அவளை தெரியும் என்பது போல் அவன் காட்டிக் கொள்ளவில்லை. அதுவே ஒருவகையில் அவளுக்கு நிம்மதியை தந்தது.
விபாகரன் அவளை பார்த்தால் கோபப்படுவான், ஏதாவது கடினமான வார்த்தைகளில் பேசுவான் என்று நினைத்தது போல் சாத்விக் ஒருவேளை அவளை நேராக பார்த்தால் அவளிடம் பேசுவானா? என்பது கூட சந்தேகமாக தான் இருந்தது.
ஆனால் இன்று அவன் அப்படி நடந்துக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அன்று அவன் பேசியதற்கும் இன்று அவன் நடந்துக் கொள்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தது. அது எதனால்? என்பது தான் அவளுக்கு புரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவளது தந்தையை ஏன் அவன் தன்னோடு வைத்திருக்கிறான் என்றும் புரியவில்லை. இன்று இவர்களையெல்லாம் சந்தித்தது நல்லதுக்கா? கெட்டதுக்கா? எதுவும் புரியாத குழப்பத்தில் அவள் இருந்தாள்.
தங்களின் கேள்விகளுக்கு யாதவி பதிலளிக்க வேண்டும் என்பதை விட, புவனா பதிலளிக்க வேண்டும் என்று தான் பாலாவோடு சேர்த்து இரு பெண்களும் எதிர்பார்த்தார்கள்.
புவனாவின் நடவடிக்கைகளே முன்பே அவருக்கு யாதவியை பற்றி தெரிந்திருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இதுவரை ஏன் அதைப்பற்றி அவர் சொல்லவில்லை என்பது தான் பாலா மற்றும் மதுரிமாவின் மனதில் கேள்வியாக எழுந்தது.
“தேவி கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடு..” என்று அவளிடம் சொல்லிவிட்டு, மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தப்படியே அவர் அறையை விட்டு வெளியேற மற்றவர்களும் அவர் பின்னாலேயே வந்தனர்.
அவர்கள் பார்வைக்கான அர்த்தம் புரிந்த புவனாவோ, “தேவி தனத்தோட பொண்ணு கிடையாதுன்னு எனக்கு அவங்க இங்க வந்த கொஞ்ச நாளிலேயே தெரியும்.. அவளுக்கு அப்பா இருக்கார், அவரோட இருந்தா அவளுக்கு பாதுகாப்பு இல்லன்னும் தெரியும், அவளோட உண்மையான பேர் யாதவி என்பதும் தெரியும்.. அப்போதைக்கு அதை யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டிய அவசியம் வந்ததில்லை.
மத்தப்படி தேவியைப் பற்றி வேற ஒன்னும் தெரியாது.. ஏன்னா அவளைப்பத்தி தெரிஞ்சிக்க ஒன்னும் இல்லன்னு தான் நான் நினைச்சேன்.. அதுக்கேத்தாப் போல அவ யாதவிங்கிறது ஸ்கூல், காலேஜ் சர்டிபிகேட்ல இருந்ததே தவிர, நம்ம எல்லோருக்கும் தேவியா தனத்தோட பொண்ணா தான் இருந்தா,
ஆனா இன்னைக்கு தான் அவ யாதவியா அவங்க அம்மாவை நினைச்சு அழுதா, காரணம் அவங்க அப்பாவ பார்த்ததா இருக்கும்னு எனக்கு ஒரு யூகம்.. எனக்கும் அவளோட கடந்த காலத்தை தெரிஞ்சுக்கணும்னு இருக்குன் தான், ஆனா அதுக்கு தகுந்த நேரம் இது இல்ல.. தேவி கொஞ்சம் குழப்பத்துல இருந்து தெளியட்டும் அப்புறம் இதைப்பத்தி கேட்போம்..” என்று அனைவரையும் பார்த்து கூற, அவர்களுக்கும் அது சரியென்றுப்பட்டது.
மறுநாள் காலை விடியல் பாலா குடும்பத்தாருக்கு நல்லப்படியாக அமையவில்லை. நேற்று நடந்த பார்ட்டியை குறித்து பத்திரிக்கைகளில் என்னென்னவோ எழுதியிருந்தனர். யாருக்கு யாரோடு திருமணம் என்ற தலைப்பில்,
தமிழ் திரைப்பட முன்னனி நடிகர் சாத்விக்கும் முன்னனி நடிகை மதுரிமாவும் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர்கள், இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் திரைப்பட வட்டாரத்தில் பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்க, சில நாட்களுக்கு முன் சாத்விக்கிற்கும் தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் என்று திரைப்படத் தயாரிப்பாளரும் சாத்விக்கின் தந்தையுமான வசந்தன் அறிவித்தார். அது குறித்து சாத்விக் இன்னும் எந்த அறிவிப்பும் கொடுக்காத நிலையில்,
நேற்று நடந்த தொழில் துறை சம்பந்தமான பார்ட்டியில் சாத்விக் கலந்துக் கொள்ள, கூடவே அந்த பார்ட்டியில் சாத்விக்கை மணக்க இருந்த தொழிலதிபரின் மகளும், மற்றும் நடிகை மதுரிமாவும் கலந்துக் கொண்டனர். ஆனால் சாத்விக்கின் பார்வை இந்த இருப் பெண்களையும் விடுத்து புதிதாக ஒருப் பெண்ணின் மீது விழுந்துள்ளது. அந்த பெண் சாத்விக்கின் தோழி என்று தகவலும் கிடைத்துள்ளது.
இது ஒருப்பக்கம் நடக்க, மதுரிமாவோ சாத்விக்கை விடுத்து புதிதாக ஒரு இளம் தொழிலபதரின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், மதுரிமாவின் பர்வை இப்போது சாத்விக்கை விடுத்து அந்த தொழிலதிபரின் மீது திரும்பியுள்ளதாகவும் தெரிகிறது. சாத்விக்கும் மதுரிமாவும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது ரசிகர்களின் விருப்பமாக இருக்க, இப்போதோ யார் யாரை மணக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. என்பது போல் செய்தி வெளிவந்திருந்தது.
பொதுவாக இது போல செய்திகளை மதுரிமாவும் சரி மற்றவர்களும் சரி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் தான், ஆனால் இன்றைய செய்தியை பார்க்கும்போது எப்படித்தான் இதுபோல் எல்லாம் எழுத தோன்றுகிறதோ என்று தான் நினைக்க தோன்றியது. அதுவும் யாதவியையும் இதில் இழுத்திருந்ததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விபாகரனை மணக்க மதுரிமாவும், ஏன் புவனா, பாலா கூட அதற்கு ஆசைப்பட்டிருந்தாலும், அவன் பின்னால் மதுரிமா சுற்றியது போல் எழுதியிருந்ததும் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும் இதெல்லாம் அவர்களுக்கு பழக்கப்பட்டது தான், இருந்தும் யாதவிக்கு இதெல்லாம் புதியது என்பதால் அவளிடம் இந்த செய்தித்தாளை காட்ட வேண்டாம் என்று புவனா அனைவரிடமும் சொல்லி வைத்திருந்தார்.