“அப்போ ஏன் நேத்து தேவியை பார்த்தும் எதுவும் பேசல.. அவளும் உன்கிட்ட பேசலயே..”
“அவளுக்கு என்னை தெரிஞ்சிக்கிட்டதா காட்ட இஷ்டம் இல்ல போல.. அதனால எனக்கும் இல்ல.. அதான் அமைதியா இருந்தேன்..” என்றவன்,
“இதுக்கும் மேல இதைப்பத்தி பேசறதுல எனக்கு விருப்பம் இல்ல..” என்று கூறினான்.
“சரி அதைவிடு.. இந்த பிரச்சனைக்கு வா.. ராகிணி அத்தை செஞ்சது தப்பு தான்.. நான் இல்லன்னு சொல்லல.. அதுக்காக இதெல்லாம் பெரிய தண்டனை.. இதுல அவங்களுக்கு மட்டுமில்ல, எனக்கு ரூபினிக்கெல்லாம் மன உளைச்சல்.. அதனால இதை சரிப் பண்ணிக் கொடு..” என்று பாலா கேட்கவும்,
“கொஞ்சமாவது அவங்க கஷ்டம் அனுபவிக்கணும் டா.. அப்புறம் தான் இதுல ஏதாவது செய்ய முடியும்..” என்று விபாகரன் கூறினான்.
“இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு கூட அவங்களுக்கு தெரியாதே, அப்புறம் அவங்க அதை உணருவாங்களா?”
“அதான் உனக்கு தெரிஞ்சிடுச்சே.. நீயே சொல்லு.. அப்போயாச்சும் மாறுவாங்களான்னு பார்க்கலாம்..” என்றவன்,
“நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. அப்புறம் பேசுறேன்..” என்று சொல்லி அழைப்பை அணைத்தான்.
விபாகரன் சொன்னது போல் தன் மாமியார் கொஞ்சம் அவஸ்தை படட்டுமே என்று தோன்றினாலும், மகன் இல்லாததால் அவன் தான் முன்னின்று அனைத்தையும் செய்ய வேண்டும், அதுவும் இது சாதாரண பிரச்சனியில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினான்.
அந்த நேரம் புவனா அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டார். அவரும் தொலைக்காட்சி மூலமாக விஷயத்தை கேள்விப்பட்டவர், அதைப்பற்றி அவனிடம் விசாரித்தார்.
அவனும் விபாகரனால் தான் பிரச்சனை என்பதை சொல்லாமல், இது சதி வேலை என்பதாக கூறினான்.
சரியென்று கேட்டுக் கொண்டவர், “பாலா.. இந்த விஷயம் ரூபினிக்கு தெரியுமா?” என்றுக் கேட்டார்.
“தெரியும் ம்மா.. ஷாப்பிங்க் காம்ளஸ்ல டிவில பார்த்திருப்பா போல.. நேரா அங்க இருந்து அவங்க வீட்டுக்கு வந்துட்டா.. நான் அப்போ அங்க தான் இருந்தேன்..” என்ற தகவலை கூறினான்.
“என்னப்பா சொல்ற.. ரூபினியோட தேவியும் ஷாப்பிங் மால் போனாலே.. ரூபினி அவங்க வீட்டுக்கு போயிருக்கான்னா, இந்நேரம் தேவியும் வீட்டுக்கு வந்திருக்கணுமே.. ஆனா வீட்டுக்கு வரலையே.. அவ போனை கூட வீட்லயே வச்சிட்டு போயிட்டாளே..” என்று பதட்டத்தோடு கூறினார்.
“என்னம்மா சொல்றீங்க..” என்று அதிர்ச்சியான பாலாவும்,
“ஒன்னும் பதட்டப்படாதீங்கம்மா.. நான் ரூபிக்கிட்ட என்னன்னு கேட்டுட்டு சொல்றேன்..” என்றவன், அடுத்து உடனே ரூபினிக்கு அழைத்தான்.
அவள் அழைப்பை ஏற்றதும், “ஆமா தேவியும் உன் கூட ஷாப்பிங்க் மால் வந்தாளாமே.. நீ அங்க போயிட்ட.. ஆனா தேவி இன்னும் விட்டுக்கு போகலையே..” என்றுக் கேட்டான்.
பிறந்த வீட்டில் நடந்த பிரச்சனையில் அதை மறந்து போனவள், “இப்போது இதற்கு வேறு என்ன சொல்லப் போகிறானோ..” என்ற பயத்தோடு,
“தேவியை உங்க ப்ரண்டோட தங்கை அர்ச்சனா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க..” என்றாள்.
“ஒருவேளை அவர்களுக்கு தெரிந்தவள் என்பதால் அழைத்து சென்றிருக்கிறார்களா?” என்று நினைத்தவன், “எதுக்காக?” என்றுக் கேட்டான்.
“அவங்க வீட்ல வேலை செய்ற ஆள் வரலையாம் அதான் கூட உதவியாக இருக்க கூப்பிட்டு போயிருக்காங்க..” என்று ரூபினி சொல்லவும்,
“அறிவிருக்கா உனக்கு.. அவங்க கூப்பிட்டா அனுப்பிடுவியா? முதலில் தேவியை வேலைக்காரியா பார்க்கறத நிறுத்து.. நேத்து உங்கம்மா செஞ்ச வேலைக்கு தான் இப்போ இப்படி பிரச்சனையில் மாட்டியிருக்கிறோம்.. இதுல நீ வேறயா..” என்றுக் கோபமாக பேசினான்,
ரூபினிக்கு அவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை. “என்ன பாலா சொல்றீங்க.. எதுக்காக இப்படி நடந்துச்சு..” என்றுக் கேட்டாள்.
“அது ஒன்னுமில்ல விடு..” என்றான்.
“உங்க ப்ரண்டோட தங்கச்சி கேக்கவே தான் அனுப்பிச்சேன்..” என்று அவள் சொல்லவும்,
“யார் கேட்டு இருந்தாலும் தப்பு தான்..” என்றவன், “சரி விடு நான் அவளை கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போறேன்..” என்று சொல்லி அழைப்பை அணைத்தான்.
“ராகிணி அத்தை செய்த தப்புக்கு இப்படி செய்திருக்கிறானே.. இப்போது இவன் தங்கை செய்ததற்கு என்ன செய்வானாம்..?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவனுக்கோ,
அண்ணன் அவளை முக்கியமானவன் என்கிறான், தங்கையோ அவளை வேலைக்காரி போல் அழைத்துச் சென்றிருக்கிறாள். உண்மையில் தேவி இவர்களுக்கு என்ன உறவு வேண்டும். விபா கண்டிப்பாக சொல்லப் பொவதில்லை. தேவியாவது சொல்வாளா? என்று நினைத்துக் கொண்டான்.