தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ
விபாகரன் தான் இந்த வேலையை செய்தது என்று பாலா யூகித்ததுமே, உடனே அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டான். அந்த நேரம் விபா தன் வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தான். பாலா தான் பேசுகிறான் என்று தெரிந்து அவன் அழைப்பை ஏற்றதும்,
“ஏன் டா இப்படி செஞ்ச?” என்ற கேள்வியை தான் பாலா கோபமாக கேட்டான்.
எதற்காக இப்படி கேட்கிறான் என்று விபாவுக்கு புரியவில்லை, “என்னடா சொல்ற.. நான் என்ன செஞ்சேன்..” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
“அவங்க என்னோட மாமியார்னு தெரிஞ்சும் இப்படி செஞ்சுருக்க..” என்று அவன் கோபமாக கேட்டதும் தான் அவனுக்கு விஷயம் புரிந்தது.
அவன் சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டோம் என்று அவன் ஆட்கள் சொல்வதற்கு முன்னரே தன் நண்பன் அதை கண்டுபிடித்து விட்டதை நினைத்து தன் நண்பனை மெச்சிக் கொண்டான்.
“என்னடா அமைதியா இருக்க பதில் சொல்லு..” என்று திரும்ப பாலா கேட்டதும்,
“அவங்க உன்னோட மாமியார் என்பதால் தான் இந்தளவுக்கு செஞ்சுருக்கேன்.. இல்ல தண்டனை இதைவிட அதிகமா இருக்கும்..” என்று விபாகரன் பதில் கூறினான்.
பாலாவிற்கு ஒன்றும் புரியவில்லை, ராகிணி என்ன செய்தார் என்று அவருக்கு இவன் தண்டனை கொடுக்கிறான் என்று நினைத்தவன், அதை வாய்மொழியால் கேட்டான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“அவங்களுக்கு பணம் இருக்குது என்பதால் எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாமா? அவங்க பணம் அவங்களோட.. அதனால எல்லோரையும் அலட்சியமா நினைப்பாங்களா? என்ன வேணும்னாலும் செய்வாங்களா? பணம் இல்லன்னா அவங்களை மரியாதை குறைவா நடத்துவாங்களா?” என்று விபாகரன் சொன்னதும்,
“என்னடா சொல்ற? அவங்க அப்படி என்ன செஞ்சாங்க.. யாரை மரியாதை குறைவில்லாம நடத்தினாங்க..” என்று கேட்டான்.
“அவங்க என்ன செஞ்சாங்கன்னு உனக்கு தெரியாதா? நீயும் அவங்க மேல கோபமா தானே இருக்க..” என்று விபாகரன் கூறியதும்,
“ஆமாம் அவங்க மேல கோபமா தான் இருக்கேன்.. அவங்க தேவிக்கிட்ட நடந்துக்கிட்டதுக்காக கோபமா இருக்கேன்.. அதுக்கும் நீ சொன்னதுக்கும் என்னடா சம்பந்தம்..?” என்று கேட்டவனுக்கு அடுத்த நொடி ஏதோ புரிந்தது போல் இருந்தது.
“தேவியிடம் நடந்ததற்காகவா இவன் இப்படி செய்திருக்கிறான்.. ஆனால் தேவிக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று யோசித்தவனுக்கோ,
நேற்று பன்னீர் விபாவின் அன்னை மஞ்சுவிடம் தெரிந்தது போல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது விபாவிடம் கேட்டதற்கு அவர் முக்கியாமனவர் இல்லை என்று கூறிவிட்டான். அவரை விபாவிற்கு தெரிந்திருக்கிறது என்றால், அப்போது அவரின் மகளான தேவியையும் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தான்.
“உனக்கு தேவியை தெரியுமாடா.. அவக்கிட்ட என்னோட மாமியார் அப்படி நடந்துக்கிட்டாங்கன்னு தெரிஞ்சு தான் நீ இப்படி செஞ்சீயா?” என்றுக் கேட்டான்.
அதற்கு விபா மௌனமாக இருக்க, “நேத்தே தேவியோட அப்பா பன்னீர் உங்கம்மாக்கிட்ட ஏதோ பேச வந்தாரு.. அப்போ அவர் யார்னு கேட்டதுக்கு முக்கியமானவர் இல்லன்னு சொல்லிட்ட.. அப்போ பொய் தானே சொன்ன.. அவர் உனக்கு தெரிஞ்சவர் தானே.. முக்கியமானவர் தானே..” என்று கூறினான்.
“இப்பவும் சொல்றேன்.. அவர் எனக்கு தெரிஞ்சவர் தான்.. ஆனா முக்கியமானவரெல்லாம் இல்ல..”
“முக்கியமானவர் இல்லன்னு தான் தேவியை கஷ்டப்படுத்தினாங்கன்னு இப்படி செஞ்சீயா?”
“நான் அப்பாவை தானே முக்கியமானவர் இல்லன்னு சொன்னேன்.. பொண்ணை சொல்லலையே..”
“அப்போ தேவியை உனக்கு தெரியும்.. அதுவும் அவளுக்கு ஒன்னுன்னா எதையும் செய்யும் அளவுக்கு தெரியும்.. அவ்வளவு முக்கியமான ஆளுன்னா தேவி உனக்கு என்ன வேணும்..?” என்றுக் கேட்டான்.
தொழிலில் மூழ்கிவிட்டதால் அவ்வப்போது இருவரும் பார்த்து பேசிக் கொண்டதில்லை. வெகுநாளுக்கு பிறகு விபாவை இப்போது தான் பார்க்கிறான் என்றாலும், நெருங்கிய நண்பன் என்றால் பாலாவிற்கு எப்போதும் விபாகரன் தான், அதேபோல் விபாவிற்கு பாலா தான், அப்படியிருக்க இதுவரை யாதவியான தேவியைப் பற்றி எதுவும் சொன்னதில்லையே என்று பாலாவிற்கு தோன்றவே அப்படி கேட்டான்.
ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டால் அது விபாகரன் இல்லையே, “யாதவி எனக்கு முக்கியம் தான், ஒரு நல்ல தோழியாக யாதவி எனக்கு முக்கியம்.. போதுமா?’ என்றதோடு முடித்துக் கொண்டான்.