(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 47 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

முதனிடம் கதிர் பேசும்போது, “ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும், மகியின் வீட்டுக்கு வா..” என்று மட்டும் தான் சொல்லியிருந்தார்.

சுடர் குறித்து அவரிடம் அவன் சரியாக பேசுவதில்லை என்பதால், ஏன்? எதற்காக? என்ற கேள்விகளை அமுதன் அவரிடம் கேட்கவில்லை.

இருந்தும் என்னவாக இருக்கும் என்று அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான். ஒருவேளை சுடரொளிக்கு தெரிந்திருக்கலாம் என்று நினைத்தவன், அவளை அலைபேசியில் தொடர்புக் கொண்டு,

“எதுக்காக உன்னோட அப்பா என்னை மகி வீட்டுக்கு வரச் சொன்னார்..” என்றுக் கேட்டான்.

அவளோ அவனிடம் விஷயத்தை கூறாமல், “அது சஸ்பென்ஸ்.. எதுக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா அதுக்கு நீ காத்திருக்கணும்..” என்று பீடிகை போட்டாள்.

“அய்யோ எதுக்கு சஸ்பென்ஸ்ல்லாம் வைக்கிற சுடர்.. விஷயத்தை சொல்லு..” என்று அவன் கூறினாலும்,

“அதெல்லாம் சொல்ல முடியாதே..” என்று அவனை தவிக்க வைத்தாளே தவிர, அருள்மொழியோடு அவனுக்கு திருமணம் செய்ய பேசுவது குறித்து அவனுக்கும் அதில் விருப்பம் இருக்குமா? என்பதை அவள் கேட்க தவறினாள். என்ன இருந்தாலும் அவளும் அவளின் தேவையை  மட்டுமே நினைத்து தன் நண்பனது  விருப்பத்தை கேட்க தவறினாள்.

இங்கே வீட்டில் இலக்கியா அருள்மொழியை டயானா என்று அழைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். பொதுவாக தனியாக இருக்கும் போது தான் அழைப்பாள். பெரியவர்கள் முன்பு அப்படி கூறமாட்டாள். அப்படியிருந்தும் ஒருமுறை பூங்கொடி முன்பு அப்படி அழைத்துவிட்டாள்.

“அது என்ன இலக்கியா, அருளை டயானான்னு கூப்பிட்ற என்ன விஷயம்?” என்று அவர் கேட்க,

தன் அன்னைகள் மூலமாக விஷயத்தை கேள்விப்பட்டு சாதாரணமாக எப்போதும் வருவது போல் தங்கள் வீட்டில் சொல்லிவிட்டு வந்த மலர்க்கொடியும் மணிமொழியும்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அந்த பையன் பேர் சார்லஸ் அமுதவாணன் இல்லையா? அதான் டயானான்னு கூப்பிட்டிக்கிட்டு இருக்கா..” என்று உண்மையை கூறிவிட,

“இலக்கியா.. இப்போ பேச்சளவுல தான் இருக்கு.. இன்னும் அருளுக்கு அந்த பையன் தான்னு முடிவாகாத வரைக்கும் இப்படில்லாம் கூப்பிடக் கூடாது சரியா?” என்று அவளுக்கு புரிய வைத்தார்.

“சரி பெரியம்மா இனி அப்படி கூப்பிடல..” என்றவளுக்கு,

“சார்லஸ் அருளை வேண்டாமென்று சொல்லிவிடுவாரா? என்பது போல் தான் தோன்றியது.

ஆனால் அருள்மொழிக்கோ  இந்த விஷயமாக பேச ஆரம்பித்ததிலிருந்து, அமுதன் என்ன சொல்வானோ என்பது தான் பெரிய விஷயமாக தெரிந்தது. சாதாரணமாக இருவருக்கும் திருமணம் பற்றி பேசியிருந்தால் எதுவும் அவளுக்கு பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தி அவனிடம் கேட்டால் அவன் என்ன சொல்வானோ? அவளைப்பற்றி என்ன நினைப்பானோ? என்ற சிந்தனையிலேயே இருந்தாள்.

அமுதனை வீட்டுக்கு வரச் சொல்லும் நாளும் வந்தது. அன்று அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். மலரும் மணியும் கூட அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே இருந்தனர். எழில், கதிரவனோடு சுடரொளியும் வந்திருந்தாள்.

அமுதன் வந்ததும் அவனை உபசரித்தவர்கள் அங்கேயே கூடியப்படி நின்றிருக்க, “எதுக்கு வரச் சொன்னாங்க.. எல்லோரும் ஏன் இங்கேயே நிக்கறாங்க.. என்ன  விஷயம் பேச கூப்பிட்டிருப்பாங்க..” என்ற சிந்தனையில் இருந்தான்.

சுடரும் அவன் அருகில் தான் நின்றிருந்தாள், அவளிடம் கேட்கலாம் என்று பார்த்தால், அத்தனை பேர் முன்பு எப்படி கேட்பது என்று தெரியவில்லை. மகி ஒரு ஓரமாக நின்றிருந்தான். அதனால் அவனிடமும் கேட்கவில்லை. அருளும் அங்கே தான் இன்னொரு ஓரத்தில் நின்றிருந்தாள். உடன் இலக்கியாவும் நின்றிருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவன் பார்த்ததும் அருள் புன்னகைத்தாள். ஆனாலும் படபடப்போடு நின்றிருந்தாள். அவனை வரச் சொல்லிவிட்டாலும் அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புகழேந்திக்கு தயக்கமாக இருந்தது. கதிரவனோ புகழ் பேசட்டும் என்று அமைதியாக இருந்தார்.

பெரியவர்கள் இருப்பதால் தாங்கள் பேசுவது சரியிருக்காது என்று மகியும் அறிவும் அமைதியாக இருந்தனர். பாட்டிக்கு இதில் உடன்பாடு இல்லையென்பதால் ஏதோ கடமைக்கென்று அமர்ந்திருந்தார். கலை விட்டால் பேசிவிடுவார் தான், ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு எதுவும் தவறாக பேசிவிடக்கூடாது என்பதால், அமுதன் வருவதற்கு முன்பே இந்த விஷயமாக நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று புகழேந்தியும் பூங்கொடியும் கூறிவிட்டனர்.

வரச் சொல்லிவிட்டு அனைவரும் அமைதியாக இருக்கவும், “என்ன விஷயம் பேச என்னை வரச் சொன்னீங்க..” என்று அமுதனே வெளிப்படையாக கேட்டுவிட்டான்.

புகழேந்தி அப்போதும் பேசுவதற்கு தயக்கம் காட்ட, பின் பூங்கொடி தான் பேச்சை ஆரம்பித்தார். “தம்பி அன்னைக்கு வேலை விஷயமா அருளை நீங்க வெளியக் கூட்டிட்டு போனப்போ இங்க அருளை பொண்ணுப் பார்க்க வந்தாங்க தெரியுமில்ல..” என்று அவர் கேட்க,

“ம்ம் மகிழ் சொன்னான் ஆன்ட்டி..” என்று அமுதன் பதில் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.