தொடர்கதை - சிவகங்காவதி - 10 - ஸ்ரீ

“நெய்தல் திணை- கிழவற்கு உரைத்த பத்து
கிழவன் என்ற சொல் தலைவனைக் குறிக்கும். கற்பு வாழ்க்கையில் பரத்தை, தலைவனை எள்ளி நகையாடி உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழவற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பரத்தைக்குச் சிறப்பின்மையால் தலைவன் பெயரால் குறிக்கப்பட்டது. “கண்டிகு மல்லமோ கொண்க நின்கேளே?” என்ற தொடர் பத்துப் பாடல்களிலும் இடம் பெற்றிருந்தாலும் இதனால் பெயர் அமையாது கேட்போரைக் கொண்டு பெயர் குறிக்கப் பெறுவது குறிப்பிடத் தக்கது.
கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே?
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே- (121)
(கண்டிகும் அல்லமோ = நாங்கள் பார்த்ததில்லையா என்ன?; கேள் = உறவு; முண்டகக் கோதை = தாமரை மாலை)
என்ற பாடலில் பரத்தை, தலைவனிடம் தலைவி குறித்துப் பேசிய செய்தி இடம் பெற்றுள்ளது.”
சிவகங்காவதி ரத்தன் சிங்கின் அரண்மனைக்கு வந்து நான்கு தினங்கள் ஆகிவிட்டிருந்தது.இன்னுமும் அவளால் அன்று நடந்ததை நம்ப முடியவில்லை.இலக்கில்லாமல் வெறித்திருந்தவளின் எண்ணங்கள் அன்றைய நாளின் நினைவுகளை சுற்றி வந்தன.
அன்று விருந்து முடியும் வரையிலுமே அமைதியாய் நிமடங்கள் கரைந்தன.வந்த விருந்தினர்கள் அனைவருக்குமே அன்றைய உணவு வகைகள் திருப்தியை அளித்திருக்க அனைவரும் மகிழ்வோடு நஸீமிடம் விடைபெற்றுச் சென்றனர்.
இறுதியாய் நஸீம் அவனது ப்ரத்யேக உரையாடல்கள் நடைபெறும் இடத்திற்கு ரத்தன்சிங்கையும் சிவகங்காவதியையும் அழைத்து பேச ஆரம்பித்தான்.
“இறுதியாய் நீ என்ன சொல்கிறாய் ரத்தன்?இது என் தேசம் இவள் என் கைதி அப்படியிருக்க அவளை விடுவிக்கும் உரிமையை உன் கையில் எடுத்துக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது!”
“நீ கூறும் அனைத்தும் எனக்கும் தெரியும் நஸீம்.அண்டை நாட்டு அரசனாய் அதுவும் சாதாரண சிற்றரசனாய் இருந்து கொண்டு இந்துஸ்தானத்தின் ஆளுநரிடம் இவ்வாறு கேட்பது மிகப் பெரும் குற்றமே!ஆனால் நான் ஆளுநரையும் கடந்த என் பால்ய கால நண்பனிடம் கேட்கிறேன் அதில் ஏதும் குற்றமில்லை அல்லவா?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“அண்ணா… எனக்காக ஏன் தங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறீர்கள்!!தயைகூர்ந்து இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.எனக்கு இங்கு ஒரு குறையும் இல்லை.நான் நன்றாகத் தான் இருக்கிறேன்.”
“நன்றாக இருந்தாலும் நீ கைதி என்பது மாறிவிடாது சிவகங்காவதி.. என் உடன்பிறந்தவளாய் இருந்தால் இப்படி ஒரு சூழலில் உனை அப்படியே விட்டுச் செல்வேனா?என்ன இருந்தாலும் உங்கள் கையால் இரு நாட்கள் முழுதாய் உணவு உட்கொண்டிருக்கிறேன்!
அதுமட்டுமல்லாது இந்த உயிர் இப்போது என்னோடு இருப்பதற்கு காரணம் நீ அந்த நன்றியெல்லாம் மறந்து போய் விடுவேனா??!”,என்றவன் நஸீமை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து நின்றான்.
“நான் நன்றி மறப்பவன் தான் எந்த விதமான குற்றவுணர்வும் என்னிடம் கிடையாது.நீ அதை எதிர்பார்க்கவும் கூடாது.என் குணம் அறிந்துதான் நீ என் நண்பனாய் இருக்கிறாய்.எந்த வித கட்டாயத்தாலும் அல்ல.எனவே உனக்கு விருப்பமில்லை எனில் இப்போதே என்னுடனான நட்பை முறித்துக் கொள் ரத்தன்.”
“நஸீம்!!!இவையனைத்தும் தேவையற்ற பேச்சுகள்?!!”
“எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.உன் உடன் பிறவா சகோதரிக்காக அதிகமாகவே பேசிவிட்டாய் ரத்தன்.இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை.உனக்கே தெரியும் இவ்வுலகில் தாதி அவர்களுக்குப் பின் நான் நட்பு கொள்ளும் ஒரே ஜீவன் நீ மட்டுமே!
ஆனால் உனக்கும் என்னை விட முக்கிமாய் பலர் இருக்கின்றனர் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.இவளை அழைத்துக் கொண்டு இப்போதே சென்று விடு.நான் சற்று நேரம் தனிமையில் இருக்க விழைகிறேன்”,என்றவன் அவர்களுக்கு முதுகுகாட்டி நின்று கொண்டான்.
சிவகங்காவதி ஏதோ கூற வருவதற்குள் ரத்தன் அவளிடம் சம்மிக்ஜை காட்டி தன்னோடு அழைத்துச் சென்றிருந்தான்.அவனிடத்திற்கு வந்த நான்கு தினங்களுமே ரத்தன் சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியது இருந்ததால் சிவகங்காவதியை காண முடியால் போனது.
ஆனால் அவளின் வசதிக்கு குறைவேதுமின்றி பார்த்துக் கொண்டான்.சிவகங்காவதிக்கோ நஸீமின் முகமே மனக்கண்ணில் நிறைந்திருந்தது.அவனை போராளியாய் பிடிவாதக்காரனாய் கோபம் கொள்வனாய் பார்த்திருந்தவளுக்கு இறுதியாய் ரத்தனோடு அவன் சண்டையிட்ட போது தனக்கான பொருளைப் பறித்துக் கொண்டவரோடு வாக்குவாதம் புரியும் குழந்தையாய் தான் தெரிந்தான்.
நான்கு நாட்களுமே அவனின் நினைவு அதிகமாகவே இருந்தது சிவகங்காவதிக்கு.இன்றும் அதே சிந்தனையில் இருந்தவளைப் பணிப்பெண்ணின் குரல் கலைத்தது.
“தங்களைக் காண மன்னர் வந்து கொண்டிருக்கிறார்!!”
தன்னை மீட்டெடுத்தவளாய் இன்முகத்தோடு ரத்தன் சிங்கை வரவேற்று அமர வைத்தாள்.