தொடர்கதை - சிவகங்காவதி - 11 - ஸ்ரீ
“நெய்தல் திணை- பாணற்கு உரைத்த பத்து
அகத்திணையில் சிற்சில சூழ்நிலைகளில் தலைவன் தலைவியரிடையே சந்து (சமாதானம்) செய்விப்போர் வாயில்கள் எனப்படுவர். வாயிலாக உள்ள பாணனிடம் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூற்று நிகழ்த்துவதாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே
- (131)
(தில்லை = ஒரு வகை மரம்; கௌவை = பழிச்சொல்)
என்ற பாடலில் தலைவி, ‘ஊரார் பழிச்சொல் கூறா விட்டால் தலைவனின் நட்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதே’ என்று பாணனிடம் வாயில் மறுக்கும் (மறுத்துரைக்கும்) செய்தி இடம் பெற்றுள்ளது.”
இஷான் நஸீமின் நிலையோ இதைவிட குழப்பமாய் இருந்தது.சிவகங்காவதியை அழைத்துச் செல் என்று கூறிவிட்டானே அன்றி அத்தனை இயல்பாய் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ரத்தன் கேட்கும் போது மறுக்காமல் இருந்ததற்கு இரு காரணங்கள் உண்டு.ஒன்று ரத்தன் அவனின் நெருங்கிய நண்பன் அவன் கேட்டு இவன் இல்லை என்று கூறுவது முடியாத காரியம்.அதைவிட முக்கியமாய் சிவகங்காவதி இங்கு இருந்து அனுபவிக்கும் துயரங்களில் இருந்து விடுபடுவாள்.
அனைத்தும் புரிந்தாலும் ரத்தன் அவளுக்காக இவனிடம் வாதாடும் நேரம் இவள் ஏன் எதுவும் மறுத்துப் பேச மாட்டேன் என்கிறாள் என சம்மந்தமேயின்றி சிவகங்காவதியின் மேல் கோபம் கொண்டான்.
ஏதேதோ சிந்தனைகள் வெகுநேரமாய் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.மாலை சூரியன் மறையும் நேரம் சமீரா தான் அவனைத் தேடி ஆலோசனை கூடத்திற்கு வந்திருந்தார்.
“நஸீம்”
“வாருங்கள் தாதி அவர்களே!”
“நான் வந்து வெகு நிமிடங்கள் ஆகிவிட்டன.அதைக்கூட உணரா வண்ணம் என்ன சிந்தனை நஸீம்?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிரேமாவின் " எதிர் எதிரே நீயும் நானும்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“அது..அதெல்லாம் ஒன்றுமில்லை.தாங்கள் எனை சந்திக்க வந்ததன் காரணத்தைக் கூறுங்கள்.”
“சிவகங்காவதி நம் ரத்தனோடு சென்றுவிட்டாளாமே?கிளம்பும் நேரத்தில் என்னிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றாள்.”
“ஓ..”
ஒன்றும் பேசாமல் அவனருகில் வந்து தோள் பற்றியவர் அவன் முகத்தை வைத்தே மனதைப் படித்திருந்தார்.
“நஸீம் இப்போதும் ஒன்றும் கைமீறிப் போகவில்லை.உன் மனதை அவளிடம் தெரியப்படுத்து.எனக்குப் பின் உன் நலனுக்காக எவ்வித பிரதிபலனும் இன்றி வாழக்கூடிய ஓர் உயிர் உண்டெனில் அது அவளாகத் தான் இருப்பாள்.புரிந்து கொள்!”
“தாதி தாங்கள் கூறுவதனைத்தும் சத்தியம் தான்.என் மனம் இப்போது வெறுமையை உணர்கிறது.ஏனென்று அறியாமல் ஒருவித கலக்கம்.அப்போதே அவள் மீதான என் அன்பு எனக்குப் புரிந்துவிட்டதுதான். ஆனால்,அவளிடம் என் விருப்பத்தை தெரிவித்து என்னால் அவள் அனுமதிக்காக காத்திருப்பது என்பதெல்லாம் நடக்காத காரியம்.
இந்த நஸீம் யாரிடமும் யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும் என்பதை தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.கூடிய விரைவில் நல்ல செய்தியை உங்களிடம் தெரிவிக்கிறேன்.சற்று கால அவகாசம் தாருங்கள்.”
“நல்லது நஸீம்!!நீ இத்துனை இறங்கி வந்ததே எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.அல்லாஹ் உனக்கு நல்வழி காட்டட்டும்”
அன்றிலிருந்து தீவிர சிந்தனையில் இருந்தவன் இரு தினங்களில் பலவாறு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தான்.அதன்படி சமீராவிடம் தன் முடிவைத் தெரிவித்தவன் அவரின் ஆசிகளோடு ரத்தன் சிங்கின் இடத்திற்கு பயணத்தைத் தொடங்கினான்.
அதற்குள் அவன் வரும் செய்தி ரத்தன்சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது.அவன் சிவகங்காவதியிடம்,
“பார்த்தாயா இதுதான் எங்களின் கோபமெல்லாம்,ஆனால் ஒரு நல்லது உன்னால் நேர்ந்திருக்கிறது என் நண்பன் முதல்முறை என்னிடத்திற்கு வருகிறான்.அவனை வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்.”
என்று அவன்போக்கில் உரையாடிக் கொண்டிருக்க சிவகங்காவதிக்கோ அவன் சாதாரணமாய் இங்கு வரவில்லை என்றே தோன்றியது.இருந்தும் என்ன செய்வான் என்று அவளால் கணிக்க முடியவில்லை.எது எப்படியிருப்பினும் நாளை அவன் வந்தபின்பு அனைத்தும் தெரிந்துவிடத்தான் போகிறது என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
மறுதினம் ரத்தனின் இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.அரண்மனை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விதவிதமான உணவுகள் தயார்செய்யப்பட்டன.சிவகங்காவதிக்கு கூட புது உடைகளும் ஆபரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.