(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

யாதவி தன் மனைவியென்று விபாகரன் சொன்னதை கேட்டு சாத்விக் மட்டும் அதிர்ச்சியாகவில்லை, மஞ்சுளா, அர்ச்சனா, அர்ச்சனாவின் கணவன் விஜயை தவிர, அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியாகினர். விஜய்க்குமே கூட விபாகரனுக்கு திருமணம் ஆன செய்தி தெரியுமே தவிர, அவன் மனைவி யாரென்று தெரியாது, விபாகரன், யாதவி திருமணம் நடக்கும் போது அவன் துபாயில் இருந்தான். யாருக்கும் சொல்லாமல் நடந்த திருமணம் என்றாலும், வீட்டு மாப்பிள்ளைக்கு சொல்ல வேண்டுமென்று அவனுக்கு மட்டுமே சொல்லியிருந்தனர். மற்ற யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னதால் அவன் தன் அன்னையிடமோ அஜயிடமோ கூறவில்லை,

அதன்பின்னரும் ஒருநாள் கூட முழுமையாக கணவன், மனைவியாக தங்கள் வாழ்க்கையை விபாகரனும், யாதவியும் வாழாததால், விஜயால் அதை ஒரு திருமணமாகவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் அதன்பின்னும் அந்த திருமணத்தை பற்றி யாருக்கும் அவன் சொல்லவேயில்லை. மஞ்சுளாவிற்கும் அர்ச்சனாவிற்கும் கூட அப்படித்தான், தாலிக்கட்டிய கணவனை விட்டு இன்னொருவனை தேடிச் சென்றவளை அந்த வீட்டு மருமகள், விபாகரனின் மனைவி என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு பிடிக்கவில்லை, விபாகரன் தன் மனதிற்குள்ளேயே இத்தனை நாள் யாதவியின் ஞாபகங்களை ஒளித்து வைத்திருந்ததால், அவனுக்கு திருமணம் ஆன செய்தி யாருக்குமே தெரியாமல் போனது.

ஒருப்பக்கம் வீரராகவனுக்கும் விபாகரனுக்கும் சம்பந்தப்பட்ட வியாபர துறையில் இருப்பவர்கள், இன்னொருப்பக்கம் சாத்விக்கிற்கு சம்பந்தப்பட்ட சினிமா துறையில் இருப்பவர்கள் என்று அங்கு சூழ்ந்திருந்தவர்கள் இந்த செய்தியை கேட்டு தங்களுக்குள்ளே பேசிக் கொள்ள அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

யாதவி தன்னிடம் சொன்னதை மதுரிமா பாலாவிடம் சொல்லியிருந்தாலும், விபாகரன் யாதவியை மிகவும் நேசிப்பதாக தான் பாலா யூகித்திருந்தான். இப்போது பார்த்தால் இருவருக்கும் திருமணமே முடிந்துவிட்டதை அவனால் நம்பவே முடியவில்லை, அவனுக்கே இது அதிர்ச்சியாக இருக்க, விபாகரனை நேசிக்க ஆரம்பித்திருக்கும் தங்கையின் மனது என்ன பாடுபடும் என்பதை புரிந்து அவன் உடனே மதுரிமாவை பார்க்க, அவள் முகத்திலும் வலியின் சாயல் நன்றாகவே தெரிந்தது.

இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்த்திருக்கவேயில்லை, யாதவி முழுமையாக அவள் வாழ்க்கையில் நடந்ததை சொல்வதற்கு முன் தானாக ஒன்றை நினைத்துக் கொண்டு இத்தனை தூரம் வந்துவிட்டதை நினைத்து அவளுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.

ஆனாலும் இப்படித்தான் நடந்ததா? என்று தன் யூகத்தை சொன்ன போது ஆமாமென்று தலையை ஆட்டினாளே, அப்போது கூட விபாகரனுடன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஏன் சொல்லவில்லை, அப்படி சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆகியிருக்காது இல்லையா? என்று அவள் மனம் யாதவியை குற்றம் சாற்றினாலும்,

விபாகரனுடன் திருமணம் ஆனபின்பு தான் அவள் சாத்விக்கை தேடி வந்திருக்கிறாள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, என்ன இருந்தாலும் நடந்த திருமணத்தை ஒதுக்கி காதலனை தேடி வந்தால், அது மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளும் செயலா? அது புரியாமல் அவளை இப்படி ஒரு சங்கடமான சூழலில் நிறுத்திவிட்டோமே என்று மதுரிமா தன் மீதே கோபப்பட்டுக் கொண்டாள்.

ஆனாலும் கெட்டதிலும் நல்லது என்பது போல் இப்போதாவது யாதவிக்கு திருமணம் நடந்த விஷயம் தெரிய வந்ததே, இல்லையென்றால் இதற்கு முன்பு இருந்த நிலையே நீடித்திருந்தால் அது யாதவி, விபாகரபனுக்கு மட்டுமல்ல, அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன விஷயம் தெரியாமல் அவர்களை நேசித்துக் கொண்டிருந்த தனக்கும் சாத்விக்கிற்கும் கூட ஒருவிதத்தில் மனதில் வேதனை இன்னுமே அதிகரிக்கும் சூழலாக கூட அமைந்திருக்கலாம் என்று தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டாள். ஆனாலும் இப்போதும் அதே வேதனையை தானே மனம் சுமந்திருக்கிறது. இப்போதும் உயிர் போகும் வேதனையை தானே அவள் அனுபவிக்கிறாள். அதை இல்லையென்று சொல்லிட முடியுமா?

அஜய்க்கும் சுஜனாவிற்கும் சாத்விக்கை நினைத்து பாவமாக இருந்தாலும், தன் மனைவியோடு இன்னொருவன் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்ததை நினைக்கு போது விபாகரனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து அவனுக்காகவும் வருத்தப்பட்டனர்.

இதில் ஏற்கனவே சாத்விக்கோடு நிச்சயம் செய்ய இருந்ததற்கே அவளுக்கு வந்த வாழ்வை பார் என்று நினைத்து பெருமூச்சு விட்ட ராகிணியும் ரூபினியும் இப்போது யாதவி விபாகரனின் மனைவி என்றதில், இன்னும் வாயைப் பிளக்காத குறை தான், ஆனாலும் கணவனை விட்டு ஓடி வந்துவிட்டாளா? என்று அவளை கீழிறக்கமாக தான் நினைத்தனர். ஆனாலும் அதை வெளியில் சொல்ல முடியாதே, அவள் இப்போது விபாகரனின் மனைவியாயிற்றே அதனால் அமைதியாக வேடிக்கைப் பார்த்தனர்.

வசந்தனுக்கோ சற்று நேரத்திற்கு முன் விபாகரன் சொன்னதற்கான அர்த்தம் இப்போது தான் புரிந்தது. இனி யாதவிக்காக காத்திருக்கிறேன் என்று மகன் உளரமாட்டான் என்று மனம் நிம்மதியடைந்தாலும், யாதவிக்காக சுஜனாவை விட்டுக் கொடுத்துவிட்டானே, இனி இன்னொரு பெண்ணை பார்க்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.