தொடர்கதை - காணாய் கண்ணே - 17 - தேவி
இளவரசரின் திகைப்பைக் கண்டு ஆச்சர்யமுடன் கிரன்தேவி பார்த்துக் கொண்டு இருக்க, கிருத்திகாவிற்கு விழிப்பு வந்து விட்டது.
கிருத்திகா மனதுக்குள் “என்ன கொடுமைடா சரவணா இது? இண்டரெஸ்ட்டிங்கா போகும்போது முழிப்பு வந்துடுது. “ என்று நொந்து நூடில்ஸ் ஆனாள்.
அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல், இதுவரை வந்த கனவுகளைத் தொகுத்துப் பார்த்தாள். அந்தக் கனவுகள் வந்த சமயங்களை ஆராய்ந்தால், நிஜத்தில் நடந்த ஒரு சில சம்பவங்களும், கனவுகளில் வந்த சம்பவங்களும் ஒன்றாக இருந்தது. அவை எதுவும் செய்தி சொல்கிறதா, அல்லது இவை எல்லாம் தற்செயல் தானா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
அதிலும் அவள் செல்லும் இடங்களும், கனவுகளில் வரும் இடங்களும் ஒன்றாக இருப்பது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை இது சரித்திர கதைகள் படிப்பதால் வரும் பாதிப்பா என்று தோன்றினாலும், ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டில் படித்ததால், தமிழ் சரித்திரக் கதைகளில் தான் ஆர்வம் அதிகம். சேர, சோழ பாண்டியர்கள் கதைகள் தேடி எடுத்துப் படிப்பவளுக்கு, வட இந்திய மன்னர்கள் பாடப் புத்தகத்தில் மட்டுமே பரிச்சயம்.
இங்குள்ள சிலபஸில் அசோகர் இடம் பெற்ற அளவு வீர சிவாஜி கூட இடம் பெற்றதில்லை. ஏதோ பெயரளவில் தெரியும்.
இவள் கனவுகளில் வரும் காட்சிகளும், இடங்களும் இவள் கற்பனையில் கூட கண்டதில்லை. ராஜபுத்திரர்கள் எல்லாம் இவளின் கட்டிடக் கலை படிப்பில் அறிமுகமானவர்களே. அதுவும் கட்டிடக் கலை சம்பந்தப்பட்ட விஷயங்களே இருக்கும். அவர்கள் வரலாறு எல்லாம் இல்லை.
எனில் எப்படி இவளுக்குக் கனவுகளாகத் தோன்றுகிறது என்ற சிந்தனை ஓடியது. என்ன யோசித்தும் புரியவில்லை.
அதற்குள் அவள் மனசாட்சி “ஹலோ மேம்.. நாம எக்ஸாம் எழுதவே இவ்ளோ யோசிக்க மாட்டோமே. என்னவோ நோபல் பரிசுக்கு ரிசர்ச் பண்ற மாதிரி எதுக்கு இந்த பில்ட் அப்? நமக்கு எது வருமோ அதப் பார்ப்போம் வா” என்றது.
“வொய்.. வொய்.. நான் நோபல் பரிசு வாங்க மாட்டேனா?” என்று இவள் தன் மனசாட்சியிடம் சண்டை போட,
“அடப் பாவமே. உனக்கு என்ன அந்த நோபல் பரிசு மேலே காண்டு. நீ எல்லாம் பரிசு வாங்கினா, அந்தப் பரிசே தும்பைப் பூவிலே தூக்கு மாட்டிக்கும்”
“ச்சே.. கிரேட் இன்சல்ட்”
“நானே உன்ன இன்சல்ட் பண்ணிட்டா உனக்கு நல்லது. வெளிலே யாருக்கும் தெரியாது. இதே நீ போய் ராகவிக் கிட்டே சொன்னா, அவள் கிழிக்கிற கிழியிலே, உன் மானம் ராக்கெட் இல்லாம பறக்கும் பார்த்துக்கோ” என்று மனசாட்சி மிரட்டவும்,
“ஆத்தி. நினைச்சுப் பார்க்கவே ரொம்பக் கொடுமையா இருக்கே. நோ. நோ. மனசாட்சி நீ சொல்றதக் கேக்கறேன். போ. போ. “ என்று சூனா பானா வடிவேலு ஸ்டைலில் விரட்டி விட்டாள்.
இந்த யோசனைகளில் விடிந்து இருக்கவே, அன்றைய நாளைத் தொடங்கினாள்
அன்றைக்குக் காலையில் ஜெய்சல்மர் அருகே உள்ள கடிசார் ஏரிக்குச் சென்றனர். ராஜ ராவல் ஜெய்சல் உருவாக்கின அந்த ஏரியை அதன் பின்னர் வேறு ஒரு ராஜா புதுப்பித்து இருக்க, ராஜாவின் பெயரால் அந்த நகரமே ஜெய்சல்மர் என்ற அழைக்கப் பட்டது. அந்த நகரம் முழுதும் மஞ்சள் நிற சலவைக் கற்கள் கொண்டு அமைக்கப் பெற்றது. பார்க்க பார்க்க அதன் அழகு தெவிட்டவில்லை.
அந்தக் கற்கள் ஒரு ராயல் லுக் கொடுத்ததால் , சுற்றிப் பார்த்த மாணவர்கள் அதை எங்கே உபயோகப் படுத்தலாம் என்று டிஸ்கஸ் செய்தனர். அவர்களோடு வந்த ப்ரொபர்களும் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல ஸ்டுடென்ட்ஸ் கேட்டுக் கொண்டனர். ப்ரோப்சர்ஸ் இந்தக் கல்லின் சிறப்பைப் பற்றி நீங்க டீல் செய்யும் கஸ்டமரிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று எல்லாம் கூற,
அதற்கு கிருத்திகா வாயைத் திறக்காமல் ராகவியிடம்
“இது என்ன KPJலே விக்கிற அதிர்ஷ்டக் கல்லா ? மோதிர விரலில் மாட்டினால் செல்வம் சேரும்ன்னு சொல்றதுக்கு. “ என்றுக் கடிக்க, ராகவியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அவளைப் போலவே ராகவியும் “தெய்வமே. உன் திருவாயைக் கொஞ்ச நேரம் க்ளோஸ் பண்ணிக்கோ. இங்கே சிரிச்சு வச்சேன், என் இன்டர்னல் மார்க் சிரிப்பா சிரிச்சுரும். ப்ளீஸ். மீ பாவம்” என்றுக் கெஞ்சவும், அபயம் அளிப்பதைப் போல் கை காட்டினாள்.
கடிசார் லேக் பார்த்து விட்டு, ஜெய்சல்மர் கோட்டையைப் பார்த்தனர். உலகில் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்று என்பதால், அதன் சிறப்பை ஒவ்வொரு இடமும் விடாமல் ரசித்தனர். மாலை மங்கும் நேரம் சிறிது தூரம் ஒட்டகச் சவாரியும் சென்று வந்தனர்.
அன்றைக்கு முழுதும் ப்ரித்வியின் கண்கள் தங்கள் குழுவைத் தொடர்ந்து வருபவர்களைச் சல்லடைப் போட்டு சலித்தது. யாரையும் வித்தியாசமாகக் காண முடியவில்லை.
அவன் எண்ணம் முழுதும் கிருத்திகாவைத் தொடர்பவனில் அந்த செல்வம் மட்டும் கண்களில் பட வில்லை. இரண்டு முறை பிடிபட்டவர்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.