(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 14 - ஸ்ரீ

sivaGangavathy

நெய்தல் திணைநெய்தற்பத்து

இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும்

கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை

வைகறை மலரும் நெய்தல் போலத்

தகை பெரிது உடையகாதலி கண்ணே! -188

கழியில் மேயும் இறா மீன்களைப் பறவைகள் வயிறார உண்ணும் துறை கொற்கைத்துறை. அது கொற்கைக் கோமான் பாண்டியனுக்கு உரியது. அந்தத் துறையில் வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் போன்று தகைமையில் சிறந்து விளங்குவது காதலியின் கண்.

சிவகங்காவதி அறையிலிருந்து வெளியேறியே பின்னும் நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருந்தான் நஸீம்.அவனால் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அவள் ஒன்றும் கூறாமல் இருந்திருந்தால்கூட மனம் மகிழ்ந்திருக்கும்.

எப்போதும் போல் தான் இப்போதும் வரைந்தேன் எனக் கூறக் கேட்டவனுக்கு அப்படியாய் ஒரு ஏமாற்றம்.தான் என்ன நினைக்கிறோம்,சிவகங்காவதியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்று எதுவுமே புரியவில்லை.

அப்போது தான் அவனுக்குத் தோன்றியது என் அன்பை நான் வாய்மொழிந்து கூறாத பொழுது அவள் மட்டும் எப்படி தன் விருப்பத்தை வெளிப்படையாய் கூறுவாள்.

ஏன் அவளருகில் என் வசமிழந்து நின்ற அந்த நிமிடங்கள் போதாதா என் அன்பை உணர்ந்து கொள்வதற்கு?

எந்த ஒரு ஆண்மகனும் அவள் போன்ற மங்கையிடத்தில் தன் வசம் இழந்து தான் நிற்பான்.இதில் எப்படி அவள் அன்பை உணர முடியும்?

அப்படியானால் ஒரு வேளை அவள் மேல் கொண்ட இச்சையால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று எண்ணியிருப்பாளோ!!?

இச்சையா??!!!என் கங்காவின் மீதா??என்னால் அப்படி சிந்திக்க கூட இயலுமா??அவள் என்னவள் அந்த உரிமையை அன்றி அவளை வேறொரு எண்ணத்தால் எப்படி என்னால் பார்க்க இயலும்? எந்த ஒரு பெண்ணையுமே அப்படி பார்க்க நினைக்காத எனக்கு கங்காவை மட்டும் அவ்வாறு காண இயலுமா!!

யா அல்லாஹ் இதென்ன என்னுள் முதன்முறையாய் இத்துனை தடுமாற்றம். அவள் மீதான காதலும் அன்பும் கரைகடந்து இருந்தும் அதை அவளிடம் வெளிக் கொணர முடியாமல் தவிக்கிறேனே!

என்னுடைய பாரா முகத்தால் வருத்தப்பட்டிருப்பாளோ என்ன செய்து கொண்டிருப்பாள்!!!”இப்படி பலவகையான சிந்தனைகளில் கரைந்துகொண்டிருக்க அங்கு சிவகங்காதியோ தனதறையின் படுக்கையில் விழுந்தவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைஅறியாமல் குழம்பித் தவித்தாள்.

“இஷான் என்னிடம் ஏன் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார்.அவர் கண்களில் தெரிந்த ஏதோ ஓர் உணர்வு எனை அவர்முன் பலமிழக்கச் செய்கிறது.ஆனால் ஏன்!!எங்களின் திருமணம் கட்டாயத்திற்காக நடந்த ஒன்று அப்படியானால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கணவராய் அவர் உரிமையை நிலைநாட்டப் பார்க்கிறாரா?

இல்லையேல் அவரது கொள்கைப் பற்றி ரத்தன் அண்ணா கூறினாரே அதனால் வேறு வழியின்றி என்னோடு நன்முறையில் நடக்க விருப்பம் கொள்கிறாரா??!அதுவும் இல்லையெனில் கணவனாய் உரிமை எடுத்து எனை பழிவாங்குவதற்காக???!!!

ஈசனே என்ன இது இத்துனை கீழ்த்தரமாய் எண்ணங்கள் கொள்கிறேன்.கைதியாய் எனை வைத்திருந்த போதே தவறான ஒரு பார்வை கூட படவிடாதவர் அவரைப் பற்றி இப்படி எண்ணிணால் என் ஈசனே எனை மன்னிக்கமாட்டார்.

அனைத்தும் போகட்டும்,அவர் அப்படி என்னை நெருங்கி நின்ற வேளையில் நான் மட்டும் அதை தடுக்கவா செய்தேன்?!இஷானிடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் இது சாத்தியமா?அத்தனையும் கடந்து நான் வரைந்த சித்திரம்!¡!

அது எப்படி என்னால் முடிந்தது ஒரு சில நொடிகளில் காணும் காட்சி இத்துனை கச்சிதமாய் வரைவதில் சாத்திமிருக்கிறதா?இதுவரையில் ஈசனின் உருவத்தை அன்றி நான் எதையுமே  இவ்வாறு வரைந்ததில்லையே.அப்படியெனில் அதன் அர்த்தம் என் மனதில் அவர்!!

வேகமாய் தன்னிடத்திலிருந்து எழுந்து அமர்ந்தவள் வெளியில் வெறித்திருக்க மெதுவாய் அங்கு நின்று மரங்களின் அசைவையும் காற்றின் சங்கீதத்தையும் தனக்குள் சுகித்துக் கொண்டாள்.மீண்டுமாய் எண்ண அலைகள் அவளை சுழற்ற ஆரம்பித்திருந்தது.

பாட்டி அவர்கள் இருந்திருந்தால் அவர்களிடம் ஏதெனும் தெளிவு ஏற்பட்டிருக்கும்.ஆனால் அவர்கூட அன்று பேசியபோது ஏதோ கூறவந்து நிறுத்தினாரே.இந்த ஆயிஷாவும் ஏதேதோ பிதற்றுகிறாள்.அப்படியெனில் இது காதாலாக இருக்குமா!!எனக்காக இஷான் அதை மறைக்கிறாரா அல்லது நானே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாய் இருக்குமோ!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.