இப்படி நினைத்தபோதே மனது ஒருவித பரவசத்தை உணர்ந்தது சிவகங்காவதிக்கு.அவளுக்கும் அவன்மீது ஒருசில கோபங்கள் இருந்ததேயன்றி எந்த சூழ்நிலையிலும் அவனை வெறுத்தது இல்லை..அதுமட்டுமன்றி எப்போது அவன் தன் கரம் பற்றி அக்னியை வலம் வந்தானோ அப்போதே இப்பிறவிக்கான அவளின் பதி அவன்தான் என்ற எண்ணத்தை தனக்குள் நிலைநிறுத்திக் கொண்டாள்.
அப்படியிருந்தும்ஏனோ அவனோடு அத்துனை இயல்பாய் வாழ்வை நகர்த்த முடியவில்லை சிவகங்காவதிக்கு.ஆனால் இன்று நடந்த அனைத்தும் சேர்ந்து அவளை சற்றே சிந்திக்க வைத்திருந்தது.இந்தகோணத்தில் சிந்திக்கும் நேரம் அவள் இதழோரம் அதுவாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
அவளாகவே ஒருமுடிவுக்கு வரும் சமயத்தில் அவளிருந்த பகுதிக்கு சற்று அருகில் இருளின் நடுவில் ஏதோ அரவம் கேட்க சற்றே தன்னை நிலைப்படுத்தியவளாய் அங்கு கவனம் பதித்தாள்.யாரென்று சரியாகத் தெரியாத போதிலும் சன்னமான இரு குரலின் ரகசியங்கள் ஓரளவு அவள் காதில் நன்றாகவே விழுந்தது.
“நமக்கு கிடைத்த ஆணைப்படி அந்த நஸீமை இந்நேரம் கொன்றிருக்க வேண்டும் ஆனா இங்கு நிலைமை தலைகீழாக உள்ளதே!”
“நீ கூறுவதும் சரிதான் இந்த நிக்காஹ் யாரும் எதிர்பாராதது.அதுவும் இந்து மதத்தை சார்ந்தவளோடு.இதனால் எத்தனை குழப்பங்கள் வரும் எனத் தெரிந்தும் அவன் அவளை நிக்காஹ் செய்திருக்கிறான் என்றால் காரணமின்றி இருக்காது”
“நீ என்ன கூறுகிறாய்?”
“நீயே சிந்தித்துப் பார் அந்த நஸீம் இத்தனை சிறந்தவனாய் விளங்குவதற்கு மிக முக்கிய காரணம் அவனுக்கு எந்தவித உறவுகள் மீதும் உணர்ச்சிகள் மீதும் நம்பிக்கை கிடையாது.அப்படியிருக்க தனக்கு லாபமேதுமின்றி இந்த பெண்ணை நிக்காஹ் செய்ய அவன் ஒன்றும் முட்டாள் இல்லை.
நேரடியாகவே கூறுகிறேன்,உனக்கு நினைவிருக்கிறதா இந்துஸ்தானத்தின் பேரரசரிடம் நஸீம் கூறியது எப்படியாவது தென்னகத்தின் அந்த பகுதியை கைப்பற்றி முகலாய ஆட்சியின் எல்லைகளை விரிவுபடுத்துவேன் என அத்துனை உறுதியாய் கூறியிருந்தானே!
தான் கூறும் சொற்களை செயல்படுத்திக் காட்டுவதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.அதுமட்டுமல்லாது அவளை கொன்று விடு என்று பேரரசர் கூறியும் அவளின் திமிருக்கு ஏற்ற பாடம் கற்பித்தே ஆகவேண்டும் என்று கூறினானே இதையனைத்தையும் வைத்துப் பார்த்தால் எதோ ஒரு யுக்தி கொண்டு அவளை பழிவாங்கக் காத்திருக்கிறான் என்பது உறுதியாய் தெரிகிறது”
“அடடா ஆம் நீ கூறுவதனைத்தும் சரி.ஆக இப்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.முதலில் அவன் அந்த பெண்ணை பழி தீர்க்கட்டும்.நாளை அவன் பேரரசரை சந்திக்கச் செல்லவிருக்கிறான்.சென்று ஒரு முடிவோடு வரட்டும்.அதன் பின் இவன் கதையை நாம் முடிக்கலாம்”
“ம்ம் அதுதான் என் எண்ணமும் சரி சரி வெகுநேரம் இங்கு நிற்க வேண்டாம்.அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருப்போம்.சென்று வா”,என்றவர்கள் சற்று தொலைவு கடந்து மறைந்து செல்வது தெரிந்தது.
சர்வமும் அடங்கிப்போய் தரையில் வேரோடி நின்றிருந்தாள் சிவகங்காவதி.என்ன நடக்கிறது என்னைச் சுற்றி இத்துனை கவனமிழந்தா இருந்திருக்கிறேன்.அப்படியென்றால் அவன் செய்த அனைத்தும் என்னை வைத்து என் பாளையத்தை முற்றுகையிடத்தானா??!அவர்கள் கூறியது அனைத்தும் சரியாய் இருக்கிறதே!
ஈசனே ஒரு நொடியில் மனம் மகிழ்ந்து குழம்பிப் போனேனே!என் கடமையை எப்படி மறந்தேன்.என் மக்களை காப்பாற்றுவதை விட எனக்கு அற்ப உணர்ச்சிகள் பெரிதாகிப் போய் விட்டதா??!நாளை பேரரசரை பார்க்கச் செல்கிறானாமே எதற்காக இங்கு நடக்கும் அனைத்தையும் தெரிவிப்பதற்காகவா?!நான் அவன்முன் என் வசமிழந்து நிற்கிறேன் கூடிய விரைவில் அவன் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறிவிடும் என்று தெரிவிப்பதற்காகவா!!!
இத்துனை யோசித்தவளால் பேசிக் கொண்டிருந்த இருவரும் அவனை கொல்லவந்ததாய் கூறியதையும் அப்படி வரும் அடிதட்டு வீரர்களுக்கு அரச ரகசியங்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்பதையும் யோசிக்க மறந்திருந்தாள்.
அவன் மீது கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது.இப்போதே சென்று அவன் விழிநோக்கி அத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒருவித ஆத்திரம் கூடஎழுந்தது இருந்தும் அதை செய்யாமல் தனக்குள்ளேயே மேலும் மேலும் குழம்பிக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை அன்றைய மனநிலையில் அப்போதே கேட்டிருந்தால் கூட தெளிவு பிறந்திருக்குமோ!?”
மறுநாள் அதிகாலையிலேயே நஸீம் பேரரசரை சந்திப்பதற்காக கிளம்பியிருந்தான்.அவன் மனம் முழுவதுமாய் ஒரு வித சோர்வு பரவியிருந்தது.சிவகங்காவதியுடனான நேற்றைய உரையாடல் இப்போது பேரரசரை சந்திக்க போகும் விடயம் அனைத்துமாய் களைத்துப் போயிருந்தான்.
பேரசர் அவனை அழைப்பது நிச்சயமாய் இந்த நிக்காஹ் பற்றி பேசுவதற்காகத் தான் இருக்கும்.என்ன கூறி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லை ஆனாலும் யாருக்காகவும் எதற்காகவும் கங்காவை விட்டுத் தர முடியாது என்பதில் தெளிவாய் இருக்கிறேன் என்றவாறே தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
“அஸ்லாம் அலேகூம் உசூர்..”