தொடர்கதை - காணாய் கண்ணே - 18 - தேவி

ப்ரித்விராஜ் கிரண் தேவியின் வார்த்தைகளைக் கேட்டுச் சற்று யோசித்தாலும், ராணாவை மீறி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கைக் கொண்டான்.
ராணா படைகளின் ஒரு பிரிவு பிகனாரில் இருந்து அவர்களின் தலைநகரமான உதய்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.
புராண காலங்களில் அற்புதரான்யா என்றழைக்கப்பட்ட மலைக் காடுகளின் வழியாக கடினமான பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
முன்னூறு மைலகளுக்கு மேலான தொலைவை அவர்கள் கடந்து கொண்டு இருந்தனர். பனிக் காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான வசந்த காலத்தில் இவர்களின் பயணம் என்பதால் படை வீரர்கள் உற்சாகமாகவே இருந்தனர்.
அதிகாலையில் ஆரம்பிக்கும் அவர்களின் பயணம் , நண்பகலில் ஏதோ ஒரு ஓடைக்கு அருகே இருக்கும் நிழலில் இளைப்பாறுவார்கள். அப்போது உணவு தயாரித்து எல்லோருக்கும் கொடுக்கப் படும். வேட்டையாடிய மிருகங்களை சமைத்துப் பரிமாறுவார்கள். கதிரவன் வெப்பம் சற்றுக் குறைய ஆரம்பிக்கும் போது மீண்டும் தொடங்கும் பயணம் முன்னிரவு வரை தொடரும். அருகில் இருக்கும் காட்டாறு அல்லது அருவியின் அருகே குடில் போட்டுத் தங்குவார். இரவு சற்று நேரம் வீரர்கள் நடுவே ஆட்டம் , பாட்டம் இருக்கும். அனைவரும் மதுவும் அருந்துவர்.
ராஜபுத்திரர்களின் இசைக் கருவிகளை வைத்து இசைக்க, வீரர்கள் அனைவரும் உற்சாகம் அடைவர். முடிவில் ராஜபுத்திர அரச குடும்ப இளையவர்களுக்கு முதல் முதல் கற்றுக் கொடுக்கும் இசைக் கருவியான “ராவணஹட்டா” என்னும் இசைக் கருவியை ராணா இசைக்க வீரர்கள் அனைவரும் அமைதியாக கேட்பார்.
அதற்கு முன் ராணாவோடு வந்திருக்கும் அரச குடும்பப் பெண்கள் பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடுவதையும் மரியாதையோடும் மகிழ்ச்சியோடும் காண்பர்.
ப்ரித்விராஜ்ஜிற்கும் உப தளபதிகளைப் போல் தனிக் குடிலே கொடுக்கப் பட்டது. வீரர்களின் கொண்டாட்டங்களில் ப்ரித்விராஜும் கலந்து கொண்டான். யாழ் கருவியில் தேர்ச்சிப் பெற்ற பிகானர் இளவரசன் , தன் திறமையைக் காட்டி வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்தான்.
தங்கள் உறவு, இருப்பிடம் விட்டு வெகு தூரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த மாதிரி சில விஷயங்களே உற்சாகம் கொடுக்கின்றன.
கொண்டாட்டங்களுக்குப் பிறகு ராணா தன்னுடைய சிம்மக் குரலால், மொஹாலயர்களின் அடிமைத் தளையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும், ராஜபுத்திரர்களின் வீரத்தையும் சிலாகித்துப் பேச, வீரர்களுக்கும் அந்த உரிமை உணர்வு எழும்பும்.
முடிவில் ரானா “ஜெய் பவானி” என்று முழங்க, வீரர்களும் உரக்க “ஜெய் பவானி “ என்று பதில் முழக்கம் எழுப்புவார்கள்.
முதல் ஜாம முடிவில் வீரன் ஒருவன் கொம்பு ஊத, கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று அனைவரும் உறங்கச் செல்வர். சுழற்சி முறையில் சில வீரர்கள் குடில்களைச் சுற்றிலும் பாதுகாப்பில் ஈடுபட , மற்றவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.
இவர்களின் பயணம் மெதுவாக அற்புதஆரண்ய மலையின் அடிவாரத்தை நான்கு நாட்களில் அடைந்தது. அன்றோடு காட்டு வழிப் பயணம் முடிவதால், அன்று சீக்கிரமே படைகளைத் தங்கச் சொன்னார் ராணா.
இன்னும் இரு நாட்களில் உதய்பூர் அடைந்து விடுவோம் என்ற எண்ணத்தில் வீரர்களின் கூச்சல் பலமாகவே இருந்தது. ராணாவின் குடில் சற்றுத் தள்ளி அமைந்து இருக்கவே பயம் இல்லாமலே அவர்களின் கூச்சம் இருந்தது. உபதளபதிகளும் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ப்ரித்விராஜ் அதை யோசனையோடு அதைப் பார்த்தான்.
கதிரவன் முற்றும் மறைந்து சந்திரன் எழுந்து வெள்ளி அருவியை பொழியும் நேரத்தில் , வீரர்களின் வழக்கமான ஆட்டங்கள் தொடங்கின.
ராணா அதில் பங்கேற்கவில்லை. அதை யாரும் கவனிக்கவில்லை. ராணா வந்த பின்பே அரச குடும்பத்தினர் வரும் வழக்கம் என்பதால், அதைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை.
ஆனால் இந்த சில நாட்களாக பார்த்துப் பழகியதால் , இளவரசியைத் தேடியது ப்ரித்விராஜ் கண்கள். தேடியது கிடைக்காமல் சற்று நேரம் யோசித்தான். பின் வீரர்கள் கூட்டத்தில் இருந்து விலகி, அரச குடும்பத்தினரின் குடில் அருகே சென்றான். அங்கே முற்றிலும் அமைதியாக இருந்தது.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் குடிலுக்குள் இருக்க, ராணா மட்டும் அவரின் மெயக்காப்பாளரோடு ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.
இளவரசி அவரை விட்டுத் தள்ளி ஒரு பாறைக்கருகே அமர்ந்து இருந்தாள். அதைக் கவனித்தாலும் ப்ரித்விராஜ் அவளின் அருகே செல்லாமல், ராணா அருகே செல்ல முற்பட்டான். இளவரசியைத் தாண்டும் போது,
“சற்றுப் பொறுங்கள் வீரரே. “ என்றாள் இளவரசி.
“ஏன் தேவி?” என்றான் ப்ரித்விராஜ்.
“காகூ , சிந்தனையில் இருக்கிறார். அவரைக் கலைக்கக் வேண்டாம்”