தொடர்கதை - சிவகங்காவதி - 15 - ஸ்ரீ
“நெய்தல் திணை – வளைப் பத்து
வளை என்னும் சங்கும், சங்கு அறுத்துச் செய்த அவளது வளையலும் பற்றிச் சொல்லும் பாடல்கள் இவை.
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்.
வரையர மகளிரின் அரியள் என்
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே-191
கடல் சங்கினை அறுத்துச் செய்த வளையலை முன்னங்கையில் அணிந்திருப்பவள். உப்பங்கழியில் பூத்த மலர்களைக் கூந்தலில் அணிந்திருப்பவள். கானல் நிலத்தில் தழைத்திருக்கும் ஞாழல் மரத் தழையால் செய்த ஆடையை மேலாடையாக உடுத்திகொண்டிருப்பவள். அவள்தான் என்னுடனேயே நிறுத்தி வைத்திருந்த என் நெஞ்சத்தை எடுத்துச் சென்று ஒளித்துக்கொண்டவள். வரையில் விளையாடும் அரமகளிர் போல அவள் எனக்குக் கிடைத்தற்கு அரியவள். – தலைவன் கூற்று.”
நஸீம் அங்கிருந்து பேரரசை சந்திக்கச் சென்று இரு தினங்கள் ஆகியிருந்த நிலையில் அன்று இரவு நடு நிசி கடந்து உறக்கம் கொண்டவளின் அருகில் ஏதோ இருப்பதாய் தோன்றிய உணர்வில் தூக்கம் கலைந்தவள் தன்னருகில் பார்த்தபோது அழகிய வெண்புறா ஒன்று அவளருகில் வந்து நின்றிருந்தது.
இந்த நேரத்தில் எங்கிருந்து வந்தது இது என்ற எண்ணத்தோடே அதை கைகளில் ஏந்தியவளுக்கு அதன் காலில் கட்டியிருந்த ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற மெதுவாய் அதையெடுத்து பிரித்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
“நஸீமிற்கு ஆபத்து.கோட்டை எல்லையில் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறான்.”,அதில் இருந்த செய்தி இவ்வளவே.வேகமாய் எழுந்து சாளரத்தின் வழியே வெளியே பார்த்தவளுக்கு யாரும் அங்கிருப்பதாய் தெரியவில்லை.
இது உண்மையா பொய்யா எதைப் பற்றியும் எண்ணும் எண்ணமற்று நின்றிருந்தாள்.சில நொடிகளில் தன்னைச் சீர்படுத்தியவள் படைத் தளபதியாருக்கு அழைப்பு விடுத்தாள்.
நஸீமோடு அவர் சென்றிருப்பதாய் செய்தி கிடைக்கப் பெற்றாள்.துரிதமாய் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி சிந்தித்தவள் படை வீரர்களில் இருவரை அழைத்து விடயத்தைக் கூறி உடனே தயாராகுமாறு கூறினாள்.
அவர்கள் தாங்களே சென்று பார்த்து வருவதாகவும் நஸீம் அவள் வருவதை விரும்ப மாட்டார் என்றும் எத்தனையோ முறை கூறியும் கேட்காமல் கிளம்பத் தயாரானாள்.
ஆயிஷாவை அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டு யாருக்கும் செய்தி தெரிய வேண்டாம் என்றும் கூறிவிட்டு தயாராகி வந்தவளைப் பார்த்து விழி விரித்தாள் ஆயிஷா.
சுரிதார் பைஜாமா உடையில் தலையில் கட்டிய டர்பனிற்குள் தலை முடியை மொத்தமாய் மறைத்தவாறு வந்தவள் வெளியே காத்திருந்த வீரனிடமிருந்து வாளை வாங்கி தன் இடையில் செருகியவாறே டர்பனின் ஒரு முனையை எடுத்து வீழிகள் மட்டும் தெரியுமாறு முகத்தின் குறுக்கே கட்டிக் கொண்டாள்.
ஆயிஷாவிம் விடைபெற்று அக்கம்பக்கத்தில் பார்த்தவாறே சற்று தூத்தில் தயார் செய்யப்பட்டிருந்த புரவியை நோக்கி வேக அடிகளை எடுத்து வைத்தாள்.குதிரையில் ஏறியவள் அதை இயக்கிய வேகத்தை கண்டு வீர்ர்களே ஒரு நொடி அதிர்ந்து அதிசயித்து போயினர் என்று தான் கூற வேண்டும்.
சில நிமிட நேரத்தில் தங்கள் சிற்றரசின் எல்லையை அடைந்தவர்கள் அங்கு மனித நடமாட்டத்திற்கோ யுத்தம் நடந்ததற்கான அறிகுறியோ இல்லாமல் இருந்ததைக் கண்டு குழம்பிப் போயினர்.இன்னும் சிறிது நேரத்தில் விடியல் தொடங்கிவிடும் என்ற நிலையில் ஓரளவு இருள் விலகத் தொடங்கியிருந்தது.
ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு எச்சரிக்க அங்கிருந்து கோட்டையை அடைவதே நல்லது என்று உணர்ந்து சில அடிகள் எடுத்து வைத்த நேரம் பத்து குதிரைகளில் முகமூடி அணிந்தவர்கள் அவர்களை சூழ்ந்தவாறு நின்றனர்.
“அரசியாரே ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் சென்றுவிடுங்கள்.”,என்று ஒரு வீரன் குரல் கொடுத்தபோதே நிலைமையை உணர்ந்தவளாய் குதிரையை ஓர் அடி திருப்ப எத்தனித்த பொழுது அவர்களிடமிருந்து வந்த அம்பு அவள் குதிரையின் காலை பதம் பார்த்திருந்தது.
குதிரை கால் மடித்து நிலை தடுமாற சிவகங்காவதி கீழே விழுந்திருந்தாள்.வீரர்கள் அவளருகில் வருவதற்குள் எதிரிகள் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். சில நொடிகளிலேயே அவ்விடம் யுத்த களமாய் மாறியிருந்தது.
பொழுது புலர்ந்த சில நிமிடங்களிலேயே நஸீம் தன் அரண்மனையை அடைந்திருந்தான்.சிவகங்காவதிக்காக அரண்மனை வாயிலிலேயே காத்திருந்த ஆயிஷா நஸீமின் வரவைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
உள் நுழையும்போதே அவளை கண்டுகொண்டவன் வீரனை அனுப்பி அவளை அழைக்க அதற்குள் அவளே ஓடி வந்திருந்தாள்.
“ஷாகென் ஷா தாங்கள்!!!!”