மனதிற்குள்ளான தீ கொழுந்துவிட்டு எரிய சற்றுத் தொலைவில் ஒருகுதிரை நிற்பதை கண்டவனுக்கு நம்பிக்கை பலப்பட்டது.தன் வேகத்தை குறைத்தவனாய் அருகேசெல்ல அந்த குதிரை இருந்த இடத்தை கடந்து சிறிது தூரத்தில் சிவகங்காவதி ரத்தத்தில் நனைந்திருந்த ஆடையோடு ஒரு மரத்தடியில் அரை மயக்கத்தில் இருந்தாள்.
வேகமாய் அவளை நோக்கி ஓடியவன் தன் மேல் அவளை சாய்த்தவாறு கன்னம் தட்டி எழுப்ப முயற்ச்சித்தான்.அதற்குள் படை வீரன் ஒருவன் குவளையில் நீர் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.
அவள் முகத்தில் லேசாய் அதை தெளித்து மீண்டுமாய் அவளை உலுக்கினான்.
“கங்கா என்னைப் பார்!!கண் விழித்துப் பார் கங்கா!!”
சற்றே விழி திறக்க முயற்ச்சித்தவளுக்கு அவன் குரலும் முகமும் மூளையை நிறைக்க கடினப்பட்டு நினைவை கொண்டு வர பாடுபட்டாள்.
“இ…ஷா…ன்..!!”என்று திணறியபடியே அழைத்தவள் தன் கரத்தை அவன் கன்னத்தில் வைத்து அழுத்த முயன்றாள்.அவனின் நலனை தெரிந்து கொள்ள விழைகிறாள் என்பது அறிந்தவனுக்கு கண்கள் அதுவாய் கலங்கியது.
“எனக்கு ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன்.உனக்கு என்னவாயிற்று என்னைப் பார்,எதாவது கூறு”
“நா..ன்..விஷமருந்தி விட்…டே..ன்..எனைக் காப்பாற்ற சர்..ப்ப்..பப.. வி..ஷ…மு..”,எனும்போதே அப்படியே அவன் மார்பில் சரிந்திருந்தாள்.
“கங்கா!!!!!!!”
அவள் என்ன கூற வந்தாளோ அதெல்லாம் நினைவில் இல்லை நஸீமிற்கு விஷமருந்தி விட்டேன் என்ற அவள் வார்த்தையிலேயே அவன் உலகம் நின்றுவிட்டதாய் உணர்ந்தான்.கற்சிலையாய் சில நொடிகள் அமர்ந்திருந்தவன் அவளை அப்படியே தன் கரங்களில் ஏந்திக் கொண்டு வந்து சமவெளியில் கிடத்தினான்.
அதற்குள் நிலைமை உணர்ந்து படைத் தளபதி மருத்துவரை அழைத்து வருவதற்கு விரைந்திருக்க நஸீமிற்கோ நரகமே கண்முன் விரிந்து கிடப்பதாய் ஒரு உணர்வு.
“இல்லை என் மடியில் உன் உயிர் பிரிய விடமாட்டேன்.ஏன் என்னை இத்துனை சித்திரவதை செய்கிறாய் எனக்கு நீ வேண்டும்.நீ மட்டுமே வேண்டும்.உனக்காக உலகயே எதிர்த்து நிற்பான் இந்த நஸீம்.
நீ இல்லையேல் மறுநொடி எதைப்பற்றியும் எண்ணாது என்னுயிரை மாய்த்துக் கொள்வேன் கங்கா..வேண்டாம் எத்துனை இன்னல்கள் கண்டுவிட்டாய் போதும் இனி நீ சிறப்பாய் வாழ வேண்டும்.என் ராஜ்ஜியத்தின் அரசியாய் எனை ஆளும் ராணியாய் நீ பல காலங்கள் வாழ வேண்டும்.”நினைக்க நினைக்க கண்ணீர் அதுவாய் சொரிந்தது.
மருத்துவரை அழைத்து வந்த ரஹீமோ அவன் கோலம் கண்டு தன்னை மறந்து போனான்.இஷான் நஸீம் பெயரைக் கேட்டால் அத்துனை நாட்டு அரசரும் கலங்கிப் போகும் மாவீரன் இன்று ஒரு பெண்ணிற்க்காக கண்ணீர் சிந்துகிறான்.எப்படியான அன்பு இது.என்ன மதிரியான நேசம் இவனுடையது.
தன் வாழ்வின் அனைத்து கடினமான நேரத்திலும் நெஞ்சு நிமிர்த்தி நின்றவனால் இன்று அப்படி இருக்க முடியவில்லையே!அல்லாஹ் இவர்களை காக்கட்டும்.”,என்று பிராத்தித்தவனாய் சற்று தூரம் சென்று தொழுக ஆரம்பித்தான்.
மருத்துவர் நாடியை பரிசோதித்து பார்த்து துடிப்பு குறைந்து வருவதை உணர்ந்தார்.இருந்தும் என்ன விஷம் என்பது தெரியாமல் செய்வதறியாது தவித்தவருக்கு அவள் கழுத்திலிருந்த சிறு குப்பி கண்ணில்பட்டது.
“உசூர் இவர்களை வற்புறுத்தி யாரும் விஷம் கொடுக்கவில்லை இங்கே பாருங்கள் அவர்கள் கழுத்திலேயே வைத்திருக்கிறார்கள்.அப்படியானால் நிச்சயம் இதற்கான மாற்று மருந்து அவர்களுக்குத் தெரியும்.தங்களிடம் ஏதேனும் கூறினார்களா?”
“தற்கொலை முயற்சியா!!!!!எனை விட்டு செல்ல துணிந்துவிட்டாளா?உயிர்விடும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டேன்.அல்லாஹ் நான் பாவம் இழைத்துவிட்டேனா!!”
“உசூர் தயைகூர்ந்து நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள் ஏதேனும் கூறினார்களா?நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் நம்மைவிட்டு போய் கொண்டிருக்கிறார்.”
இதைக் கேட்டபின்பு சற்றே தெளிந்தவனாய் அவன் அங்கு வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் நினைவுகூற முனைந்தான்.அவளின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட ஆரம்பித்தன.
“நா..ன்..விஷமருந்தி விட்…டே..ன்..எனைக் காப்பாற்ற சர்..ப்ப்..பப.. வி..ஷ…மு..”
“ஆம் ஏதோ சர்ப்ப விஷம் என ஏதோ கூற வந்தாள்.மருத்துவரே சர்ப்ப விஷம் கொண்டு என்ன செய்வது!!ஒரு வேளை சர்ப்ப விஷம் முறிக்கும் மருந்து..ஆம் அதுவாகத் தான் இருக்கும்..
சர்ப்ப விஷயத்தை முறிக்கும் மூலிகையை எடுத்து வாருங்கள்”,என்றவனின் கர்ஜனை அவ்விடம் முழுவதும் எதிரொலித்து அடங்கியது.
தொடரும்...