தொடர்கதை - காணாய் கண்ணே - 21 - தேவி
அன்றைய நிகழ்ச்சிகள் கிருத்திகாவின் மனதைச் சற்று கலவரப்படுத்தி தான் இருந்தன. என்னதான் தைரியசாலி என்றாலும் ஒருவர் இருவர் என்றால் சமாளிக்கலாம். ஏழெட்டு பேராக வந்து நின்றால் எந்தத் தற்காப்புக் கலைகளும் கை கொடுப்பது சற்று சிரமம் தான் என்று உணர்ந்து கொண்டாள். இப்படி யோசனையிலேயே இருந்ததால், பஸ் மவுண்ட் அபு வந்து சேர்ந்ததை அவள் கவனிக்கவில்லை. பஸ் நிற்கவும் திடுக்கிட்டு விழித்தவள், எல்லோரும் இறங்குவதைக் கண்டு தானும் இறங்கினாள்.
அங்கே ஒரு வியு பாயிண்ட் இருக்க, எல்லோரும் அங்கிருந்து சூரிய அஸ்தமனத்தைக் கண்டனர். அந்த அழகானக் காட்சி கிருத்தியின் மனத்திலும் அத்தனை நேரம் இருந்த சஞ்சலத்தை மாற்றியது. மெல்லிய புன்னகையோடு அந்த இயற்கை அழகில் லயித்தாள்.
கிருத்திகாவையேப் பார்த்து இருந்த ப்ரித்விக்கு அவளின் சஞ்சலமான முகபவாமும், மீண்டும் தெளிவுற்ற முகமும் பார்த்து சற்று நிம்மதி ஆனது,
அந்த குன்றின் மேல் நடந்த சம்பவங்கள் ப்ரித்விக்கும் சற்று திகைப்பாகத் தான் இருந்தது. மேலிருந்து கிருத்தியைக் கீழே அழைத்து வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பித்து இருந்தார்கள்.
இத்தனைக்கும் கிருத்தியிடமிருந்து விஷயம் அறிந்தவுடன் தன் சகாக்களை அழைத்து , அங்கிருந்த பெரிய வண்டிகளை செக் செய்யச் சொன்னான். அவர்கள் தேடுவதற்குள்ளாகவே இரு வண்டிகள் கிளம்பிச் சென்று விட்டதாகக் கூறினார்கள். விஷயம் தெரியாததால் டூரிஸ்ட் என்று நினைத்ததாகவும், வண்டி நம்பர் நோட் செய்யவில்லை என்றும் கூறினார்கள்.
உடனடியாக இன்ஸ்பெக்டருக்குத் தகவல் சொல்லியவனால், எந்த வண்டியில் வந்தார்கள் என்று சரிவர கூற இயலவில்லை. ஆனால் எல்லாமே லோக்கல் வண்டிகள் தான் இருந்ததாக அவன் சகாக்கள் கூறியதால், அதைக் கூறினான்.
கீழிருந்து ஏறும்போது டோல் வாங்கிய நினைவு வரவே, போலீசிடம் அந்த டோல் சிசி டிவி பூடேஜ் பார்க்கச் சொல்லிச் சொன்னான்.
இதை எல்லாம் பஸ் மீண்டும் கிளம்பிய பிறகிலிருந்து அவன் போனில் பேசிக் கொண்டு இருக்க, கிருத்திகாவின் கண்ணில் இது எல்லாம் படவில்லை. அப்போதே அவன் மனதில் அவள் நார்மலாக இல்லை என்று தோன்றிவிட்டது.
இதற்கு இடையில் அவள் அருகில் இருந்த ராகவி வேறு லட்சார்ச்சனை நடத்திக் கொண்டு இருக்க, அதைக் காது கொடுத்துக் கேட்கத்தான் முடியவில்லை. மற்ற பிரெண்ட்ஸ் எல்லாம்
“தாயே , காளியாத்தா. கொஞ்சம் நிப்பாட்டு. அவ என்னமோ வழி மாறிட்டா. அதுக்கு ஏன் நீ வேப்பிலை எடுத்து ஆடற. உன் வாயில் இருந்து வரும் முத்துக்கள் எல்லாம் பார்த்து நம்ம ப்ரோபாசர் அரண்டு போய் நிக்கிறார். “ என்று கூற, அதற்குப் பிறகே ராகவி சற்று அடங்கினாள் இத்தனை நடந்த போதும் கிருத்திகாவின் கவனம் இங்கே இல்லவே இல்லை.
எனவே தான் ப்ரித்வி அந்த வியு பாயிண்ட்டில் நிறுத்தி எல்லோரையும் சற்று ரிலாக்ஸ் ஆக வைத்தான். அவன் எண்ணியது சரியே போல் க்ருதிகாவோடு மற்றவர்களும் சந்தோஷப் பட்டனர்.
அடுத்து அவன் நேராக அழைத்துச் சென்றது அங்கிருந்த பிரம்ம குமாரிகள் சங்கம் என்ற தியான மையத்திற்கு அழைத்துச் சென்றான். தியானம் மற்றும் ஆன்மீகத்தை உலகெங்கும் பரப்புவதே அவர்களின் நோக்கம். கிட்டத்தட்ட என்பது ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சங்கம், மவுண்ட் அபுவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தங்கள் தலைமையிடமாக மாற்றிக் கொண்டனர். இந்த விவரங்களை எல்லாம் ப்ரித்வி எடுத்துக் கூறினான்.
தியானம் செய்ய விரும்புபவர்களை , தியான மண்டபத்தில் விட்டு விட்டு, மற்றவர்களை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றான். அங்கிருந்த வெண்மை எல்லோரையும் கவர்ந்தது.
அங்கிருந்த எல்லாப் பொருட்களுமே வெள்ளை நிறத்தில் இருந்தது. ஒரு இடத்தில் கூட கறை என்று சுட்டிக் காட்ட முடியாத வண்ணம் நன்றாகப் பராமரித்தார்கள். தியானத்தின் மூலம் நம் மன அழுக்குக் கறைகளைச் சுத்தப் படுத்தி, நம் மனமும் தூய்மையாக வைக்கலாம் என்ற கொள்கையைப் பரப்பினார்கள். தியானம் , ஆன்மீகம் என்ற மத ரீதியான விஷயங்களைத் தாண்டி அந்த சுத்மணி தம் பாராட்டப் பட வேண்டியது.
கிட்டத்தட்ட எட்டு ஆகும் போது , ஒரு விதமான சத்தம் கேட்டது. நம் தமிழ் நாட்டில் எக்காளம் என்று ஒரு இசைக் கருவி உண்டு. அதன் ஒலியை ஒத்து இருந்தது.
அந்தச் சத்தம் கேட்டதும் மவுண்ட் அபுவில் இருந்த கடைகள் எல்லாம் மூடப் பட்டு , மக்கள் எல்லோரும் அங்கிருந்த மகாதேவர் கோவிலுக்குச் சென்றனர். அதற்குப் பிறகு வெளியில் ஆள் நடமாட்டம் குறைந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்ப ஆரம்பித்தனர்.
பிரித்வியும்
“ஒகே கைஸ், நெக்ஸ்ட் நாம் தங்கப் போற ஹோட்டல்க்குப் போகலாம்” என்றவுடன் எல்லோரும் அமைதியாகச் சென்றனர். தங்குமிடம் வந்து ரெப்ரெஷ் செய்து விட்டுப் பின் எல்லோரும் சாப்பிட்டனர். அவரவருக்கு ஏற்பாடாகியிருந்த ரூமில் சென்று அடைந்தனர்.
தங்கள் அறைக்குச் செல்லத் திரும்பிய கிருத்திகாவை நிறுத்திய ப்ரித்வி,
“கிருத்திகா , சாயந்திரம் நடந்த இன்சிடென்ட்லே பயந்திட்டியா?” என்று கேட்டான்.
“பயமா அப்படி எல்லாம் எதுவும் இல்லையே? ஏன் அப்படிக் கேட்கறீங்க?”
“வழக்கமா கலகலன்னு இருப்ப. இன்னிக்கு ரொம்ப அமைதியா இருந்தியே?’