“தளபதி அவர்களே, நம் வீரர்களைப் பின் தொடர்ந்துக் கொண்டு வந்தான். இளைப்பாறும் நேரத்தில், இளவரசி தனியே செல்வதைப் பார்த்து அவரைப் பின் தொடர்ந்தான். நான் இவனைப் பின் தொடர்ந்து அருகில் வருமுன், அந்தக் கத்தியை வீசி விட்டான்” என்றுக் கூறினான்.
“யார் நீ?” என்று அவனிடம் ப்ரித்விராஜ் கேட்க, அவன் அசையாமல் இருக்கவும், தன்னுடைய வீரனுக்குக் கண்ணைக் காண்பித்தான். அவனின் கட்டளையைச் சரியாகப் புரிந்து கொண்ட வீரன், பிடிபட்டவனுடைய உடைமைகளைச் சோதித்தான்.
அதில் சில தங்கக் காசுகள் மட்டுமே இருக்க, இளவரசியின் மேல் வீசியதைப் போல் சிறு கத்திகள் மூன்று இருந்தன.
அவனைப் போக விடுமாறு வீரனைச் சொல்லவும், அவன் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டான். பிடிபட்டவன் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, தன்னுடைய வீரனிடம் ப்ரித்விராஜ் பேசிக் கொண்டு இருந்தான்.
ப்ரித்விராஜ்
“இந்த விஷயம் ரானாவிற்கோ, மற்ற வீரர்களுக்கோத் தெரிய வேண்டாம்” என்று கூற, திடுக்கிட்ட கிரண் தேவி
“இளவரசே , மகாரானாவிற்குத் தெரியாமல் இங்கிருந்து ஒரு துரும்பு கூட அசைய முடியாது” என்றுக் கூறினாள்.
முகத்தைக் கடினமாக்கிக் கொண்ட இளவரசன்,
“தேவி, அதை நான் அறியாதவனல்ல. நான் தங்களுக்கு உறுதி அளித்து இருக்கிறேன். என்னுடைய செயல்கள் அனைத்தும் ராணாவின் விருப்பத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் நான் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க மாட்டேன்” என்றுக் கூறவும், என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் விழித்தாள் இளவரசி கிரண் தேவி.
பின்
“பிடிபட்டவனை விட்டு விட்டீர்களே. அவன் யார் , நோக்கம் என்ன என்று அறிய வேண்டாமா ?” என்றாள்.
“அவனைப் பற்றி அறியத் தேவையில்லை தேவி. அவனின் வேலை நம்மை திசை திருப்புவது மட்டுமே, முக்கிய நோக்கம் ராணாவின் மீதான குறி தான்” என்று கூற, அதிர்ச்சி அடைந்த கிரண் தேவி
“எனில், காகூ தனியாக இருக்கிறாரே. அவருக்கு எதுவும் ஆபத்து நேரும் முன் நாம் அவரைக் காப்பாற்றலாம் இளவரசே” என்று கூறினாள்.
“அவசியம் இல்லை இளவரசி. தற்சமயம் வரை அங்கு பாதகமான செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படி எதுவும் நடந்தால் விஷயம் தெரிவிக்கும் வழிகள் அங்கு இருக்கும் என் வீரருக்குத் தெரியும் “
ப்ரித்விராஜின் திட்டமிடலை ஆச்சரியமாகப் பார்த்தாள் கிரண் தேவி. அப்போது அருகில் இருந்த நீண்ட மூங்கில் போன்ற கழியில் , ஒரு முனை பாம்பின் வடிவம் கொண்டு இருந்ததைப் பார்த்த ப்ரித்விராஜ் , வெகு ஆவலாக அதை எடுத்து வந்தான். அவனின் ஆவலைப் பார்த்த கிரண் தேவி
“இளவரசே, இது என்ன கழி? அதை ஏன் எடுத்தீர்கள்? நம் ஆயுதக் கிடங்கில் இது போல் ஒரு நூறு இருக்குமே ? ” என்று விசாரித்தாள்.
“இதுக் கழி அல்ல இளவரசி. நாகபாணி. “ என்றுக் கூறவும், புரியாமல் பார்த்தாள் கிரண் தேவி.
“இது நாகாபாணி. நம் ராஜபுத்திரர்களின் இசைக் கருவிகளில் முக்கியமான ஒன்று. “
“அப்படியா.. இது வரை நான் அறிந்தது கிடையாதே?
“இந்தக் கருவி மகாசிவனுக்கு மட்டுமே இசைக்கப்படும் கருவி. நம் பாரம்பரிய விழாக்களிலும் , அரச குடும்ப விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.”
பிகானர் இளவரசரின் விளக்கத்தைக் கேட்டவளுக்கு வியப்பாக இருந்தது.
“தேவி, இங்கே யாரோ சிவன் சாது இருக்கிறார்கள். அல்லது சிவன் கோவில் இருக்கிறது. அது எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும் “ என்றுக் கூறிவிட்டு, அவனின் படை வீரனை அழைத்துக் கொண்டுச் சென்றான் ப்ரித்விராஜ்.
சற்றுத் தூரம் சென்ற பிறகே,
“இளவரசி, இதற்கு மேலும் தாங்கள் தனியாக இருப்பது நல்லது அல்ல. நம் பெண்களோடு சேர்ந்து கலந்து விடுங்கள்” என்றுக் கூறினான் ப்ரித்வி.
அவனின் பேச்சை அலட்சியம் செய்ய நினைத்தவள், அசையாத அவன் பார்வையில் கீழே இறங்கினாள் கிரண் தேவி.
தொடரும்!