தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 31 - சித்ரா. வெ
இரவு முழுவது உறக்கம் வராமல் யாதவியை பற்றியே யோசித்திருந்த சாத்விக், விடிந்தது தெரிந்ததும் இனியும் உறக்கம் வராது என்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என எண்ணி தன் உடற்பயிற்சி கூடத்துற்கு சென்ற போது தான், வசந்தன் அவன் அங்கு இருப்பது தெரிந்து வந்து அவன் முன் அன்றைய நாளிதழை விசிறி எரிந்தார்.
தந்தையின் கோபத்தை அலட்சியம் செய்தவன், அந்த நாளிதழை பிரித்துப் பார்த்தான். அந்த நாளிதழ் மட்டுமல்ல, அன்றைய அனைத்து நாளிதழ்களிலும் சாத்விக்கின் செய்தி தான் பரபரப்பான செய்தியாக இருந்தது.
மணமான பெண்ணுடன் சார்மிங் ஸ்டார் சாத்விக்கிற்கு காதலா?
என்ற தலைப்பை தாங்கிய அந்த செய்தியின் விளக்கம், சாத்விக்கிற்கும் நடிகை மதுரிமாவிற்கும் காதல் என்று ரசிகர்கள் மற்றும் திரைத் துறை வட்டாரத்தில் பேச்சு ஓடிக் கொண்டிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபரின் மகளோடு சாத்விக்கிற்கு திருமணம் என சாத்விக்கின் தந்தை அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நேற்று அந்த பெண்ணுடன் சாத்விக்கிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருக்க,
திடீர் திருப்பமாக அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருக்குமே நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சாத்விக், தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லி அவளுடனான நிச்சயத்திற்கு அவர் ஏற்பாடு செய்யும் போது தான் அந்த பெண்ணுக்கு திருமணமான செய்தி தெரிந்தது. அந்த பெண்ணின் கணவனாக சொல்லப்படுபவர் தொழிலதிபர் விபாகரன், ஒரு பார்ட்டியில் நடிகை மதுரிமா அவர் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது காதலிக்கு திருமணமான விஷயம் தெரிந்ததால் சாத்விக் மதுரிமாவை மணக்க வாய்ப்பு இருக்கிறதா? விபாகரன் தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்தது ஏன்? மனைவியை விட்டு அவர் பிரிந்திருந்தாரா? இப்படி நிறைய கேள்விகளும் அவரை தொடர்கிறது என்பதாக அந்த நாளிதழில் போட்டிருந்தது.
அதை படித்தவனுக்கு தன் மீது தான் அதிக கோபம் வந்தது. அன்று தான் யாதவியிடம் என்ன என்று கேட்காமல் அவளை தொலைத்து பெரிய தவறு செய்தான் என்றால், இன்றும் யாதவியிடம் கலந்துக் கொள்ளாமல் அத்தனை பேர் முன்பு அவளை அவநிலைக்கு உள்ளாக்கியது இல்லாமல், இதோ இன்று உலகத்தின் ஒவ்வொரு மூலையில் உள்ள ரசிகர்களுமே கூட யாதவியை பற்றி பேசும்படியாக வைத்துவிட்டானே,
ஒரு பெண்ணை பார்த்து காதல் வருவது இயல்பு தான், அதுதான் இவன் வாழ்க்கையிலும் நடந்தது. ஆனால் அவள் மனதில் சலனத்தை உண்டாக்க கூடாது என்று விலகினான். ஆனால் அந்த வாழ்த்து அட்டையின் மூலம் அதே காரியத்தை செய்தும்விட்டான்.
அதுவும் அவளுக்கு அது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் அவளுக்கு அது அவளின் திருமணத்தின் போது கிடைத்திருக்கிறது. அப்போது என்ன செய்ய வேண்டுமென்பது தெரியாமல் இவனை பார்க்க கிளம்பி வந்துவிட்டாள்.
ஒருவேளை அன்றே அவள் எந்த மாதிரியான சூழ்நிலையில் கிளம்பி வந்தால் என்பதை கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தாள். அன்று அவளை காதலிக்கவில்லை என்று பொய்யுரைத்தானே, அதோடு சேர்த்து அவள் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டுமென்பதை அவளுக்கு அறிவுறித்தியிருப்பான். கூடவே அவள் இன்னொருவனின் மனைவி என்பதையறிந்து தானுமே தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பான்.
ஆனால் அன்று தந்தையின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு ஏதோ செய்ய போய், இத்தனை காலம் யாதவி மாயமாக மறைந்தது தான் மிச்சம், அவளையும் விபாகரனையும் பிரித்து வைத்திருந்திருக்கிறான். முட்டாள்தனமாக யாதவியோடு தான் இவனது வாழ்க்கை என்பதாக கனவிலேயே வாழ்ந்துவிட்டான். இதோ யாதைவியை பார்த்த பின்பும் கூட அவளிடம் பேசி அவளது திருமணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் அவளைப் பற்றி இப்படி செய்தி தாளில் வரும்படி செய்துவிட்டானே, இப்படி நினைத்து அவன் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்க,
"நேத்து பெரிய அவமானமா போச்சு, இப்போ அதை அக்கு வேறா ஆணி வேறா எல்லாம் பேப்பர்லையும் போட்டு நம்ம கௌரவத்தை கிழிகிழின்னு கிழிச்சிருக்காங்க.. இதுநாள் வரை உன்னை பத்தி போட்டதெல்லாம் உண்மை கிடையாது.. ஆனா இது அப்படியே நேத்து நடந்ததை எழுதியிருக்காங்க..
நான் எவ்வளவு எடுத்து சொன்னேன்.. இத்தனை வருஷத்தில் யாதவி வாழ்க்கையில் என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம்.. அதனால உன்னோட வாழ்க்கையை பாருன்னு சொன்னேனே கேட்டீயா? இப்படி அசிங்கப்பட்டு வந்தீயே..
அதுவும் நீ வேணாம்னு சொன்னதுக்கு பிறகு அந்த பொண்ணு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருந்திருந்தா கூட பரவாயில்ல.. ஆனா ஒருத்தன் கூட கல்யாணம் ஆனதுக்கு பிறகு, உன்னை தேடி வந்து கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொல்றான்னா அவ எந்த மாதிரி பொண்ணு ச்சே.." என்று வசந்தன் கோபத்தில் கொந்தளித்தார்.