போல் தங்களுக்கு ஏற்றவராக என்னை எண்ணுவாரா?
“நிச்சயம் இளவரசே. மகாரானாவிற்கு தங்கள் மேல் தனிப் பிரியம் உள்ளது. அவரின் இளவயதைத் தாங்கள் நினைவூட்டுவதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார். மேலும் ரானாவைப் பொறுத்த வரை அவரின் ராஜிய உரிமைக்குத் தோள் கொடுப்பவர் என்ற முறையில் தங்களை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது இளவரசே.”
“ராணி தங்களின் திருமுகத்தை மீண்டும் நான் காணலாமா? “
“இத்தனை கூறிய பிறகும் தாங்கள் என்னை அந்நியமாகப் பார்க்கிறீர்கள் இளவரசே “ என்று ராணி சற்று மனத்தாங்கலுடன் கூறவும்,
“ஏன் ராணி?” என்று குழப்பத்தோடு கேட்டான் இளவரசன்.
“இன்னும் என்னை ராணி என்றே அழைக்கிறீர்களே? நான் தங்கள் சொந்தமல்லவா?”
“மன்னித்து விடு தேவி. உன் முகத்தை இனியும் மறைக்காதே” எனவும், ராணியும் தன் முகத்தில் அணிந்து இருக்கும் துணியை விலக்கினாள்.
மீண்டும் ராணியின் முகம் பார்த்த இளவரசன், இந்த முறை அவள் அருகில் சென்று முகத்தை இரு கைகளால் ஏந்தினான்.
“கற்றைக் கூந்தலும், அழகிய நிலா முகமும், விழிகளில் குடி கொண்டு இருக்கும் வீரமும் என்னைப் பித்தம் கொள்ள வைக்கிறது தேவி” என்று கூறியவனுக்குப் பதிலாக, ராணி தன் இரு கரங்களால் அவனின் கரங்களைப் பிடித்தாள்.
“தங்களைப் போன்ற வீரரைச் சந்தித்து நேசம் கொண்டதில், இந்தப் பிறவிப் பயன் பெற்றேன் இளவரசே”
“இந்த சந்திரனின் சாட்சியாக, இயற்கை சாட்சியாக என் கரம் பிடித்த உன்னை என்றும் கைவிடமாட்டேன். இதோ ஏரிக்கு மறுகரையில் இருக்கும் உதய்பூரில் ராணா அரசராக அமர்ந்து, எம்மையும் எம் மக்களையும் காத்து ஆட்சி செய்யும் நாள் வெகு அருகில் இருக்கிறது. ராஜபுத்திர ராஜ்ஜியம் சுதந்திரமடைந்த பின் , மஹாராணாவின் சம்மதத்தோடு உன்னை மணம் செய்வேன் தேவி. இது சத்தியம்” என்றுக் கூறி அவள் கையினில் சத்தியம் செய்தான்.
அவனின் சத்தியத்தில் நெகிழ்ந்த ராணி தன் மன்னவனின் தோள் சாய்ந்தாள். இருவரும் அந்த இரவின் ஏகாந்த வேளையில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தூரத்தில் தெரிந்த உதய்பூர் அரண்மனையையே நோக்கிக் கொண்டு இருந்தனர்.
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன