ஊர்வலமாக வருகின்றது. மீண்டும் தங்களை எங்கு காண்போமா என்று எண்ணியிருந்த நேரத்தில், தங்களை என் ராஜ்யத்தில் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தங்களிடத்தில் வந்து என் மனத்தைக் கூற நினைத்தேன். ஆனால் தாங்கள் மஹாராணாவின் பிரியத்திற்குரிய புதல்வி என்றுத் தெரிந்த பின் என் எண்ணத்தை மறைத்தேன். பிகானரில் பெண்களுக்குக் கொடுத்த குறுவாள் பயிற்சிக் கண்டு பிரமித்தேன். தாங்கள் ரானாவோடு காடுகளிலும், மலைகளிலும் பயணம் செல்லும் போது தங்களின் பொறுமையும், எந்த இடத்திலும் பொருந்திக் கொள்ளும் தன்மையும் கண்டு வியந்தேன். ராணாவிடம் தங்களுக்குள்ள பிரியம், ராஜபுத்திர தேசத்தின் மேல் தாங்கள் கொண்டுள்ள பக்தி கண்டு பூரிக்கிறேன். எல்லாவற்றிகும் மேலாக மென்மையான தங்களின் பெண்மைக்குள்ளே புதைந்து கிடக்கும் வீரம் கண்டு தங்கள் மேல் மாறாக் காதல் கொண்டேன். காலம் முழுதும் என் மனைவியாக, பிகானரின் ராணியாக தங்களுக்குச் சம்மதமா தேவி?”
இளவரசரின் எண்ணம் அறிந்த ராணி கிரண் தேவியின் முகம் விண்மீன்களாய் ஜொலித்தது.
“இளவரசே, என் மனதில் உள்ள விருப்பத்தையே தாங்களும் பிரதிபலித்ததைக் கேட்டு, மிகவும் மகிழ்கிறேன். தாங்கள் கூறியது போல் நமது முதல் சந்திப்பில் யாரோ என்று எண்ணாமல், உதவி செய்த போதே தங்களின் மீது என் பார்வை சென்று விட்டது. பிகானர் இளவரசனாக எங்கள் ராஜபுத்திர தேசத்தின் உரிமைப் போராட்டத்தில் ராணாவோடு தாங்கள் இணைந்ததும் மிகவும் ஆனந்தம் அடைந்தேன். நம் பெரியவர்களின் ஆசியால் தாங்கள் எண்ணியது போல் வாழ்நாள் முழுதும் தங்களோடு இணைய முடியுமானால் அதை விட பேரின்பம் இல்லை இளவரசே.”
ராணியின் கூற்றைக் கேட்ட இளவரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவள் அருகில் வந்து இரு கைகளையும் பிடித்தவன்,
“தாங்கள் கூறுவது உண்மையா இளவரசி“ என்றான்.
“உண்மைதான். தன் பெற்றோர் மற்றும் மணாளனைத் தவிர யாரிடமும் காண்பிக்காத முகத்தை, தங்கள் விருப்பத்திற்காக தங்களிடத்தில் மட்டுமே துணி கொண்டு மறைக்காமல் விட்டதே தங்கள் மேல் உள்ள விருப்பத்தினால் தான் இளவரசே.”
“எனில், மகாராணா நம் விருப்பத்தை ஏற்பாரா தேவி”
“அதில் என்ன சந்தேகம் இளவரசே?”
“தாங்கள் ராஜபுத்திர இளவரசி. நான் சிறு ராஜ்யத்தின் மைந்தன். மகாராணா அதற்கேற்றார்