“தப்பு நடந்துடுச்சு அதை நியாயப்படுத்த காரணம் தேவையா? தண்டனைதான் தரணும்”
“இல்லை அதிதி… உனக்கு ஒரு விசயம் புரியவில்லை. இது நம்பிக்கை சார்ந்த விசயம். நான் ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை போல அவரும் என்மீது நம்பிக்கை வைத்திருக்கலாம் அல்லவா? தன் மனைவி நம்பிக்கை துரோகம் செய்திட்டாங்க அப்படின்னு உங்க அப்பா நினைத்ததையே உன் அம்மாவும் நினைத்திருக்கலாம் அல்லவா?”
“ஏன் அப்படி நினைக்கணும்?”
“ம்… சந்தேகமான ஒரு சூழலில் நம்பிக்கைத்தானே முடிவுகளை எடுக்கும். தன்னுடைய நிலையை விளக்க ஒரு சந்தர்ப்பம் தந்திருக்கலாமே என்று நினைக்கலாம் அல்லவா? அது அவர்களின் உரிமையும்கூட… ”
“என்ன இப்படி சொல்றீங்க சார்?”
“ஒரு மோசமான சூழலில் அவர்கள் மாட்டி இருக்கலாம். ஏதாவது சதி நடந்திருக்கலாம். மனம் அறிந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் எப்படி நம்பிக்கை துரோகம் ஆகும் அதிதி? நடந்த தவறை சரி செய்ய முடியாதுதான். மன்னித்திருக்கலாம்… மறந்து விடுவோம் என்று சொல்லி இருக்கலாம்… ஏன் அவருடைய மனைவியாக இருக்க வேண்டாம் என்றுகூட முடித்திருக்கலாம். உங்களுக்கு அம்மாவாகவாவது இருந்திருப்பார்களே? ஒன்றுமே பேசாமல் அவர் போனது தண்டனை அல்ல குற்ற உணர்ச்சியை தூண்டும் செயல்.”
அதிதி அவன் சொல்வதை கேட்டு வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் சொல்வது எப்படி சரியாகும்?
“நீ இப்படி யோசித்து பார் அதிதி. உன்னுடையது ஒரு அழகிய குடும்பம். பிரியமான பெற்றோர். உன் அம்மாவிற்கு உங்கள் மூவர்மீது பிரியம் அதிகம். அவர்களுக்கு வேறு யாரும் இல்லை. உன் தாத்தாவை பொறுத்தவரை தங்கமான மருமகள். ஊரிலும் நல்ல பெயர்தான் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் இவ்வாறு தவறு செய்வார்களா?”
“?”
“அவர்கள் சுயநினைவில் இல்லாமல் இருந்திருக்கலாம்… “
“நீங்கள் ஏன் இவ்வளவு சப்போர்ட் செய்றீங்க?”
“ஏனெனில் நீ உன் அம்மாவைப் போல இருக்கிறாய். உன்னிடம் ஒரு குற்றமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்ல. உன்னை நம்புகிறேன்… அதுபோலவே துளசி அத்தையையும் நம்புகிறேன்”