“நான் என் அம்மாவைபோல இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? போட்டோகூட இல்லையே? அவர்களைபற்றி உங்களிடம் யார் சொன்னார்கள்?”
“அது…. சம்பத்துதான் சொன்னான்.” துளசி அத்தையை அவனே பார்த்திருக்கிறான் என்று எப்படி சொல்வது. திடீரென்று சொன்னால் பொய் சொல்வது போலாகி விடும். அப்புறம் அவன் சொல்லும் எதிலும் அவளுக்கு நம்பிக்கை வராது.
அவள் மனதில்துளசி அத்தையைபற்றி இருக்கும் தவறான எண்ணத்தை நீக்க வேண்டும். இது அம்மாவின் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வரவைக்கும் விசயம் மட்டுமல்ல. கணவன் மனைவி என்ற உறவின்மீதும் நம்பிக்கை வர வைக்கும் விசயம் ஆகும்.
அதைவிட… அவள்மீதே அவளுக்கு நம்பிக்கை வரவைக்கும் விசயமாகவும் இது இருக்கிறது. ‘நான் எப்போதாவது ஒழுக்கம் தவறி விடுவேனோ’ என்ற பயம் அவளுக்குள் இருப்பது புற்று நோயைவிட கொடுமையானது. அவளுடைய தன்னம்பிகையை குலைக்கும் விஷக்கிருமி!.
“எனக்கு ஒரு விசயம் முக்கியம் அதிதி. உனக்கு உன்மீது நம்பிக்கை வர வேண்டும். தன்னம்பிக்கைதான் ஒருவருடைய சுதந்திரத்திற்கான பாதுகாப்பு கவசம். எந்த சூழலிலும் நான் என்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்ற எண்ணம் வர வேண்டும். அது இல்லையெனில் பொதுவெளியில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.”
“ம்… கரெக்ட் சார்…. எனக்கு புரிகிறது… இந்த பயத்தினால் நிறைய விசங்களை இழந்திருக்கிறேன். நான் ஸ்கூல்ல வாலிபால் ப்ளேயர். என்னை ஸ்டேட் லெவலிற்கு செலக்ட் செய்தார்கள். வெளி ஊருக்கு போகணும்… கண்ட நேரங்களில் பயிற்சி செய்யணும் இப்படி எல்லாம் நினைத்து அந்த சான்ஸை விட்டுட்டேன். பாதுகாப்பு பற்றிய பயம் ரொம்பவும் இருக்கிறது”
“அடுத்த ஊருக்கு போனால்தான் காலேஜ் சேர முடியும். அதுக்கு பயந்துகிட்டு ப்ளஸ் டூவோட படிப்பை நிறுத்திட்ட…”
“ஓ… என்னைபற்றி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க சார். நீங்க சொல்றது எல்லாமே சரிதான். உள்ளுக்குள்ள எப்பவும் ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு.” ஒரு பெருமூச்சு விட்டபடி அவளே தொடர்ந்தாள்.
“நீங்க ரொம்ப வித்தியாசமாக இருக்கீங்க சார். பொதுவா மனைவிதான் கணவனை புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கணும் அப்படினு சொல்வாங்க. அதுதான் அவளுடைய பொறுப்பு. மற்றபடி மனைவியை புரிந்து கொள்ள எங்க ஊர் ஆண்கள் முயற்சிப்பதே இல்லை. அது அவர்களுடைய பொறுப்பும் இல்லை. நீங்க என்னைபற்றி நிறைய பேசறீங்க…”