நீங்க எத்தனை முறை சொல்வீங்க, எனக்கு அப்படி படிக்கணும்னு முன்ன எந்த ஆசையும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தா, நீங்க தான் என்கிட்ட சரியா பேச மாட்டீங்க, ஆனா பாட்டியும் பெரிய மாமாவும் நல்லா தானே பேசுவாங்க, அவங்கக்கிட்ட கேட்க என்ன தயக்கம் எனக்கு? படிப்பு ஒரு பெரிய மலைப்பா எனக்கு தெரிஞ்சது. அதான் எனக்கு அதில் முன்ன அவ்வளவா ஆர்வம் இருந்ததில்லை. ஆனா இப்போ நீங்க எனக்கு புரிவது போல் சொல்லி கொடுக்கும்போது எனக்கு அதில் அவ்வளவு கஷ்டம் தெரியல மாமா,
அப்போ நீ படிக்கிறீயான்னு கேட்ருந்தீங்கன்னா? நான் வேண்டா வெறுப்பா தான் சரின்னு சொல்லியிருந்திருப்பேன். கடமையேன்னு படிச்சுருப்பேன். ஆனா இப்போ நான் ரொம்ப ஆர்வத்தோடு படிக்கிறேன். அதுக்கு காரணம் நீங்க தான் மாமா,
அத்தை பொண்ணா என்னை படிக்க வைக்க நீங்க முயற்சி செய்திருந்தா அது சாதாரண விஷயமா தான் இருக்கும், ஆனா உங்க பொண்டாட்டியான என்னை படிக்க வைக்க நீங்க முயற்சி செய்வது வரலாற்றில் இடம் பிடிக்கும் பார்த்துக்கோங்க," என்று அவனுக்கு சமாதானம் கூறினாள்.
அவளது பேச்சை ரசித்தப்படி அவளை பார்த்திருந்தவன், கடைசியாக அவள் கூறியதை கேட்டு, "பார்ரா என்னோட பொண்டாட்டி இப்போ ரொம்பவே முன்னேறிட்டா, என்னமா பேசறா," என்று கேலிப் போல் இருந்தாலும், உண்மையிலேயே மனம் மகிழ அவன் கூற,
"இப்போல்லாம் அம்மா நான் காலேஜ் போறேன்னு எனக்கு காம்ப்ளான் கொடுக்கிறாங்கல்ல, அதான் வளர்ந்துட்டேன் போல," என்று கண் சிமிட்டி அவளும் விளையாட்டுப் போல் கூறினாள்.
"ம்ம் முன்னமே இந்த காம்ப்ளானை உனக்கு அத்தை கலக்கி கொடுத்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்," என்று அவன் கேலியாக கூற,
"அவங்களுக்கே கொஞ்சம் காம்ப்ளான் கொடுத்து தான் வளர்க்கணும் போல, நானே கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சிக்கிட்டு வந்தாலும், அவங்க இன்னமும் பயந்துக்கிட்டு தான் இருக்காங்க, பாட்டி அவங்களுக்கு காம்ப்ளான் கொடுக்காம விட்டுட்டாங்களே," என்று வருத்தம் போல் முகத்தை வைத்து பேசினாள்.
"அடிப்பாவி, என் அத்தையையே நீ கலாய்க்கிறீயா? இரு அவங்கக்கிட்ட நீ சொன்னதை சொல்றேன்." என்று அவன் மிரட்டினான்.
அதற்கு அவள் பயப்படாதவளாக, "ம்ம் என் செல்ல மாமா இல்ல, நீங்க சொல்ல மாட்டீங்கன்னு தெரியும்," என்று கிட்டத்தட்ட அவன் மேல் விழுந்த நிலையில் அவன் கன்னத்தை பிடித்து அவள் கொஞ்சியப்படியே சொல்ல,