அனைத்து பூஜைகளிலும் முன்னே நின்றவள், ஆடு வெட்டும் போதுகூட தயங்காமல் முன்னே நின்று பார்த்தாள்.
"ஏய், பொம்புளப் புள்ளைங்க எல்லாம் அந்தப்பக்கம் போ" என்று கூவிய மருளாளிகூட விசாக்காவை ஒன்றும் சொல்லவில்லை.
அப்போது திடீரென்று விசாக்கா ஒரு குதிகுதித்து வீறிட்டாள். கண்கள் நிலைகுத்த... கைகளை தலைக்குமேல் தூக்கி முறுக்கியபடி அர்த்தமில்லாத வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தாள்.
"ஆத்தா... மலையேறிடும்மா" என்று உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்தன. சற்று பொறுத்து மருளாளியின் விபூதி வீச்சிற்கு கட்டுப்பட்டவள்போல் மூச்சு வாங்கிக் கொண்டு சாதாரணமாகிவிட்டாள்.
"அவ மேல குல சாமி வரும்" என்ற பால்ராஜண்ணாவின் குரல் மெல்லிய பெருமையை சூடியிருந்தது.
அவளுடைய கூச்சலில் பயந்து சற்று தொலைவில் ஓடி சென்றிருந்த துளசியை சகஜமாக அருகில் அழைத்துக் கொண்டாள். வினாடிக்கும் குறைவான ஒரு கால அவகாசத்தில் கண் சிமிட்டி சிரித்தாள். அவளுடைய நடிப்பிற்கு அந்த ஊரே அடிமை என்பது அப்போதுதான் புரிந்தது. வாயை மூடிக் கொண்டு அவளும் சிரிக்க, விசாக்கா.. தேவதை ஸ்தானத்தில் இருந்து, தோழமை பொறுப்பிற்கு வந்து விட்டாள். தைரிய தேவதையான அவளுடைய சொல்லுக்கு மறு சொல் இல்லை. அவளை சுற்றிப் படர்ந்திருந்த சுதந்திரம் அலாதியானது.
அப்படியே இருந்திருக்க வேண்டும்… ஆனால்,
ஒரு அரை வருட பரிட்சை விடுமுறையில், மதிய வேளையில் சலங்கை ஒலிக்க ஜன்னல் பக்கம் வந்த விசாக்கா அவளை அழைத்தாள்.
"ஏய், குட்டி எந்திரிச்சு வா".
எங்கே என்றுகூட கேட்காமல் அவளும் விசாக்காவை தொடர்ந்தாள். மார்க்கர் பங்களாவிற்குதான் அழைத்துப்போனாள். முதல் முறையாக அவள் அங்கே செல்கிறாள். அந்த வேளையில் பச்சை நிறத்தில் மோகினி வருமாம் என்று பயமுறுத்தப்பட்டிருந்த இடம். அவளும் இதை குறிப்பிட "அது ஆம்பள பசங்களத்தான் பிடிக்கும்" என்று ரகசியம் பேசி நடந்தாள்.
"எங்கே போறோம்" கேள்விக்கு பதில் தராமல் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.
ஒரு குட்டையான மரம் அருகே சென்றாள். குனிந்து தரையை காட்டினாள். அழுக்கு நிறத்தில்