மணிதாத்தாவின் வீட்டு மாடி ஜன்னலில் நீர் சுமந்த கண்களும் கலைந்த தலையுமாக பிரபாண்ணாவின் முகம் தோன்றி மறைந்தது.
மறுநாள் காலையில் மோகினி காவு கொண்ட விசாக்கா 'வாழ்வரசியாக' அலங்கார ரதமேறினாள். கடைசி நிமிடத்தில் துளசிக்கு நினைவு வந்து ஓடிப்போய் பெட்டியில் மிச்சம் வைத்திருந்த மகிழம்பூக்களை வாழ்க்கையின் கடைசி முறையாக பார்த்துவிட்டு அவளிடம் ஓப்படைத்தாள்.. இனி வாழ்வில் மகிழம்பூவை திரும்பியும் பார்க்கப் போவதேயில்லை என்று சபதம் செய்து கொண்டாள்.
அன்றைக்கு அவளுக்கு இருந்த ஒரே கேள்வி அதுதான். தைரிய தேவதையான விசாக்கா ஏன் எதிர்த்துப் போராடாமல் தன்னையே அழித்துக் கொண்டாள்? இறந்துபோனவள் ஏன் திருமணத்திற்கு முன்பே அதைச் செய்யவில்லை?
அதற்கு விடை பிற்காலத்தில் அவளுக்கு கிடைத்தது. காதல் என்றொரு வார்த்தையை அவள் உணர்ந்தபோது புரிந்தது. குடும்பத்தின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொண்டவளால் காதலை மறக்க முடியாமல் போயிருக்கும். காதலை மறந்துவிட்டு புது வாழ்க்கை வாழமுடியும் என்று நினைத்தது பிழையாகிவிட…. நினைப்பிற்கும் நடப்பிற்குமான இடைவெளியை பிற ஆடவனின் கைபட்ட அந்த ‘இரவு நிமிடங்கள்’ புரிய வைத்திருக்கும். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் விசாக்கா உயிரை விட்டு விட்டிருக்க வேண்டும்!
அது புரிந்தபின் துளசியை பொறுத்தவரை காதல் என்பது புதைமணல்போல மாட்டிக் கொண்டால் உயிர் போகும்வரை அதைவிட்டு வெளியே வரமுடியாது என்று புரிந்து கொண்டாள். அது வாழ்வதற்கான வழியில்லை என்றும் நினைத்தாள்.
"இப்ப புரியுதா.. உயிரை விட ஆசையா இருந்தால்தான் காதலிக்கணும். விசாக்கா மாதிரி நெருப்பு மூட்டிகிட்டு செத்து போக முடியாது. ரொம்ப எரியும்."
"அப்படினா தூக்கு போட்டு செத்து போகலாமா" கற்பகம் சிரித்தபடியே புடவையின் முந்தானையை கழுத்தில் சுற்றி காட்டினாள்.
"ஐயோ" என்று பதறிய துளசி அவள் கழுத்தை சுற்றியிருந்த துணியை விலக்கினாள்.
"அப்படி சொல்லக்கூடாது… சொல்லக்கூடாது… ரொம்ப வலிக்கும்" என்று கண்ணீருடன் சொன்னாள்.
அந்த துளசியைதான் விதி , பின்னாளில் தூக்கு மாட்டிக் கொண்டு இறக்க வைத்தது. அதற்கு காதலும் அது தந்த நம்பிக்கையும்… நம்பிக்கையினை சிதைத்த சந்தேகமும் காரணமாக அமைந்தது.
தொடரும்