சிறிய பூக்கள்... குவியலாக உதிர்ந்து கிடந்தன. பெரிய மரத்திற்கு சற்றும் பொருந்தாத மிகச்சிறிய பூக்கள். கையில் அள்ளி எடுத்து மூக்கின அருகே வைத்துக் காட்டினாள். "ம்...." அற்புதமான மணம் வீசியது. கடினமான நெடியில்லை... தலைவலிக்க வைக்கும் அழுத்தமும் இல்லை... இழுத்து சுவாசித்தபோது மனமெல்லாம் மகிழ்ந்தது. விசாக்காவிடம் வீசிய தேவலோக வாசமும் அதுதான் என்பதும் புரிந்தது.
"மயிலம்பூ" என்ற விசாக்கா... காய்ந்ததும் புதிதாக உதிர்ந்துமாக கலந்திருந்த குவியலில் புது பூக்களை தேடி எடுத்தாள்.
"ஏங்க்கா, கீழ இருந்து பொறுக்கற, மரத்திலேர்ந்து பறிக்கலாமே"
“ஊகும், மரத்தில கொம்பேறி மூக்கண் சுருண்டு படுத்திருக்கும். கடிச்சா அவ்ளோதான். கடிபட்டவங்க பொணம் சுடுகாட்டுக்கு போறவரை மர உச்சில காத்துக் கிட்டேயிருக்குமாம்" என்றாள். பிறகு,
"பொறுக்கி வைடி, இதோ வர்றேன்" என்று காணாமல் போனாள். நொடியில் திரும்பினாள். கூடவே பிரபாண்ணாவும் வந்திருந்தாஎ. பிரபாண்ணா, எதிர் வீட்டு மணிதாத்தா இறந்தபின் அந்த வீட்டிற்கு குடி வந்தவரின் மகன். கல்லூரியில் படிக்கிறார். வெளியூர் ஆள்தான்.
அவர்களுடன் சேர்ந்து பிரபாண்ணாவும் சேர்ந்து பொறுக்கினான். மெல்லிய குரலில் கலகலத்துக் கொண்டே பேசி , மடியில் நிறைய சேர்த்து. "எங்கிட்ட ஏதோ வாசம் வீசுதுன்னு சொன்னியே. இதுதான். தேங்காண்ணேயில போட்டு தடவிக்கோ வாசம் கமக்கும்" என்றாள்.
அவளுக்கு அந்த இடம் பிடித்துபோக மறுபடியும் சனிக்கிழமை மதியமே மார்க்கர் பங்களா விசிட் நடந்தது. விசாக்கா அவளையும் அழைத்துச் சென்று மயிலம்பூ பறித்தாள். கூடவே பிரபாண்ணாவும்தான். இது பின்னர் அடிக்கடி நடைபெற்றது.
ஒருநாள் என்றைக்குமில்லாத கலவரமாக விசாக்காவிற்கு விளக்குமாறினால் அடி விழுந்தது. பிரபாண்ணாவிற்கும் விசாக்காவிற்கும் இருந்த பழக்கம் அனைவருக்கும் தெரிந்து விட்டது.
மறுநாளுக்கும் மறுநாள் வெள்ளிக்கிழமையன்று விசாக்காவிற்கு அவசரத் திருமண ஏற்பாடு நடந்தது. மணப்பெண்ணாக, அழகாக நடந்து வராமல்… மணமேடைக்கு அவளை நாலு பேர் தூக்கித்தான் வந்தனர். யார் கைக்கும் அடங்காமல் துள்ளி குதித்தவளை அழுத்திப் பிடித்து தாலிகட்டப்பட்டது. "அதெல்லாம் பொறகு சரியாயிடும். மயிலம்பூ பொறுக்க போய் பச்சை மோகினி பிடிச்சிடுச்சாம்" என்று அக்காவின் புதுக்கணவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
சரியாக, அன்றைக்கே பின்னிரவில் " விசாலி அடிப்பாவி" என்று அத்தையின் கூச்சல் கேட்டது. அதேதான்...! விசாக்கா என்றொரு தேவதையை விறைத்துப் போய் சிலையாக கிணற்றில் இருந்து தூக்கினார்கள். அந்த நேரத்து இருளில் சூழ நின்ற கூட்டத்தை தாண்டி