தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 19 - சாகம்பரி குமார்
ஒரு முடிவோடு அந்த மலை உச்சிக்கு சென்றவன்.. சுந்தரத்தின் வாழ்க்கை அழிந்து போக தானே காரணம் என்று மனம் நொந்து போனான். அந்த இடத்தில் இருந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமும்… சலசலக்கும் அருவியும் அவனுக்குள் நடுக்கத்தை கிளப்பின. தடதடத்த இதயத்தை கையில் அழுத்தியபடி அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்தான்.
"இறைவா நான் என்ன செய்வது. உண்மையில் நான் செய்த தவறு என்ன? முன்னிக்காக துளசிக்கு செய்தேன்… பிறகு சுந்தரத்தின் நலனுக்காக உதவினேன். துளசியும் சுந்தரமும் இணைய நான் காரணம்.. எனவே அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்… ஆனால்..." கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டான்.
"வியாதி வந்து செத்து போகலாம்.. பசியில் செத்து போகலாம்… அவமானப்பட்டு செத்து போகக் கூடாது… துளசி அப்படி இறந்து போனது தப்பு… அந்த குழந்தைகள் அப்படி இறந்து போனது தப்பு… பழி சுமந்து நான் நிற்கிறேன்… நானும் செத்து போனால் அந்த பழி உண்மையாகி விடும். ஊர் முன் இந்த உண்மையை சொல்ல கன்னியம்மாவும் இல்லை… துளசியின் ஆத்மாவிற்கு கூட ஒரு நியாயம் செய்ய முடியவில்லை.. துளசி என்னை மன்னித்து விடும்மா… " ஆகாயத்தை பார்த்து மன்னிப்பு கேட்டான்.
அப்போது…
"தம்பி.. அங்க என்ன செய்றீங்க. அது ஆபத்தான இடம். கீழ விழுந்தால் உசுரு போயிடும். இங்க வாங்க." என்று ஒரு வயதான பெரியவர் கூக்குரலிட்டார்.
அவருடைய குரலை மறுக்க முடியாமல் எழுந்து அவரை நோக்கி சென்றான்.
"போன வாரம்தான் இங்கே ஒரு ஆளு தற்கொலை செய்துட்டான். இரண்டு சின்ன குழந்தைகள் வேற…"
"---"
"பொண்டாட்டியோட சண்டை.. குழந்தைகளோட வந்து குதிச்சிட்டான்."
"அவன் என் சினேகிதன்…" சொல்லும்போதே கண் கலங்கினான்.
"ஐயோ… ரொம்ப பாவமா இருந்துச்சு… "
"அதுல ஒரு பாப்பா பிழைச்சிடுச்சு…."
"இல்ல தம்பி.. ரெண்டுமே உயிர் பிழைச்சிடுச்சுங்க. ஒரு புள்ளைய ஊர்காரங்க தூக்கிட்டு போயிட்டாங்க. இன்னொன்னு கிடைக்கலை.." குரல் தாழ்த்தி தொடர்ந்தார்.
"இன்னோரு புள்ளை ஆத்துக்கு அந்த பக்கம் விழுந்து கிடந்துச்சு… ஒருத்தன் அதை தூக்கிட்டு போறதை பார்த்தேன். அவன் யாருன்னு தெரியலை… "
அவர் சொன்னதை கேட்டு திடுக்கிட்டான்.