எத்தனை மூடநம்பிக்கைகள்! திருமணத்துக்கு நிறைய நகை பெண்ணுக்கு அணிவிக்கவேண்டும் என நிர்ப்பந்திப்பதும், ஒருமுறை ஏற்பாடான திருமணம் நின்றுபோனால், அதை பெண்ணுக்கு எதிராக திருப்புவதும் எவ்வளவு மூடத்தனம்!
சிந்தித்தவாறே, இங்கர்சால் எதிரே வந்த பெண்ணின்மீது மோதிக்கொண்டார்!
அந்தப் பெண் அதை தவறாக அர்த்தம் கற்பித்துக்கொண்டு, சத்தம் போட்டு, கூட்டத்தை கூட்டிவிட்டாள்.
அவ்வளவுதான்! சுற்றியிருந்தவர்கள் கொடுத்த 'தர்ம அடி'யில் இங்கர்சால் சுருண்டு கீழே விழுந்தார்.
போதாக்குறைக்கு, சிறிது நேரத்தில் அங்குவந்த போலீஸ், அவரை எழுப்பி, பிடரியில் கைவைத்து காவல்நிலயத்துக்கு தள்ளிக் கொண்டு போனார்!
அந்தப் பெண்ணிடம் புகார் எழுதி பெற்றுக்கொண்டு, அவளை அனுப்பிவிட்டு, இங்கர்சாலை சோதனையிட்டனர்.
அவர்களிடம் சிக்கியது, ஒரு விசிட்டிங் கார்டு!
"அமைச்சர் நக்கீரன்
......................"
அதை பார்த்தவுடன், போலீஸ் பதறிப்போய், இங்கர்சாலை விடுவித்தது மட்டுமின்றி, எங்கிருந்தோ அந்த புகார் கொடுத்த பெண்ணையும் அழைத்து வந்து புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்தினர்.
அவள் மறுத்ததும், அவளை மிரட்டினர்.
" சொன்னதைக் கேளு!இல்லேன்னா, உன்னை விபசார தடுப்பு சட்டத்தின்கீழே புக் பண்ணிடுவோம்! அவ்வளவுதான் உன் வாழ்க்கையே நாசமாயிடும்."
அடுத்த கணமே, அவள் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு வெளியேறினாள்.
இங்கர்சாலுக்கு நடந்தது, ராஜோபசாரம்!
" ஏன் சார்! இதை முதலிலேயே சொல்லலே?"
" எதை?"
" நீங்க, அமைச்சருக்கு வேண்டியவர்னு........"
" நான் எதிர்பாராம அந்தப் பெண்மீது மோதியதற்கு, பாவம்! அமைச்சர் என்ன செய்வார்?"
" சார்! நீங்க ரொம்ப தமாஷா பேசறீங்க! வந்து, இங்கே நடந்ததை அமைச்சரிடம் சொல்லி எங்களை மாட்டிவிடாதீங்க! பிரமோஷன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கேன்......."