காயத்ரியும் அவள் அன்னையும் மாம்பலத்தில் உள்ள பெரிய துணிக்கடைக்கு சென்று அவளுக்கு டிரஸ் பார்க்க ஆரம்பித்தனர்...
“என்னம்மா நீ பஸ் பிடிச்சு வர நாழியாகும்ன்னு நினைச்சேன்... சீக்கிரமே வந்துட்ட...”
“நான் எங்கடி பஸ்ல வந்தேன்... அந்த மாமி என்னை அவாத்து கார்ல அனுப்பினா... என்னமோ நான் தனியா போனா தொலைஞ்சு போய்டுவேன்னு பயப்படறா போல... நானும் ரெண்டு மூணு வாட்டி பஸ்ல போறேன்னு சொல்லிப்பார்த்தேன்... ஒரே பிடியா என்னை கார்ல ஏத்தி விட்டுட்டா...”
“ஆமாம்மா எனக்கும் ஒரே கெடுபிடிதான்... காலேஜ் பெல் அடிக்கறதுக்கு முன்னாடியே டிரைவர் வந்து நிக்கறார்... ஏன் இத்தனை பயப்படறான்னு தெரியலை... சந்தியாக்கிட்ட கேட்டா, அந்த மனோஜ் ஏதானும் வம்பு பண்ணுவான்னு அலேர்ட்டா இருக்கறதா சொல்றா... ஆனா நான் அவனை கடைசியா அந்த விழாலதான் பார்த்தேன்... அதுக்கப்பறம் என் கண்ணுலேயே படலை.....”
“ஹ்ம்ம் நாம அவாத்துல இருக்கற வரை அவா சொல்றபடி கேட்டுத்தான் நடக்கணும்... நம்மால அவாளுக்கு எதுவும் தொந்தரவு வந்துடப்படாது... சரி நீ இந்த டிசைன் பாரு... நோக்கு பிடிச்சிருக்கா...”
“இந்த கலர் ஏற்கனவே இருக்கும்மா.. வேற பார்க்கலாம்...”, அடுத்த அரை மணியில் சல்வார் செக்ஷனை அலசி காயத்ரிக்கு பிடித்தார் போல் வாங்கிக்கொண்டு பில்லிங் கவுன்ட்டருக்கு வந்தனர்... இவர்கள் கடைக்குள் நுழைந்ததில் இருந்து மூன்று பேர் வேறு வேறு இடங்களில் நின்றபடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர்... கடை சிப்பந்திகள் அவர்களிடம் வந்து ஏதேனும் வேண்டுமா என்று கேட்க தாங்கள் தங்கள் குடும்பத்திற்காக காத்திருப்பதாக கூற அவர்களும் அமைதியாக சென்றனர்...
காயத்ரியின் அன்னை பில்லிங் கவுன்ட்டர் செல்ல இவர்களும் அவர்கள் நின்ற இடத்திலிருந்து விலகி வாயிற்புறம் அருகில் சென்றனர்... காயத்ரி அங்கு தொங்க விடப்பட்டிருந்த சேலைகளை பார்த்துக்கொண்டிருக்க அவள் அருகில் ஒருவன் வந்து அவளின் முதுகின் புறம் கத்தியை வைத்தான்... மற்றொருவன் அவள் அன்னை சல்வார் பணம் செலுத்தி துணியை வாங்கிக்கொண்டு திரும்ப அவர் அருகில் சென்றான்...
“சத்தம் போடாம உங்க அம்மாக்கிட்ட போ... ஏதானும் சத்தம் வந்துச்சு உங்க அம்மா இருந்த இடத்திலேயே காலி ஆகிடுவாங்க...”, அவன் மிரட்ட காயத்ரி பயந்தபடியே அவள் அன்னையின் அருகில் சென்றாள்....