தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 32 - ஜெய்
என்னதான் பிரதமரே காணொளியில் தோன்றி எச்சரிக்கை செய்திருந்தாலும் ஆங்காங்கே கொந்தளிப்புகள் இருக்கத்தான் செய்தன...
செய்தி சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு வட்ட மேஜை விவாதம் நடத்தி தாங்களாகவே தீர்ப்பு வழங்க ஆரம்பித்தனர்...
மதியம் ஆக ஆக இன்னும் நிலைமை மோசம் ஆக ஆரம்பித்தது... சக்தியின் வீடும் பரபரப்பாக இருந்தது... ஆளுங்கட்சியின் மந்திரி என்பதால் அவரின் வீட்டிலும் நிறைய பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் குவிய ஆரம்பித்தனர்...
அன்று மாலைக்குள் தவறு செய்தவர்கள் அத்தனை பேரையும் கைது செய்து அவர்கள் மேல் வழக்கு பதிவு முடிந்து மதியும், சந்திரனும் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஆரம்பித்தனர்....
“சார் நாடு முழுவதுமே கொந்தளித்து போய் இருக்கு... அதுவும் கைது செய்யப்பட்டவங்க யாரும் சாதாரண ஆட்கள் இல்லை.... எல்லாருமே சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கறவங்க... எதுக்காக இத்தனை கைதுகள்ன்னு தெரிஞ்சுக்கலாமா...”
“இது அவங்க எதிரிகளோட பழி வாங்கற நடவடிக்கையா...”
“இந்த கைதுகளுக்கு பின்னாடி அந்நிய நாட்டின் தலையீடு இருக்கறதா பேசிக்கறாங்களே உண்மையா....”
“இந்த கைதுகளுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமா....”
மதியையும், மற்றவர்களையும் பேச விடாமல் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தார்கள்...
அவர்கள் கேட்க கேட்க எந்த வித பிரதிபலிப்பும் இல்லாமல் அமர்ந்திருந்தார்கள் மதியும், சந்திரனும்...\
“என்ன சார்... நாங்க இத்தனை கேள்வி கேக்கறோம்.... பதிலே சொல்லாம பார்த்திட்டு இருக்கீங்க...”
“கேள்வி கேட்டீங்க சரி... பதில் சொல்ல அவகாசம் கொடுத்தீங்களா....”, மதி கேட்க நிருபர்கள் சிறிது அமைதியானார்கள்....
“நாட்டுல என்ன நடக்குதுன்னு அறிய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்குது... அதுலயும் பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் கடமை இருக்குது... ஒத்துக்கறேன்... அந்த ஆர்வத்துல கேள்வி கேக்கறீங்க,,, ஆனா அதுக்கான முழு பதிலை எப்பவாவது சொல்ல விட்டிருக்கீங்களா... ஒரு பதிலை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அடுத்த அடுத்த கேள்விகள்ன்னா நாம விவாத மேடைதான் நடத்திட்டு இருக்கணும், எதையும் விளக்க முடியாது...”