தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 27 - சாகம்பரி குமார்
கங்காதரன் அதிகாலையிலேயே எழுந்து விட்டார். க்ருபாவிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பு அவரை எழுப்பி விட்டது. க்ருபாவிடம் பேசி விட்டு அவர் எழுந்து வெளியே வந்தார்.
கிருபா அன்று வெளியே வரப்போவதில்லை என்றும் அவர்களை வீட்டிற்கு வரச்சொல்லி இருந்ததை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எழுந்து வெளியே வந்தார். அப்பொழுது அவருடைய அலைபேசி மீண்டும் ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். தாதிபட்டி தலைவரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது..
" இந்நேரத்தில் என்ன?" என்று அதை 'ஆன்' செய்தார்.
"கங்காதரன் ஐயா, உங்களுக்கு விஷயம் தெரியுமா? இன்று அதிகாலையிலேயே அஞ்சலை இறந்து விட்டாள்"
கங்காதரன் உடனே அதிர்ந்து விட்டார்,
" ஏன் என்ன ஆச்சு?. எப்படியானது?." என்று அவசரமாக பதற்றத்துடன் கேட்டார்.
"துளசி தூக்குப் போட்டுக் கொண்ட அதே புளியமரத்தில் அவளும் தூக்குப்போட்டு இறந்து விட்டாள். என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் உருக்கமாக ஒரு குறிப்பு மட்டும் எழுதி வைத்து விட்டு இறந்து போய்விட்டாள்" என்று தலைவர் கூறினார்.
"அதில் என்ன எழுதி இருந்தது?" என்று அவசரமாக கேட்டார்.
"துளசிக்கு செய்த பாவத்திற்காக நான் இந்த முடிவை தேடிக் கொள்கிறேன் என்ற அர்த்தத்தில் எழுதி இருந்தது. நாங்கள் போலீசுக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள்".
"இதை நான் அதிதிக்கு எப்படி தெரிவிப்பேன்?." என்று கங்காதரன் கவலையுடன் சொன்னார்.
" நீங்கள் இப்பொழுது தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் இப்பொழுது வந்தாலும் பார்க்க முடியாது. போலீஸ் தன்னுடைய சம்பிரதாயம் எல்லாம் முடித்து உடலைத் திரும்பப் பெற மாலை ஆகிவிடும். அப்பொழுது வந்தால் போதும் என்று தலைவர் தெரிவித்தார்."
"சரி நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு கங்காதரன் அலைபேசியை அணைத்தார்.
அவர் சற்று யோசித்து பார்த்தார். தலைவர் சொன்னதும் சரிதான்.