அறைக்குள் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதிதி ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தாள்.
"அக்கா நான் உங்களை அம்மா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இரவும் நீங்கள் நான் உறங்கும் பொழுது என்னை பார்க்க வந்தது எனக்கு தெரியும். என்னுடைய தலையை வருடியதும் எனக்கு தெரியும். நான் உங்களை என் அம்மாவாகவே நினைத்தேன். எத்தனையோ முறை எனக்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். அன்று காட்டில் கூட எனக்கு ஆபத்து வந்த பொழுது நீங்கள் புயலென பாய்ந்து வந்து உதவி செய்தீர்கள். உங்களுடைய உடலையும் தாண்டி மனதின் வலிமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வலிமைக்குக் காரணம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு தானே. அது போலவே எனக்கும் உங்கள் மீது அன்பு இருக்காதா. இதை நீங்கள் உணர வேண்டாமா?" என்று கேட்டாள்.
அறைக்குள் இருந்து நீண்ட மௌனமே வெளிப்பட்டது. இருந்தாலும் அதிதி தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல், அவர்கள் சிறுவயதில் விளையாடியதைப் பற்றியும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததைப் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தாள்.
"அக்கா நாம் இருவரும் பிரிந்தது ஒரு மோசமான நாளில்தான்... அன்று உங்களுடைய பிறந்த நாளுக்கான திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தோம்.. உங்களுக்கு நினைவிருக்கிறதா நான் அந்த ஒரே நாளில் அம்மா… அப்பா… உங்களை பிரிந்தேன். இன்றுவரை அந்த வேதனையில் இருந்து நான் வெளியே வரவே இல்லை".
"நான் அனைத்தையும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருந்தேன். இது கிருபா அங்கிளின் தவறு என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டேன். அம்மா மீது இருந்த களங்கம் துடைக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நேற்று சித்தி கூட்டத்தில் ஒப்புக்கொண்டார். உங்களுக்கு தெரியுமா இப்பொழுது எல்லாமே சரியாகிவிட்டது. எனக்கு ஒரே ஒரு குறை மட்டும்தான் உங்களை பார்க்க வேண்டும்" என்றாள்.