தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 10 - ரவை
மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்து முதியவர், காபி கலந்து, வசந்தாவுக்காக காத்திருந்தார்.
"என்ன தாத்தா! என்னை அனுப்பறதிலே ரொம்ப குறியாயிருக்கீங்க போல! எனக்கு முன்பே எழுந்திருந்து காபி கலந்து எனக்காக காத்திருக்கீங்களா?"
" அப்படி சொல்லாதேம்மா! நீ என்னுடன் கழித்த நேற்று ஒருநாளை மறக்கமுடியுமா? என்னுடன் பேச யாருமே இல்லாத அனாதை நான்!"
" சும்மா வேடிக்கையா சொன்னேன், தாத்தா!"
" காபி குடிம்மா! நேற்று நீ கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில், பரமன் சொன்னது! பிறகுதான் நினைவுக்கு வந்தது, நாவல் எழுத உதவியா நீ கேட்டதுக்கு, உலகாயதமா பதில் சொல்லி யிருக்கணும், இல்லையா?"
" பரவாயில்லை, தாத்தா! இப்ப சொல்லுங்க, என் பிரியமுள்ள தாத்தாவா! அறுபது வருஷத்துக்கு மேலே, இந்த உலகத்திலே சமுதாயத்திலே வாழ்ந்த அனுபவத்திலே, சொல்லுங்க!"
" நீ கேட்ட கேள்வி,
'இந்த நாட்டிலே இப்ப நடக்கிறது நல்லதா, கெட்டதா?' என்பதுதானே!
வசந்தா! இரண்டும் கலந்திருக்கும்மா! எந்த அளவுக்குன்னு கேட்டால், அதிகமா நல்லதுதான்னு உறுதியா சொல்வேன்.
எந்தக் காலத்திலேயுமே, நல்லதுதான் அதிகமா நடக்கும். ஆனா, அது பளிச்சுனு புத்திக்கு தெரியாது, உதாரணமா ஒருநாளிலே, அதாவது இருபத்துநான்கு மணி நேரத்திலே, ஒரு அரைமணி நேரம் தலைவலியிலே நான் கஷ்டப்பட்டால், நான் என்ன சொல்வேன்? இருபத்து மூணரை மணி நேரம் நல்லா இருந்ததை சொல்லமாட்டேன், அந்த அரைமணி நேர தலைவலியைத்தான் பெரிசா சொல்வேன். இது மனித சுபாவம்!
அந்த தலைவலிக்குப் பதிலா, காய்ச்சல் வந்திருக்கு இப்ப, நம்ம நாட்டுக்கு! இந்த காய்ச்சல், இப்ப சீனாவிலேயிருந்து உலகம் முழுவதுமே பரவுகிற தொற்றுநோயாக இருக்குமோ என்று பொதுவாகவே எல்லாருக்கும் ஒரு பயமிருக்கு!"
" என்ன சொல்றீங்க, தாத்தா?"
" சில வருஷமா நம்ம நாட்டிலே பெண்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியா மாறிடுச்சு! கிரிமினல்கள் ரொம்பப் பேர், அரசியல்லே புகுந்துட்டாங்க!
தெருவுக்கு தெரு தாதாக்கள்! மனசாட்சியே இல்லாம, எல்லாத் துறை அதிகாரிகளும் குற்றம் செய்கிறாங்க, நீதிமன்றங்களில் ஏழைகளுக்கு நியாயம் கிடைப்பதற்கு, பல வருஷங்கள் ஆகுது,