அவள் செல்வதை பார்த்துக் கொண்டே பிரமித்து நின்ற ஷகீலாவும் விமலாவும் மீண்டுவர, நெடுநேரமாயிற்று!
அப்போதும்கூட, அவர்களாகவே மீளவில்லை, விசும்பல் சத்தம் கேட்டது, யார், ஏன் என்று அறிய மீண்டார்கள்.
அம்மாதான், துக்கம் தாங்கமுடியாமல், விசும்பிக் கொண்டிருந்தாள், அவளை அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்!
அப்போதுதான், சகோதரிகளுக்கு தாங்கள் செய்த தவறு புரிந்தது!
பெற்றோர் காதில் விழும்படியாக, அவர்கள் மனம் புண்படும்படியாக, இத்தனை நேரம், நாலு படித்த பெண்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டது புரிந்தது!
விமலா ஓடிப்போய் அம்மாவை கட்டியணைத்து சமாதானப்படுத்தினாள்.
" அம்மா! அந்த ரெண்டு உதவாக்கரைகளும் போகட்டும், நானும் அக்காவும் உங்களை காப்பாத்தறோம், கிளம்புங்க!"
"ஏம்மா! எங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்தணும்னு தீர்மானம் பண்ணி, இன்னி முழுதும் நாடகமாடினீங்களா?
நாங்க உங்களை வரச்சொன்னோமா? பிறந்த நாளுக்கு விருந்து வைக்கச் சொன்னோமா? நாலுபேரை கூட்டிவைச்சு, பெருமையா பேச சொன்னோமா?
இப்படி எங்களை உயிரோட சித்திரவதை செஞ்சதுக்குப் பதிலா, விஷம் வைச்சு கொன்னிருக்கலாம்.
கடவுளே! இவ்வளவு அவமானத்துக்குப் பிறகும், நாங்க உயிரோட இருக்கவேண்டாம்தான்! ஆனா பெத்த மனம், அந்த ஒத்தப் புள்ளையை, சகாதேவனை, பார்த்துட்டு சாகணுன்னு துடிக்குது!"
" பிரபா! அதுக்குத்தான், சுவாமிகள், பிரசங்கத்திலே சொன்னாரே, மனம் போன போக்கிலே போகாதே, அது உன்னை வஞ்சகமா பழி வாங்கும்னு எச்சரித்தாரே, இன்னுமா மகனைப் பார்க்கிற நைப்பாசை?
வேண்டாம்மா, வேண்டாம்! இங்கே நமக்கென்ன குறைச்சல்? வேளாவேளைக்கு சாப்பாடு, இருக்க, படுக்க இடம்! எல்லாமிருக்கு!
சுவாமிகள் சொன்னாமாதிரி, நிகழ்காலத்திலே வாழ்ந்துண்டு நிம்மதியா இருப்போம்.....
நாங்க பெத்த பொண்ணுங்களா! நீங்க நாலு பேரும் நல்லா இருக்கணும்! எங்களுக்கு நேர்ந்த கதி, அவமானம், உங்க யாருக்கும் வரக்கூடாதுன்னு, ஆண்டவனை வேண்டிக்கிறோம், பெற்ற