தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 09 - சாகம்பரி குமார்
ரேச்சல் டைனிங் டேபிள் முன் அமர்ந்திருந்தாள்.
"இன்னிக்கு என்ன டிபன் மேரிம்மா?"
"இட்லியும் கார சட்னியும் இருக்கு. தோசை போடவா பாப்பா?"
"வேணாம்… நான் இதையே சாப்பிட்டுக்கறேன்" அவளுக்கு டிபன் சாப்பிடுவது ஒரு பொருட்டே இல்லை.
உப்புமா தந்தால் கூட ஹாப்பியாக சாப்பிடுவாள். அந்த அளவிற்கு மனம் நிறைந்திருந்தது. அந்த பூக்காரனின் முகம் போன போக்கை பார்க்கணுமே !. வாவ்…
ஆமாம்… அவளை எப்படி அவன் நம்பினான்?. பார்த்த நொடியிலிருந்து போர் முரசு கொட்டியாகி விட்டது… திட்டி தீர்த்தாகி விட்டது.. திடீரென்று அவளை சாட்சிக்கு அழைத்து விட்டானே.. ரேச்சல் சத்புத்திரி அல்ல என்று அவனுக்கு தெரியாது போலும். உண்மையை சொல்லும் உதவாக்கரை என்று நினைத்திருப்பானோ…
சந்தோசமாக சாப்பிட்டு முடித்து வெளியே வந்தாள். ஸ்கூட்டியை கிளப்பினாள்.
'அம்மா இன்னிக்கு சர்ச்சுக்கு போய் இருப்பாங்க. ஓகே.. நாம போய் எடியை பார்க்கணும். இந்த சந்தோசமான நேரத்தை அவனோட தான் ஸ்பெண்ட் பண்ணனும்' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்.
அன்பு இல்லத்திற்கு நேராக சென்று அவள் எடியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். அவளை கேள்வியாக பார்த்த விடுதி காப்பாளரிடம் இரண்டு மணி நேரத்தில் கொண்டு வந்து விடுகிறேன் என்று அனுமதி வாங்கி சென்றாள்.
சுற்றுலா பயணிகள் ட்ரெக்கிங் ஆரம்பிக்கும் இடத்திற்கு எடியுடன் வண்டியை ஓட்டிச் சென்றாள். அங்குதான் நிறைய கடைகள் இருக்கும்... ஐஸ்கிரீம் முதலான வகைகள் விற்கும். அங்கு சென்று இரண்டு பெரிய டூட்டி ப்ரூட்டி ஐஸ்க்ரீம் பேக்கை வாங்கிக் கொண்டு நேராக அவர்களுடைய வழக்கமான இடத்திற்கு வந்தனர். அவர்களுடைய இடம் என்றால் அவர்கள் எப்போதுமே ஏறி அமர்ந்து ஊர் கதை பேசும் அந்த மரம்தான். அதில் ஏறி அமர்ந்து கொண்டே இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தனர்.
"என்ன டேச்சல், ரொம்ப சந்தோசமா இருக்க. ஐஸ்கிரீம்களை வாங்கி தர்ற." ஒரு விரல் தொட்டு நாக்கில் ஐஸ்கிரீமின் குளுமையை பரவ விட்டபடி எடி கேட்டான்.
" இன்னைக்கு நெஜமாவே ஒரு ஹேப்பியான விஷயம் நடந்தது. அதனாலதான் நான் உனக்கு ஐஸ் கிரீம்களை வாங்கி கொடுக்கிறேன். உனக்கு என்ன வேணுமோ கேளு. நான் வாங்கி தரேன். நல்லா ஜாலியா இருக்கலாம்." என்று குதூகலித்தாள்.
"என்னாச்சு?" ஐஸ்கிரீம் ஆராய்ச்சியில் இருந்து பார்வையை நகர்த்தாமல் எடி கேட்டான்.