"டேச்சல்… மறந்துடாதே அந்த ஆள்ட்ட சாரி கேட்ரு." என்றான்.
"சரிடா… பை" அவள் கிளம்பினாள்.
'ம்… அந்த கல்பியை பிடித்து ரெண்டு வாங்கு வாங்கி.. அவளாவே அந்த தலைவர் தாத்தா கிட்ட போய் உண்மையை சொல்ல சொல்லணும்' என்று நினைத்து கல்பியை தேடி சென்றாள். ஆனால் அவள் அங்கு இல்லை… எப்படியும் அவளை சந்தித்தாக வேண்டும்… நாளைக்காவது வரணும்… என்று நினைத்து கொண்டு கிளம்பினாள்.
மதியம் உணவருந்தும் போது மேரிம்மா அவளிடம் எதையோ பேச வந்து தயங்கி நிற்பது புரிந்தது.
"என்ன விஷயம் மேரிம்மா… தயங்காமல் கேளுங்க. அம்மாகிட்ட எதுவும் சொல்லணுமா?"
"அம்மாகிட்ட சொல்ல ஒன்னும் இல்லை பாப்பா. ஆனா உன்கிட்ட தான் பேசணும்"
"சொல்லுங்கள்... என்ன விஷயம்?"
"இன்னைக்கு காலையில அந்த மாரப்பன் வந்து பக்கத்து வீட்டுப் பெரியவர் கிட்ட ஏதோ சண்டை போட்டானாம்... அவங்களோட பேரனுக்கும் கல்பனாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா சொல்லி பேசினானாம்"
மேரி என்ன சொல்ல போகிறார்கள் எனபது புரிந்து விட்டது. சத்யனுக்காக நீதி கேட்டு நெடும் பயணம் போறதுக்கு ஒரு பேரணியே கிளம்பும் போலியே…
"ஆமா சொல்லுங்க"
" அதுக்கு அந்த இடத்தில நீ இருந்ததா சொன்னாங்க."
" ஆமா"
" உன்னைகூட கூப்பிட்டு கேட்டாங்களாமே"
" ஆமா… கேட்டாங்க"
"நீ அந்த பையனுக்கு சப்போட்டா பேசி இருக்கலாம். ஆனா நீ அப்படி சொல்லாமல்…"
"மேரிம்மா… எனக்கு தெரிஞ்ச விஷயத்த நான் சொன்னேன். அவருக்காக பொய் எல்லாம் சொல்ல முடியாது."
"ஆனால்… அந்தப் பையனுக்காக பொய் கூட சொல்லி இருக்கலாம். ஏன்னா அவரு தங்கமான பையன். அவரு அவ்வளவு மனசு கஷ்டப் பட்டாராம்."
அவனுக்காக பொய் சொல்லலாமா…! ஆஹாங்… இந்த சத்யனுக்கு விசிறிகள் எண்ணிக்கை கூடிவிடும் போலயே… அவனுக்கு எதிர்ல நாம மட்டும்தான் நிற்போமோ... ! ஒருவேளை நாமதான் சரியில்லையோ...